அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் தண்டனை நிறைவேற்றியதால் எவரேனும் இறந்துபோனால் (அதற்காக) நான் கவலை அடையப்போவதில்லை. குடிகாரனைத் தவிர! ஏனெனில், (தண்டனை வழங்கப்பட்டதால்) குடிகாரன் இறந்துபோனால் அவனுக்காக நான் உயிரீட்டுத் தொகை வழங்கிவிடுவேன். இதற்குக் காரணம், (மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குறிப்பிட்ட தண்டனை எதையும்) வழிமுறையாக்கவில்லை. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அவையில் இருந்தோம். அப்போது அவர்கள், "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிப்பதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; திருடுவதில்லை; கொல்லக் கூடாதென அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் முறையின்றிக் கொல்வதில்லை" என்று என்னிடம் உறுதிமொழி அளியுங்கள்" என்று கூறினார்கள். மேலும், "இந்த உறுதிமொழியை உங்களில் யார் நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய பிரதிபலன் இறைவனிடம் உண்டு. மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையேனும் ஒருவர் செய்து. அதற்காக அவர் (இவ்வுலகில்) தண்டிக்கப்பட்டுவிட்டால். அது அவருக்குப் பரிகாரமாகிவிடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையேனும் ஒருவர் செய்து,பின்னர் அல்லாஹ் அதை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால், அவரது விவகாரம் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படும். அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; நாடினால் அவரைத் தண்டிப்பான்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவர்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைப்பதில்லை...”” எனத்தொடங்கும் பெண்கள் தொடர்பான (60:12ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களிடம் உறுதிமொழி வாங்கியதைப் போன்றே, (ஆண்களாகிய) எங்களிடமும் "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்கமாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்யமாட்டோம்;எங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டோம்; எங்களில் சிலர் வேறுசிலர் மீது அவதூறு கூறமாட்டோம்" என உறுதிமொழி வாங்கினார்கள். மேலும், "இந்த உறுதிமொழியை உங்களில் யார் நிறைவேற்றுகின்றாரோ அவருக்குரிய பிரதிபலன் இறைவனிடம் உண்டு. தண்டனைக்குரிய குற்றத்தை உங்களில் எவரேனும் செய்து, அதற்காக அவர் தண்டிக்கப்பட்டால் அது அவருக்குப் பரிகாரமாகிவிடும். யாருடைய குற்றத்தை அல்லாஹ் மறைத்துவிட்டானோ அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; நாடினால் அவரை மன்னிப்பான். அத்தியாயம் :
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: "அல்லாஹ்வுக்கு நாங்கள் எதையும் இணை கற்பிக்கமாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; திருடமாட்டோம்;கொல்லக்கூடாதென அல்லாஹ் தடைசெய்துள்ள எந்த உயிரையும் முறையின்றி கொலை செய்யமாட்டோம்;கொள்ளையடிக்க மாட்டோம்; (இறைவனுக்கோ இறைத்தூதருக்கோ) மாறுசெய்யமாட்டோம். இவற்றின்படி நாங்கள் செயல்பட்டால் (எங்களுக்கு) சொர்க்கம் உண்டு. இவற்றில் எதையேனும் நாங்கள் செய்து, அதை அல்லாஹ் மூடி மறைத்துவிட்டால், அதைப் பற்றிய தீர்ப்பு அல்லாஹ்விடமே உள்ளது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்த தலைவர்களில் நானும் ஒருவன் ஆவேன். அத்தியாயம் :