நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக வலிந்து சொல்வாரானால், அவர் (மறுமையில்) தீட்டப்படாத இரண்டு கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) ‘தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது ‘தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில்’ யார் அவர்களது உரையாடலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறாரோ அவரது காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். எவர் (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறாரோ, அவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது. இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இதே ஹதீஸ், அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில் “எவர் தமது கனவு குறித்து பொய் சொல்கிறாரோ...” என்று வந்துள்ளது. அபூஹுரைரா (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் “எவர் உருவப்படம் வரைகிறாரோ... (காணாத) கனவைக் கண்டதாகச் சொல்கிறரோ... (மக்களின் பேச்சுகளை) செவிதாழ்த்திக் கேட்கிறாரோ...” என்று வந்துள்ளது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பில், “எவர் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ... எவர் (தாம் காணாத) கனவைக் கண்டதாகச் சொல்கிறாரோ... எவர் (உயிரினத்தின்) உருவப்படம் வரைகிறாரோ...” என்று வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தமது கண் காணாத ஒன்றை அது கண்டதாகக் கூறுவது மாபெரும் பொய்களில் ஒன்றாகும். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் பல கனவுகளைக் கண்டு அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டுவந்தேன். இறுதியில் அபூகத்தாதா (ரலி) அவர்கள் (இவ்வாறு) கூற நான் கேட்டேன்: நானும் பல கனவுகளைக் கண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுவந்தேன். இறுதியில் நபி (ஸல்) அவர்கள், “நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். ஆகவே, உங்களில் ஒருவர் தாம் விரும்புகின்ற கனவொன் றைக் கண்டால் தமது நேசத்துக்குரிய வரைத் தவிர வேறெவரிடமும் அதைப் பற்றித் தெரிவிக்க வேண்டாம். மேலும், அவர் தாம் விரும்பாததைக் கண்டால் அந்தக் கனவின் தீமையிலிருந்தும் ஷைத்தானின் தீங்கிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரி (தமது இடப் பக்கத்தில்) மூன்று தடவை துப்பட்டும். அந்தக் கனவைப் பற்றி எவரிடமும் தெரிவிக்க வேண்டாம். (அவ்வாறு செய்தால்) அது அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஒருபோதும் ஏற்படுத்திட முடியாது” என்று கூறியதைக் கேட்டேன்.61 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது (என அறிந்து), அதற்காக அல்லாஹ்வை அவர் போற்றட்டும்! அதை (தமக்கு விருப்பமானவர்களிடம் மட்டும்) தெரிவிக்கட்டும்! அதற்கு மாறாகத் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து), அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும்; அதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது. இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.62 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “(அல்லாஹ்வின் தூதரே!) நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தன. உடனே மக்கள் தங்கள் கைகளை நீட்டி அவற்றைப் பிடித்துக்கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர்களும் உண்டு; குறைவாகப் பிடித்தவர்களும் உண்டு. அப்போது ஒரு கயிறு பூமியிலிருந்து வானம்வரைப் போய்ச் சேர்ந்தது. அப்போது (அல்லாஹ்வின் தூதரே!) நீங்கள் அந்தக் கயிற்றைப் பற்றிக்கொண்டு மேலே சென்றுவிடக் கண்டேன். பிறகு மற்றொரு மனிதர் (வந்து) அதைப் பற்றிக்கொண்டு அவரும் மேலே சென்றுவிட்டார். பிறகு (மூன்றாவதாக) இன்னொரு மனிதரும் அதைப் பற்றிக்கொண்டு அதனுடன் மேலே சென்றுவிட்டார். பிறகு (நான்காவதாக) இன்னொரு மனிதர் (வந்து) அதைப் பற்றிக்கொள்ள அந்தக் கயிறு அறுந்து (விழுந்து)விட்டது. பிறகு (மீண்டும்) அக்கயிறு (வானத்துடன்) இணைக்கப்பட்டது” என்று சொன்னார். அப்போது (அங்கிருந்த) அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தக் கனவிற்கு விளக்கம் அளிக்க என்னை அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(சரி) இதற்கு விளக்கம் சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “அந்த மேகம்தான் இஸ்லாமாகும். (மேகத்திலிருந்து) சொட்டிக்கொண்டிருந்த தேனும் நெய்யும் குர்ஆனாகும். அதன் இனிமை சொட்டிக்கொண்டிருக்கிறது. குர்ஆனிலிருந்து அதிகம் பெற்றவர்களும் உள்ளனர்; குறைவாகப் பெற்றவர்களும் உள்ளனர். வானிலிருந்து பூமிவரை நீண்டு செல்லும் அந்தக் கயிறானது, நீங்கள் இருந்துவருகின்ற சத்திய (மார்க்க)மாகும். அதை நீங்கள் பற்றுகிறீர்கள். அல்லாஹ் உங்களை (வானளவிற்கு) உயர்த்திவிடுகிறான். பிறகு உங்களுக்குப் பின்னால் இன்னொரு மனிதர் அதைப் பற்றுகிறார். அதன் மூலம் அவரும் உயர்ந்துவிடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக்கொண்டு அதன் மூலம் உயர்ந்துவிடுகிறார். அதை (நான்காவதாக) மற்றொருவர் பற்றுகிறார். (ஆனால்) அது அவரோடு அறுந்துவிடுகிறது. பின்னர் அவருக்காக அக்கயிறு இணைக்கப்படுகிறது. அதன் மூலம் அவரும் உயர்ந்துவிடுகிறார்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (நான் சொன்ன விளக்கம்) சரியா? அல்லது தவறா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “சிலவற்றைச் சரியாகச் சொன்னீர்கள்; சிலவற்றைத் தவறாகச் சொல்லிவிட்டீர்கள்” என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தவறாகக் கூறியதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்க வேண்டும்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் “(இனி) சத்தியம் செய்து கேட்காதீர்கள் (நான் சொல்லப்போவதில்லை)” என்றார்கள்64 அத்தியாயம் :
சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் “உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?” என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் விளக்கமளிப்பார்கள்.) ஒரு (நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ர் தொழுகைக்குப்பின்) நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரு (வான)வர்என்னிடம் வந்து என்னை எழுப்பி, “நடங்கள்” என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரது தலைமாட்டில் ஒரு பாறாங்கல்லை வைத்துக்கொண்டு மற்றொரு மனிதர் நின்றுகொண்டிருந்தார். அவர் அந்தக் கல்லைப் படுத்திருக்கும் மனிதரின் தலையில் போட, அது அவரது தலையை நசுக்கிவிடுகிறது. பின்னர் அந்தக் கல் அடித்தவரை நோக்கி உருண்டு வர, அவர் பின்தொடர்ந்து சென்று கல்லை எடுத்துக்கொள்கிறார். மறுபடியும் அவர் வந்து சேர்வதற்குள் படுத்திருந்தவரின் தலை முன்பிருந்ததைப் போன்றே நல்ல நிலைக்கு மாறிவிடுகிறது. அப்பால் மீண்டும் வந்து முதல் தடவை செய்ததைப் போன்றே அவர் மீண்டும் செய்கிறார். நான் அவர்கள் இருவரிடமும், “அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும் “செல்லுங்கள், செல்லுங்கள்” என்று கூறினர். அப்படியே நாங்கள் சென்று, மல்லாந்து படுத்திருந்த ஒரு மனிதரை அடைந்தோம். அவரது தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒரு பக்கமாகச் சென்று கொக்கியால் அவரது முகவாயைப் பிடரிவரை கிழித்தார்; (அவ்வாறே) அவரது மூக்குத் துவாரத்தையும் கண்ணையும் பிடரிவரை கிழித்தார். -அல்லது பிளந்தார்.- பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆகிவிடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், “அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?” என்று கேட்டேன். அவ்விரு (வான)வரும் என்னிடம், “செல்லுங்கள், செல்லுங்கள்” என்றனர். அப்படியே நாங்கள் நடந்து அடுப்பு போன்று (மேல்பகுதி குறுகலாகவும் கீழ்ப்பகுதி விசாலமாகவும்) இருந்த (பொந்து) ஒன்றின் அருகில் வந்தோம். அதனுள்ளிருந்து (மனிதர்களின்) கூச்சலும் ஆரவாரமும் கேட்டது. உடனே நாங்கள் அதற்குள்ளே எட்டிப்பார்த்தோம். அங்கு ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக இருந்தார்கள். அங்கு அவர்களுக்குக் கீழேயிருந்து தீப்பிழம்பு ஒன்று (மேலே) வருகிறது. அந்தப் பிழம்பு அவர்களை அடையும்போது அவர்கள் ஓலமிடுகின்றார்கள். நான் (என்னுடன் வந்த) அவ்விரு (வான)வரிடம், “இவர்கள் யார்?” என்று கேட்டேன். அவர்கள், “செல்லுங்கள், செல்லுங்கள்” என்று என்னிடம் கூறினர். அப்படியே நாங்கள் நடந்து ஓர் ஆற்றின் அருகே சென்றோம். அது இரத்தத்தைப் போன்று சிவப்பாக இருந்தது. அந்த ஆற்றில் ஒருவன் நீந்திக்கொண்டிருந்தான். ஆற்றின் கரையில் தமக்கருகே நிறைய கற்களைக் குவித்துவைத்தபடி ஒரு மனிதர் இருக்கிறார். அந்த நீச்சல்காரன் நீந்தி நீந்தி, கற்களைக் குவித்துவைத்துக்கொண்டிருக்கும் மனிதரிடம் (கரைக்குச்) சென்று அவருக்கு முன்னால் தமது வாயைத் திறக்கின்றான். உடனே (கரையில் நிற்பவர்) அவனுடைய வாயில் கற்களைப் போடுகிறார். உடனே அவன் நீந்தியபடி (திரும்பிச்) சென்றுவிட்டு மீண்டும் அவரை நோக்கி வருகின்றான். அவரிடம் அவன் திரும்பி வரும்போதெல்லாம் தனது வாயை அவன் திறந்துகாட்ட அவர் அவன் வாயில் கற்களைக் போட்டுக்கொண்டிருக்கிறார். (அவன் திரும்பி பழைய இடத்திற்கே தள்ளப்படுகிறான். இப்படியே தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.) நான் அவ்விரு (வான)வரிடமும், “இவ்விருவரும் யார்?” என்று கேட்டேன். அவர்கள் என்னிடம், “செல்லுங்கள், செல்லுங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் அப்படியே நடந்து ஒரு அசிங்கமான தோற்றம் கொண்ட மனிதர் ஒருவரிடம் சென்றோம். அவர் நீ காணுகின்ற மனிதர்களிலேயே மிகவும் அருவருப்பான தோற்றமுடையவர் போன்று காணப்பட்டார். அங்கு அவர் தமக்கு அருகே நெருப்பை மூட்டி அதைச் சுற்றிவந்துகொண்டிருந்தார். நான் அவ்விருவரிடமும், “இவர் யார்?” என்று கேட்டேன். அவர்கள் என்னிடம், “செல்லுங்கள், செல்லுங்கள்” என்று கூறினர். அப்படியே நாங்கள் நடந்து அடர்ந்துயர்ந்த பசுமையான ஒரு பூங்காவிற்குச் சென்றோம். அதில் வசந்த காலத்தின் எல்லா வண்ணப் பூக்களும் காணப்பட்டன. அந்தப் பூங்காவிற்கு நடுவில் உயரமான மனிதர் ஒருவர் இருந்தார். வான்நோக்கி உயர்ந்திருந்ததால் அவரது தலையை என்னால் (எளிதில்) பார்க்க முடியவில்லை. அந்த மனிதரைச் சுற்றி நான் ஒருபோதும் கண்டிராத அளவிற்கு ஏராளமான சிறுவர்கள் இருந்தார்கள். நான் அவ்விருவரிடமும், “இந்த (உயரமான) மனிதர் யார்? இந்தச் சிறுவர்கள் யார்?” என்று கேட்டேன். அவர்கள் என்னிடம், “செல்லுங்கள், செல்லுங்கள்” எனக் கூறிவிடவே நடந்து ஒரு பெரும் பூங்காவுக்கு வந்தோம். அதைவிட பெரிய அழகான பூங்காவை நான் ஒருபோதும் கண்டதில்லை. (அதில் ஒரு பெரிய மரமும் இருந்தது.) அவ்விருவரும் என்னிடம், “அதில் ஏறுங்கள்” என்றனர். அப்படியே அதில் நாங்கள் ஏறி தங்கம் மற்றும் வெள்ளி செங்கற்களால் கட்டப்பட்டிருந்த ஒரு நகரத்திற்கு வந்தோம். அந்த நகரத்தின் தலைவாயிலை அடைந்து (அதைத்) திறக்குமாறு கூறினோம். உடனே எங்களுக்காக அது திறக்கப்பட்டது. நாங்கள் அதில் நுழைந்தோம். அங்கு நீ காணுகின்றவற்றிலேயே மிகவும் அழகான பாதித் தோற்றமும் நீ காணுகின்றவற்றிலேயே மிகவும் அருவருப்பான (மறு) பாதித் தோற்றமும் கொண்ட சில மனிதர்கள் எங்களை எதிர்கொண்டனர். அவர்களைப் பார்த்து (என்னுடன் வந்த) அவ்விருவரும், “செல்லுங்கள்; (சென்று) அந்த நதியில் குதியுங்கள்” என்றனர். அங்கு குறுக்கே ஒரு நதி பாய்ந்துகொண்டிருந்தது. அதன் நீர் தூய வெண்ணிறத்தில் காணப்பட்டது. ஆகவே, அவர்கள் சென்று அதில் விழுந்து (குளித்துவிட்டு) தங்களிடமிருந்து அந்த அசூசை நீங்கிவிட்டிருந்த நிலையில் மிகவும் பொலிவான வடிவத்திற்கு மாறியவர்களாக எங்களிடம் திரும்பிவந்தனர். அவ்விருவரும் என்னிடம், “இது (இந்த நகரம்)தான் ‘அத்ன்’ எனும் (நிலையான) சொர்க்கமாகும். இதுவே உங்கள் ஓய்விடமாகும்” என்றனர். நான் பார்வையை உயர்த்தி மேலே பார்த்தபோது அங்கு வெண்மேகத்தைப் போன்ற மாளிகையொன்றைக் கண்டேன். அவ்விருவரும் என்னிடம், “இது உங்கள் இருப்பிடம்” என்றனர். நான் அவர்களிடம், “உங்கள் இருவருக்கும் அல்லாஹ் வளம் வழங்கட்டும்! என்னை விடுங்கள். நான் இதில் நுழைந்துகொள்கிறேன்” என்றேன். அவ்விருவரும், “இப்போது முடியாது. நீங்கள் (மறுமையில்) அதில் நுழையத்தான் போகிறீர்கள்” என்றனர். நான் அவ்விருவரிடமும், “நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள் ளேன். நான் கண்ட இவைதான் என்ன?” என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், “(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங் களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக் கிறோம்: கல்லால் தலை நசுக்கப்பட்டுக் கொண்டிருந்த மனிதருக்கு அருகில் முதலில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் குர்ஆனை (மனனம்செய்து) எடுத்துக்கொண்டுவிட்டுப் பிறகு அதை (மறந்து)விட்டவன் ஆவான். மேலும், அவன் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றாமல் தூங்கிவிட்டவனும் ஆவான். (அடுத்து) தனது முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றைப் பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தமது வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும். அடுப்பு போன்ற கட்டடம் ஒன்றில் நிர்வாணமாகக் கிடந்த ஆண்களும் பெண்களும் விபசாரம் புரிந்த ஆண்களும் விபசாரம் புரிந்த பெண்களும் ஆவர். ஆற்றில் நீந்திக்கொண்டும் (கரையை நெருங்கும்போது வாயில்) கல் போடப்பட்டுக்கொண்டும் இருந்த ஒரு மனிதனுக்கு அருகே நீங்கள் சென்றீர் களே! அவன் வட்டி வாங்கித் தின்றவன் ஆவான். நெருப்பை மூட்டி அதைச் சுற்றிவந்துகொண்டிருந்த அருவருப்பான தோற்றத்திலிருந்த அந்த மனிதர் நரகத் தின் காவலரான மாலிக் ஆவார். அந்தப் பூங்காவிலிருந்த உயரமான மனிதர் (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்களாவார். அவர்களைச் சுற்றியிருந்த சிறுவர்கள் இயற்கை மரபில் (இஸ்லாத்தில்) இறந்துவிட்ட சிறுவர்கள் ஆவர். இதை நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, முஸ்லிம்களில் சிலர், “அல்லாஹ்வின் தூதரே! இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் (அந்தப் பூங்காவில் இருந்த குழந்தைகளில் அடங்குவார் களா?)” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(ஆம்) இணைவைப்பாளர்களுடைய குழந்தைகளும்தான்” என்று பதிலளித்தார்கள்.66 (தொடர்ந்து என்னுடன் வந்த அவ்விருவரும் கூறுகையில்,) ஒரு பாதி அழகாகவும் மறுபாதி அசிங்கமாகவும் காட்சியளித்த மக்கள், நல்லறங்களுடன் தீமைகளையும் கலந்துவிட்டவர்களாவர்; (பின்னர்) அவர்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான் (என்று கூறினர்). அத்தியாயம் :