ஜிஹாதும் போர்ப் பயண நூலும் (கிதாபுல் ஜிஹாத் வஸ் சியர்)
182 ஹதீஸ்கள் · #4519–4700
ஹதீஸ் 4649 — Sahih Muslim 32:131
وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مُحَمَّدِ بْنِ أَبَانَ الْجُعْفِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ، - يَعْنِي ابْنَ سُلَيْمَانَ - عَنْ زَكَرِيَّاءَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ الأَوْدِيِّ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي عِنْدَ الْبَيْتِ وَأَبُو جَهْلٍ وَأَصْحَابٌ لَهُ جُلُوسٌ وَقَدْ نُحِرَتْ جَزُورٌ بِالأَمْسِ فَقَالَ أَبُو جَهْلٍ أَيُّكُمْ يَقُومُ إِلَى سَلاَ جَزُورِ بَنِي فُلاَنٍ فَيَأْخُذُهُ فَيَضَعُهُ فِي كَتِفَىْ مُحَمَّدٍ إِذَا سَجَدَ فَانْبَعَثَ أَشْقَى الْقَوْمِ فَأَخَذَهُ فَلَمَّا سَجَدَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَضَعَهُ بَيْنَ كَتِفَيْهِ قَالَ فَاسْتَضْحَكُوا وَجَعَلَ بَعْضُهُمْ يَمِيلُ عَلَى بَعْضٍ وَأَنَا قَائِمٌ أَنْظُرُ . لَوْ كَانَتْ لِي مَنَعَةٌ طَرَحْتُهُ عَنْ ظَهْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَالنَّبِيُّ صلى الله عليه وسلم سَاجِدٌ مَا يَرْفَعُ رَأْسَهُ حَتَّى انْطَلَقَ إِنْسَانٌ فَأَخْبَرَ فَاطِمَةَ فَجَاءَتْ وَهِيَ جُوَيْرِيَةُ فَطَرَحَتْهُ عَنْهُ . ثُمَّ أَقْبَلَتْ عَلَيْهِمْ تَشْتِمُهُمْ فَلَمَّا قَضَى النَّبِيُّ صلى الله عليه وسلم صَلاَتَهُ رَفَعَ صَوْتَهُ ثُمَّ دَعَا عَلَيْهِمْ وَكَانَ إِذَا دَعَا دَعَا ثَلاَثًا . وَإِذَا سَأَلَ سَأَلَ ثَلاَثًا ثُمَّ قَالَ " اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ " . ثَلاَثَ مَرَّاتٍ فَلَمَّا سَمِعُوا صَوْتَهُ ذَهَبَ عَنْهُمُ الضِّحْكُ وَخَافُوا دَعْوَتَهُ ثُمَّ قَالَ " اللَّهُمَّ عَلَيْكَ بِأَبِي جَهْلِ بْنِ هِشَامٍ وَعُتْبَةَ بْنِ رَبِيعَةَ وَشَيْبَةَ بْنِ رَبِيعَةَ وَالْوَلِيدِ بْنِ عُقْبَةَ وَأُمَيَّةَ بْنِ خَلَفٍ وَعُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ " . وَذَكَرَ السَّابِعَ وَلَمْ أَحْفَظْهُ فَوَالَّذِي بَعَثَ مُحَمَّدًا صلى الله عليه وسلم بِالْحَقِّ لَقَدْ رَأَيْتُ الَّذِينَ سَمَّى صَرْعَى يَوْمَ بَدْرٍ ثُمَّ سُحِبُوا إِلَى الْقَلِيبِ قَلِيبِ بَدْرٍ . قَالَ أَبُو إِسْحَاقَ الْوَلِيدُ بْنُ عُقْبَةَ غَلَطٌ فِي هَذَا الْحَدِيثِ .
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபா அருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அபூஜஹ்லும் அவனுடைய நண்பர்களும் (அங்கு) அமர்ந்திருந்தனர். அதற்கு முந்தையநாள் (இறைச்சிக்காக மக்காவில்) ஓர் ஒட்டகம் அறுக்கப்பட்டிருந்தது. அபூஜஹ்ல், "உங்களில் யார், இன்ன குடும்பத்தார் (நேற்று) அறுத்த ஒட்டகத்தின் கருப்பையைச் சுற்றியுள்ள சவ்வுகளைக் கொண்டுவந்து முஹம்மத் (தொழுகையில்) சிரவணக்கத்திற்குச் செல்லும்போது, அவருடைய தோள்கள்மீது வைப்பவர்?" என்று கேட்டான். அங்கிருந்தவர்களில் மாபாதகன் ஒருவன் கிளம்பிச் சென்று, அதைக் கொண்டுவந்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரவணக்கம் செய்தபோது, அவர்களுடைய தோள்களுக்கு மத்தியில் அதை(த் தூக்கி) வைத்தான். அதைக் கண்டு அவனுடைய சகாக்கள் ஒருவர்மீது ஒருவர் விழுந்து சிரிக்கலாயினர். நான் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குச் சக்தி இருந்திருந்தால் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முதுகிலிருந்து அப்புறப்படுத்தியிருப்பேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரவணக்கத்திலிருந்து தலையை உயர்த்தாமல் (அப்படியே) இருந்தார்கள். இதற்கிடையில், யாரோ ஒருவர் சென்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்துவிட்டார். உடனே சிறுமியாயிருந்த ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து அதை அப்புறப்படுத்தினார். பிறகு அ(ந்தக் கய)வர்களை நோக்கிச் சென்று அவர்களை ஏசினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் உரத்த குரலில் எதிரிகளுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். -பொதுவாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தால் ஒவ்வொரு வாக்கியத்தையும் மூன்று முறை கூறுவார்கள்.- பிறகு "இறைவா! குறைஷியரை நீயே கவனித்துக்கொள்" என்று மூன்று முறை பிரார்த்தித்தார்கள். நபியவர்களது குரலைக் கேட்டதும் எதிரிகளின் சிரிப்பு அடங்கிவிட்டது. அல்லாஹ்வுடைய தூதரின் பிரார்த்தனையைக் குறித்து அவர்கள் அஞ்சினர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! அபூஜஹ்ல் பின் ஹிஷாம், உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உக்பா, உமய்யா பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத் (ஏழாவதாக மற்றொருவரையும் குறிப்பிட்டார்கள். ஆனால், அது என் நினைவில் இல்லை.) ஆகியோரை நீயே கவனித்துக்கொள்" என்று பிரார்த்தித்தார்கள். முஹம்மத் (ஸல்) அவர்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன்மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்தப் பிரார்த்தனையில்) பெயர் குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் மாண்டு கிடந்ததை நான் கண்டேன். பின்னர் அவர்கள் அனைவரும் இழுத்துச் செல்லப்பட்டு, பத்ரிலிருந்த ஒரு பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டனர். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸில் வலீத் பின் உக்பாவின் பெயர் தவறுதலாகவே இடம்பெற்றுள்ளது. (வலீத் பின் உத்பா என்பதே சரி.) அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறையில்லம் கஅபா அருகில்) தொழுகையில் சிரவணக்கத்தில் (சஜ்தாவில்) இருந்தார்கள். அவர்களைச் சுற்றி குறைஷியர் சிலர் இருந்தனர். அப்போது உக்பா பின் அபீமுஐத் என்பான் அறுக்கப்பட்ட ஓர் ஒட்டகத்தின் கருவைச் சுற்றியுள்ள சவ்வுகளுடன் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முதுகில் அதைப் போட்டான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சஜ்தாவிலிருந்து) தமது தலையை உயர்த்தவில்லை. பின்னர் (அவர்களுடைய புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து அவர்களது முதுகிலிருந்தவற்றை அப்புறப்படுத்திவிட்டு, அவ்வாறு செய்தோருக்கெதிராகப் பிரார்த்தித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! குறைஷிப் பிரமுகர்களான அபூஜஹ்ல் பின் ஹிஷாம், உத்பா பின் ரபீஆ, உக்பா பின் அபீமுஐத், ஷைபா பின் ரபீஆ, "உமய்யா பின் கலஃப்” அல்லது "உபை பின் கலஃப்” (அறிவிப்பாளர் ஷுஅபாவின் ஐயப்பாடு) ஆகியோரை நீயே கவனித்துக்கொள்" என்று பிரார்த்தித்தார்கள். அவர்கள் அனைவரும் பத்ருப் போரில் கொல்லப்பட்டு, ஒரு கிணற்றில் போடப்பட்டனர். உமய்யா அல்லது உபையின் மூட்டுகள் தனித்தனியே கழன்றுகொண்டதால் அவன் (இழுத்துச் சென்று) கிணற்றில் போடப்படவில்லை. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஏதேனும் பிரார்த்தித்தால்) மூன்று முறை கோருவதையே விரும்புவார்கள். "இறைவா! குறைஷியரை நீயே கவனித்துக்கொள். இறைவா! குறைஷியரை நீயே கவனித்துக்கொள். இறைவா! குறைஷியரை நீயே கவனித்துக்கொள்" என்று மூன்று முறை பிரார்த்தித்தார்கள்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. மேலும் வலீத் பின் உத்பா, உமய்யா பின் கலஃப் ஆகியோர் பெயரையும் குறிப்பிட்டதாகவும் இடம்பெற்றுள்ளது. அந்த அறிவிப்பிலுள்ள ஐயப்பாடு இதில் இல்லை. "ஏழாமவர் பெயரை நான் மறந்துவிட்டேன்" என்று அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாகவும் காணப்படுகிறது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவை முன்னோக்கி, குறைஷிக் குலத்தைச் சேர்ந்த அறுவருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அவர்களில் அபூஜஹ்ல், உமய்யா பின் கலஃப், உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, உக்பா பின் அபீமுஐத் ஆகியோர் இடம்பெற்றனர். (ஆறாவது நபரின் பெயர் இடம்பெறவில்லை.) அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்: அவர்கள் (அறுவரும்) சூரிய வெப்பத்தால் (உடல் உப்பி, நிறம் மாறி,) உருமாறி (பத்ருப் போர்க்களத்தில்) மாண்டு கிடந்ததை நான் கண்டேன். அன்றைய தினம் வெப்பம் நிறைந்த நாளாக இருந்தது. அத்தியாயம் :
ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு "இரண்டு இரவுகள்” அல்லது "மூன்று இரவுகள்” (இரவுத் தொழுகைக்காகக்கூட) எழவில்லை. அவர்களிடம் ஒரு பெண் வந்து, "முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டு விட்டான் என்றே நான் கருதுகிறேன். அதனால்தான் "இரண்டு இரவுகளாக" அல்லது "மூன்று இரவுகளாக” உம்மை அந்த ஷைத்தான் நெருங்கி வரவில்லை" என்று கூறினாள். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் "முற்பகலின் மீது சத்தியமாக! இருண்டுவிட்ட இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உங்கள் இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங் கொள்ளவுமில்லை" எனும் (93: 1-3)வசனங்களை அருளினான். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் ஜுன்துப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :