அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்டபோது, அவர்களுக்காக (அவர்களுடைய புதல்வி) ஹஃப்ஸா (ரலி) அவர்கள் சப்தமிட்டு அழுதார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் "ஹஃப்ஸா! "சப்தமிட்டு எவருக்காக அழப்படுகின்றதோ அவர் வேதனை செய்யப்படுகின்றார்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறியவில்லையா?" என்று கேட்டார்கள். (அவ்வாறே உமர் மீது அதிக அன்புகொண்டிருந்த) ஸுஹைப் (ரலி) அவர்கள் சப்தமிட்டு அழுதபோதும் "ஸுஹைப்! "சப்தமிட்டு எவருக்கு அழப்படுகின்றதோ அவர் வேதனை செய்யப்படுவார்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறியவில்லையா?" என்று கேட்டார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (மக்காவில்) இப்னு உமர் (ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது நாங்கள் உஸ்மான் (ரலி) அவர்களின் புதல்வியார் உம்மு அபான் அவர்களது ஜனாஸாவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் உஸ்மான் (ரலி) அவர்களுடைய புதல்வர் அம்ரும் இருந்தார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்தார்கள். அவர்களை ஒருவர் கைத்தாங்கலாக அழைத்துவந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்த இடத்தைக் காட்டினார். உடனே அவர்கள் வந்து எனக்குப் பக்கத்தில் அமர்ந்தார்கள். நான் அவர்கள் இருவருக்குமிடையே இருந்தேன். அப்போது வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது. உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள் அம்ரிடம் "நீங்கள் எழுந்து சென்று, அவர்களை அழவேண்டாம் எனத் தடை செய்யுங்கள்"என்று சைகை செய்துவிட்டு, "குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் ("இறந்தவர் இறைமறுப்பாளராக இருந்தால்" என்று குறிப்பிட்டுச் சொல்லாமல்) பொதுப்படையாக ("இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்" என்று)தான் கூறினார்கள். உடனே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நாங்கள் (ஒரு பயணத்தில்) இறைநம்பிக்கையார்களின் தலைவர் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் (மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையிலுள்ள) "பைதாஉ" எனுமிடத்தில் இருந்தபோது, அங்கு ஒரு மரத்திற்குக் கீழே யாரோ ஒருவர் தங்கியிருந்தார். (இதைக் கண்ட) உமர் (ரலி) அவர்கள் என்னிடம் "நீங்கள் சென்று அவர் யாரெனப் பார்த்து வந்து என்னிடம் கூறுங்கள்" என்றார். நான் சென்று பார்த்த போது அங்கு ஸுஹைப் (ரலி) அவர்கள் இருந்தார்கள். நான் உமர் (ரலி) அவர்களிடம் திரும்பிவந்து "நீங்கள் பார்த்துவிட்டு வந்து தெரிவிக்கச் சொன்ன அந்த மனிதர் ஸுஹைப் (ரலி)" என்றேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள் "அவரை நம்முடன் சேர்ந்து கொள்ளச் சொல்லுங்கள்!" என்றார்கள். நான் "அவருடன் அவருடைய குடும்பத்தாரும் உள்ளார்கள்" என்றேன். உமர் (ரலி) அவர்கள் "அவருடன் அவருடைய குடும்பத்தார் இருந்தாலும் சரியே! (அவரை நம்முடன் வந்து சேர்ந்துகொள்ளச் சொல்லுங்கள்)" என்றார்கள். நாங்கள் (அனைவரும் மதீனாவுக்கு) வந்து சேர்ந்து வெகுநாட்கள் ஆகியிருக்கவில்லை. அதற்குள் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் உமர் (ரலி) அவர்கள் (கத்தியால் குத்தப்பட்டு) காயமுற்றார்கள். அப்போது ஸுஹைப் (ரலி) அவர்கள் "சகோதரரே! நண்பரே!" எனக் கூறியபடியே (அழுதுகொண்டு) வந்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள் "குடும்பத்தாரின் அழுகைகளில் சிலவற்றால் இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை "நீர் அறியவில்லையா?" அல்லது "நீர் செவியுறவில்லையா?" என்று கேட்டார்கள். ("நீர் அறியவும் கேள்விப்படவுமில்லையா?" என்று கேட்டதாக அய்யூப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.) இப்னு உமர் (ரலி) அவர்கள் (குறிப்பிட்டுக் கூறாமல்) பொதுவாகச் சொல்லியுள்ளார்கள். உமர் (ரலி) அவர்களோ "குடும்பத்தாரின் சில அழுகையால்" என்று (குறிப்பாக்கிக்) கூறினார்கள். (அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறுகின்றார்கள்:) உடனே நான் எழுந்து ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன்; இப்னு உமர் (ரலி) அவர்கள் சொன்ன ஹதீஸை அவர்களிடம் தெரிவித்தேன். ஆயிஷா (ரலி) அவர்கள், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! "எவரோ ஒருவர் அழுவதன் காரணமாக இறந்துவிட்ட (இறைநம்பிக்கையாளரான) மனிதர் வேதனை செய்யப்படுகிறார்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருபோதும் கூறவில்லை. மாறாக "குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறைமறுப்பாளனுக்கு அல்லாஹ் இன்னும் வேதனையை அதிகப்படுத்துகின்றான்" என்றே கூறினார்கள். அல்லாஹ்வே சிரிக்கவும் வைக்கிறான்; அழவும் வைக்கிறான் (53:43).ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது (35:18)" என்று கூறினார்கள். காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: உமர் (ரலி) மற்றும் இப்னு உமர் (ரலி) ஆகியோரின் கூற்று ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எட்டியபோது "நீங்கள் பொய்யர்களோ பொய்ப்பிக்கப்பட்டவர்களோ அல்லாத இருவர் சொன்ன ஹதீஸை என்னிடம் கூறுகின்றீர்கள். ஆயினும், செவி (சில நேரங்களில்) தவறாக விளங்கிவிடுகிறது" என்று கூறினார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மக்காவில் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுடைய புதல்வியார் இறந்தபோது, நாங்கள் ஜனாஸாவில் கலந்துகொள்வதற்காகச் சென்றோம். அங்கு இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரும் வந்திருந்தனர். நான் அவர்கள் இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்தேன். (முதலில்) அவர்களில் ஒருவருக்கு அருகில் நான் அமர்ந்தேன். பிறகு மற்றொருவர் வந்து எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் தமக்கு எதிரே அமர்ந்திருந்த உஸ்மான் (ரலி) அவர்களுடைய புதல்வர் அம்ர் அவர்களிடம் "நீங்கள் (சப்தமிட்டு) அழுபவர்களைத் தடுக்கக் கூடாதா? "இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் (சப்தமிட்டு) அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்றார்கள். உடனே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "உமர் (ரலி) அவர்கள் இதே போன்ற சில ஹதீஸ்களைக் கூறியிருக்கிறார்கள். நான் உமர் (ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தேன். நாங்கள் "பைதாஉ" எனும் இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு மரத்தின் நிழலில் ஒரு வாகனக் கூட்டத்தைக் கண்டோம். அப்போது "நீங்கள் சென்று இந்த வாகனக் கூட்டத்தார் யார் எனப் பார்த்து வாருங்கள்!" என உமர் (ரலி) அவர்கள் கூறி (என்னை அனுப்பி)னார்கள். நான் (அங்கு சென்று) பார்த்தபோது அங்கே ஸுஹைப் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அதை நான் உமர் (ரலி) அவர்களிடம் கூறினேன். "அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்" என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் மீண்டும் ஸுஹைப் (ரலி) அவர்களிடம் சென்று "நீங்கள் புறப்படுங்கள்;இறைநம்பிக்கையாளர்களின் தலைவருடன் சேர்ந்துகொள்ளுங்கள்" என்று கூறினேன். பின்னர் (சிறிது நாட்களுக்குப் பின்) உமர் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்டபோது அவர்களிடம் "சகோதரரே! நண்பரே!" எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி) அவர்கள் (வீட்டினுள்) நுழைந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் "ஸுஹைபே! எனக்காகவா நீங்கள் அழுகிறீர்கள்? "இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழும் சில அழுகையின் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் அல்லவா?" என்றார்கள். உமர் (ரலி) அவர்கள் இறந்தபோது, (அவர்கள் இறப்பதற்கு முன் கூறிய) அந்தச் செய்தியை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ் உமர் (ரலி) அவர்களுக்கு அருள்புரிவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! "(எவரோ) ஒருவர் அழுவதன் காரணமாக இறைநம்பிக்கையாளரை அல்லாஹ் வேதனை செய்வான்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக, "குடும்பத்தார் சப்தமிட்டு அழுவதன் காரணத்தால் இறைமறுப்பாளருக்கு அல்லாஹ் வேதனையை அதிகப்படுத்துகிறான்" என்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்"என்று சொல்லிவிட்டு, "ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது" எனும் (35:18ஆவது) இறை வசனமே உங்களுக்கு (சான்றுக்கு)ப் போதும்" என்றார்கள். இதைக் கூறி முடித்தபோது "அல்லாஹ்வே சிரிக்க வைக்கிறான்; அழவும் வைக்கிறான்" (53:43) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் மீதாணையாக! இ(ப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறிய)தற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் (ஆட்சேபணை) எதுவும் தெரிவிக்கவில்லை" என (அறிவிப்பாளர்) அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "நாங்கள் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுடைய புதல்வி உம்மு அபான் அவர்களின் ஜனாஸாவில் இருந்தோம்"என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன. இந்த அறிவிப்பில், அய்யூப் பின் அபீ தமீமா (ரஹ்) மற்றும் இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஆகியோரின் (முந்தைய) ஹதீஸ்களில் உள்ளதைப் போன்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து உமர் (ரலி) அவர்கள் கூறியதாகக் குறிப்பு இல்லை. ஆயினும், அவ்விருவரின் ஹதீஸே அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களது (இந்த) ஹதீஸைவிட முழுமையானதாகும். அத்தியாயம் :
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: "இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் மண்ணறையில் (கப்று) வேதனை செய்யப்படுகிறார்" என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இப்னு உமர் தவறாக விளங்கிக் கொண்டார். (நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லவில்லை.) "இறந்தவர் தன் (வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவருடைய குடும்பத்தாரோ, இப்போது அவருக்காக அழுதுகொண்டிருக்கின்றனர்" என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இ(ப்னு உமர் அறிவித்திருப்ப)து எப்படியிருக்கிறதென்றால், (குறைஷித் தலைவர்களான) இணைவைப்பாளர்கள் பத்ருப்போரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த பாழுங்கிணற்றுக்கு அருகில் நின்றுகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?" என்று உமர் (ரலி) அவர்கள் கேட்க,) "நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் தவறாகவே விளங்கிக் கொண்டார். "நான் அவர்களுக்குச் சொல்லிவந்ததெல்லாம் உண்மை என்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்" என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ("இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள்" என்று சொல்லவில்லை). பிறகு, (இறந்தவர்கள் நாம் பேசுவதைச் செவியுறுவதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும்) வசனங்களை ஓதினார்கள்: (நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது (27:80). (நபியே!) மண்ணறைகளில் (கப்று) இருப்பவர்களை உங்களால் செவியுறச்செய்ய முடியாது (35:22). "நரகத்தில் அவர்கள் தங்களின் இருப்பிடங்களில் ஒதுங்கும்போது (இந்நிலை ஏற்படும்)" என ஆயிஷா (ரலி) அவர்கள் (விளக்கம்) கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அபூஉசாமா (ஹம்மாத் பின் உசாமா பின் ஸைத்-ரஹ்) அவர்கள் அறிவித்த (முந்தைய) ஹதீஸே முழுமையானதாகும். அத்தியாயம் :
அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: "உயிரோடிருப்பவர் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்" என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ். அபூஅப்திர் ரஹ்மானை மன்னிப்பானாக! அவர் நிச்சயமாக பொய்யுரைக்கவில்லை; எனினும், அவர் மறந்திருக்கலாம். அல்லது தவறாக விளங்கியிருக்கலாம்; (நடந்தது இதுதான்:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதப் பெண்ணின் பிரேதத்தைக் கடந்துசென்றார்கள். அவளுக்காகச் சிலர் அழுதுகொண்டிருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இவர்கள் இவளுக்காக அழுகின்றனர். இவளோ தனது சவக்குழியில் வேதனை செய்யப்படுகிறாள்" என்றுதான் கூறினார்கள்" என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :