அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அபூபக்ரா (ரலி) அவர்கள் (தம் புதல்வரும் என் சகோதரருமான) உபைதுல்லாஹ் பின் அபீபக்ரா (ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். (அதை நானே எழுதிக் கொடுத்தேன்) -அப்போது அவர் (ஈரான் -ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்த) "சிஜிஸ்தான்" பகுதியில் நீதிபதியாக இருந்தார்.- அந்தக் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்: (மகனே!) நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்பளிக்காதே. ஏனெனில், "கோபமாக இருக்கும்போது, இருவரிடையே யாரும் தீர்ப்பளிக்கவேண்டாம்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
சஅத் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களிடம் "ஒருவருக்கு மூன்று வீடுகள் இருந்தன. அவர் அவற்றில் ஒவ்வொன்றிலும் மூன்றில் ஒரு பாகத்தைத் தர்மம் செய்வதாக இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்து விட்டார்"என்று கூறி (விளக்கம் கோரி)னேன். அதற்குக் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள், "அதை அனைத்தையும் சேர்த்து ஒரே வீட்டில் கணக்கிட்டு இறுதி விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்" என்று கூறிவிட்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் புதிதாகச் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்பட்டதாகும்"என்று கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்" என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) ஒரு மனிதர் மற்றொரு மனிதரிடமிருந்து அவருக்குச் சொந்தமான நிலம் ஒன்றை விலைக்கு வாங்கினார். நிலத்தை வாங்கிய அந்த மனிதர் தமது நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் நிலத்தை விற்றவரிடம், "என்னிடமிருந்து உன் தங்கத்தை வாங்கிக்கொள். உன்னிடமிருந்து நான் நிலத்தைத்தான் விலைக்கு வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்க வில்லை" என்று கூறினார். நிலத்தை விற்றவரோ, "நிலத்தையும் அதில் உள்ளவற்றையும் சேர்த்துத்தான் உனக்கு நான் விற்றேன். (ஆகவே, இந்தத் தங்கம் உனக்கு உரியதே)" என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் வழக்கைக் கொண்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டுச் சென்ற அந்த மனிதர், "உங்கள் இருவருக்கும் பிள்ளைகள் இருக்கின்றனரா?" என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், "எனக்கு மகன் ஒருவன் இருக்கிறான்" என்று சொன்னார். மற்றொருவர், "எனக்கு மகள் ஒருத்தி இருக்கிறாள்" என்று சொன்னார். தீர்ப்புச் சொன்னவர், "அந்தப் பையனுக்கு அந்தப் பெண்ணை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழியுங்கள். தர்மமும் செய்யுங்கள்" என்று தீர்ப்பளித்தார். அத்தியாயம் :