இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அடிமைகள், சுதந்திரமானவர்கள் ஆகியோரில் சிறியவர், பெரியவர் அனைவர்மீதும் பேரீச்சம் பழத்தில் ஒரு "ஸாஉ" அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையில் ஒரு "ஸாஉ" (ஏழைகளுக்கு வழங்குவது கடமையாகும்) என நோன்புப் பெருநாள் தர்மத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு "ஸாஉ" பேரீச்சம்பழத்தையோ அல்லது ஒரு "ஸாஉ" தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையையோ நோன்புப் பெருநாள் தர்மமாக வழங்கும்படி கட்டளையிட்டார்கள். மக்கள் ஒரு "ஸாஉ" தோல் நீக்கப்படாத கோதுமைக்குச் சமமாக இரண்டு "முத்"து (அரை "ஸாஉ") தோல் நீக்கப்பட்ட (மணிக்) கோதுமையை ஆக்கிக்கொண்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்த காலத்தில் சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை என அனைவருக்காகவும் நாங்கள் ஏதேனும் உணவிலிருந்து ஒரு ஸாஉ, அல்லது பாலாடைக் கட்டியிலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையிலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது பேரீச்சம் பழத்திலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது உலர்ந்த திராட்சையிலிருந்து ஒரு "ஸாஉ" நோன்புப் பெருநாள் தர்மமாக வழங்கிவந்தோம். முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராவிற்காக எங்களிடம் வரும்வரையில் இவ்வாறே நாங்கள் வழங்கிவந்தோம். முஆவியா (ரலி) அவர்கள் (எங்களிடம் வந்ததும்) சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் மக்களுக்கு ஆற்றிய உரையில் "ஷாம் (சிரியா) பகுதியின் தோல் நீக்கப்பட்ட (மணிக்) கோதுமையில் இரு "முத்"துகள், பேரீச்சம் பழத்தின் ஒரு "ஸாஉ"க்கு நிகரானதாகும் என நான் கருதுகிறேன்" என்று குறிப்பிட்டார்கள். மக்கள் அதைப் பிடித்துக்கொண்டனர். நானோ (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) வழங்கியதைப் போன்றே நான் உயிர் வாழும்வரை வழங்கிக்கொண்டிருப்பேன். அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் பாலாடைக்கட்டி, பேரீச்சம் பழம், தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமை ஆகிய மூன்று இனங்களிலிருந்தே நோன்புப் பெருநாள் தர்மத்தை வழங்கிவந்தோம். அத்தியாயம் :
இயாள் பின் அப்தில்லாஹ் பின் அபீசர்ஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள் தோல் நீக்கப்பட்ட அரை "ஸாஉ" (மணிக்)கோதுமையை ஒரு ஸாஉ பேரீச்சம்பழத்திற்கு ஈடாக்கியபோது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அதை ஆட்சேபித்தார்கள். "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் வழங்கி வந்ததைப் போன்று பேரீச்சம்பழத்தில் ஒரு "ஸாஉ", அல்லது உலர்ந்த திராட்சையில் ஒரு "ஸாஉ", அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையில் ஒரு "ஸாஉ", அல்லது பாலாடைக்கட்டியில் ஒரு "ஸாஉ"வைத் தவிர வேறெதையும் நோன்புப்பெருநாள் தர்மமாக வழங்கமாட்டேன்" என்று கூறினார்கள். அத்தியாயம் :