இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடு இரவில் (தஹஜ்ஜுத்) தொழுவதற்காக எழுந்ததும் (பின்வருமாறு) பிரார்த்திப்பார்கள்: அல்லாஹும்ம, லக்கல் ஹம்து, அன்த்த நூருஸ் ஸமாவாத்தி வல்அர்ள். வ லக்கல் ஹம்து, அன்த்த கய்யாமுஸ் ஸமாவாத்தி வல்அர்ள். வ லக்கல் ஹம்து, அன்த்த ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி வமன் ஃபீஹின்ன. அன்த்தல் ஹக்கு. வ வஅதுக்கல் ஹக்கு. வ கவ்லுக்கல் ஹக்கு. வ லிகாஉக ஹக்குன். வல்ஜன்னத்து ஹக்குன். வந்நாரு ஹக்குன். வஸ்ஸாஅத்து ஹக்குன். அல்லாஹும்ம லக அஸ்லம்து, வ பிக ஆமன்து, வ அலைக தவக்கல்து, வ இலைக அனப்து, வ பிக காஸம்து, வ இலைக ஹாக்கம்து, ஃபஃக்ஃபிர்லீ மா கத்தம்து வ அக்கர்து வ அஸ்ரர்து வ அஃலன்து. அன்த இலாஹீ. லா இலாஹ இல்லா அன்த. (பொருள்: இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் மற்றும் பூமியின் ஒளி நீயே. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் மற்றும் பூமி ஆகியவற்றை நிர்வகிப்பவன் நீயே. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி மற்றும் அவற்றிலுள்ளவற்றின் இறைவன் நீயே. நீ உண்மையே. உன் வாக்குறுதி உண்மையே. உனது கூற்று உண்மையே. உன் தரிசனம் உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. மறுமை நாள் உண்மை. அல்லாஹ்வே! உனக்கே கட்டுப்பட்டேன். உன்மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன்னிடமே வழக்காடுவேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கிற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னிப்பாயாக. நீயே என் இறைவன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை.( - மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்களது அறிவிப்பும் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பும் இரண்டு சொற்றொடர்களில் தவிர வேறெதிலும் மாறுபட வில்லை. "நிர்வகிப்பவன்" என்பதைக் குறிக்க இப்னு ஜுரைஜின் அறிவிப்பில் ("கய்யாம்" என்பதற்கு பதிலாக) "கய்யிம்" எனும் சொல்லும் "நான் இரகசியமாகச் செய்த" என்பதைக் குறிக்க ("வ அஸ்ரர்து" என்பதற்கு பதிலாக) "வ மா அஸ்ரர்து" எனும் சொற்றொடரும் ஆளப்பட்டுள்ளன. இப்னு உயைனா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் சில கூடுதலான தகவல்கள் உள்ளன. மாலிக் மற்றும் இப்னு ஜுரைஜ் ஆகியோருக்குப் பல சொற்றொடர்களில் அன்னார் மாறுபடுகிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. இந்த அறிவிப்பாளர்களின் சொற்கள் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ள அறிவிப்பாளர்களின் சொற்களுக்குக் கிட்டத்தட்ட நெருக்கமாகவே அமைந்துள்ளன. அத்தியாயம் :
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையைத் துவக்கியதும் முதலில் என்ன கூறுவார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையைத் துவக்கியதும் "அல்லாஹும்ம ரப்ப ஜப்ராயீல வ மீக்காயீல வ இஸ்ராஃபீல, ஃபாத்திரஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாதத்தி, அன்த தஹ்குமு பய்ன இபாதிக ஃபீமா கானூ ஃபீஹி யக்தலிஃபூன். இஹ்தினீ லிமக்துலிஃப ஃபீஹி மினல் ஹக்கி பி இத்னிக, இன்னக தஹ்தீ மன் தஷாஉ இலா ஸிராதிம் முஸ்தகீம்" என்று கூறுவார்கள்" என்று பதிலளித்தார்கள். (பொருள்: இறைவா! (வானவர்களாகிய) ஜிப்ராயீல், மீக்காயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் அதிபதியே! வானங்கள் மற்றும் பூமியை முன்மாதிரியின்றிப் படைத்தவனே! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனே! நீ உன் அடியார்களிடையே அவர்கள் கொண்டிருந்த கருத்துவேறுபாடுகள் குறித்து (மறுமையில்) தீர்ப்பு வழங்குவாய். (பிற மக்களால்) மாற்றுக் கருத்து கொள்ளப்பட்டாலும் சத்திய (மார்க்க)த்திலேயே உன் தயவால் என்னை நிலைத்திருக்கச் செய்வாயாக! நீ நாடியவர்களை நேரான வழியில் நீயே செலுத்துகிறாய்.( இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :)
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் (தஹஜ்ஜுத்) தொழுதேன். அதில் அவர்கள் "அல்பகரா”” எனும் (இரண்டாவது) அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். நான் "அவர்கள் நூறு வசனம் முடிந்ததும் ருகூஉச் செய்துவிடுவார்கள்” என்று எண்ணினேன். ஆனால், அவர்கள் (நூறு வசனம் முடிந்த பின்னும்) தொடர்ந்து ஓதினார்கள். நான் "அ(ந்த அத்தியாயத்)தை (இரண்டாகப் பிரித்து ஓதி இரண்டாவது) ரக்அத்தில் முடித்துவிடுவார்கள்" என்று எண்ணினேன். ஆனால் (அதை முதல் ரக்அத்திலேயே) தொடர்ந்து ஓதினார்கள். நான் "அவர்கள் அந்த அத்தியாயம் முடிந்ததும் ருகூஉச் செய்துவிடுவார்கள்” என்று எண்ணினேன். அவர்கள் (அந்த அத்தியாயம் முடிந்ததும்) "அந்நிசா" எனும் (4ஆவது) அத்தியாயத்தை ஆரம்பித்து ஓதினார்கள்; பிறகு ஆலு இம்ரான் எனும் (3ஆவது) அத்தியாயத்தை ஆரம்பித்து நிறுத்தி நிதானமாக ஓதினார்கள். அவற்றில் இறைவனைத் துதிப்பது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச்செல்லும்போது (ஒதுவதை நிறுத்திவிட்டு), (சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் தூயவன் என) இறைவனைத் துதித்தார்கள்; (இறையருளை) வேண்டுவது பற்றிக்கூறும் வசனத்தைக் கடந்து செல்லும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு), (இறையருளை) வேண்டினார்கள். (இறை தண்டனையிலிருந்து) பாதுகாப்புக் கோருவது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச் செல்லும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு, இறைவனிடம்) பாதுகாப்புக் கோரினார்கள். பிறகு ருகூஉச் செய்தார்கள். அவர்கள் ருகூவில் "சுப்ஹான ரப்பியல் அழீம்" (மகத்துவ மிக்க என் இறைவன் தூயவன்) என்று கூறலானார்கள். அவர்கள் நிலையில் நின்ற அளவுக்கு ருகூஉச் செய்தார்கள். பின்னர் (ருகூவிலிருந்து நிமிரும்போது) "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்கிறான்) என்று கூறிவிட்டுக் கிட்டத்தட்ட ருகூஉச் செய்த அளவுக்கு நீண்ட நேரம் நிலையில் நின்றிருந்தார்கள். பிறகு சஜ்தாச் செய்தார்கள். அதில் "சுப்ஹான ரப்பியல் அஃலா" (மிக்க மேலான என் இறைவன் தூயவன்) என்று கூறினார்கள். அவர்கள் நிலையில் நின்றிருந்த அளவுக்கு சஜ்தாச் செய்தார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா லக்கல் ஹம்து" (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்கிறான்; எங்கள் இறைவா, உனக்கே புகழ் அனைத்தும் உரியது) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :