அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் முறையாக அங்கத் தூய்மை செய்யும்போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிலிருந்து வெளியேறிவிடுகின்றன. முடிவில், அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன. இதை உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நுஐம் பின் அப்தில்லாஹ் அல்முஜ்மிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்ததை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் தமது முகத்தை முழுமையாகக் கழுவினார்கள். பிறகு தமது வலக்கரத்தை புஜம்வரைக் கழுவினார்கள். பிறகு இடக்கரத்தை புஜம் வரைக் கழுவினார்கள். பிறகு (ஈரக் கையால்) தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்யலா)னார்கள். பிறகு வலக் காலை கணைக்கால் வரைக் கழுவினார்கள். பிறகு இடக்காலையும் (அவ்வாறே) கணைக்கால்வரைக் கழுவினார்கள். பின்னர், இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள். மேலும், அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்தமையால் மறுமை நாளில் (பிரதான) உறுப்புகள் பிரகாசிப்போராய் இருப்பீர்கள். எனவே, உங்களில் யாருக்கு முடியுமோ அவர் (தம் பிரதான உறுப்புகளை) எல்லைக்கு மேல் அதிகமாகக் கழுவிக்கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மறுமையில் எனக்கு வழங்கப்படவிருக்கும் அல்கவ்ஸர் எனும்) எனது நீர்த்தடாக(த்தின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென் அரபகத்திலுள்ள) அதன் நகரத்திலிருந்து (வட அரபகத்திலுள்ள) அய்லா நகர(ம் வரையிலான தூர)த்தைவிட அதிகத் தொலைவுடையதாகும். அ(தன் நீரான)து, பனிக்கட்டியைவிட மிகவும் வெண்மையானது; பால் கலந்த தேனைவிட மதுரமானது. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கையை விட அதிகமானவை. ஒருவர் தமது நீர்த்தொட்டியை விட்டும் (பிற) மக்களின் ஒட்டகங்களைத் தடுப்பதைப் போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் மக்கள் சிலரைத் தடுப்பேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அன்றைய தினம் (உங்கள் சமூகத்தாராகிய) எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ஆம்; வேறெந்தச் சமுதாயத்தாருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். (அதை வைத்து உங்களை நான் அடையாளம் கண்டு கொள்வேன்)என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின்) பொது மையவாடிக்குச் சென்று அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹிகூன் (அடக்கத் தலங்களிலுள்ள இறை நம்பிக்கையாளர்களே! உங்கள்மீது இறைச்சாந்தி பொழியட்டும். இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தாம்) என்று கூறி விட்டு, நம் சகோதரர்களை (இவ்வுலகிலேயே) பார்க்க நான் ஆசைப்படுகிறேன் என்று சொன்னார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் சகோதரர்கள் இல்லையா? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் என் தோழர்கள்தாம். (நான் கூறுவது) இதுவரை (பிறந்து) வந்திராத நம் சகோதரர்கள் என்று கூறினார்கள். மக்கள், உங்கள் சமுதாயத்தாரில் இதுவரை (பிறந்து) வராதவர்களை நீங்கள் எவ்வாறு அறிந்து கொள்வீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு மனிதரிடம் முகமும் கை கால்களும் வெண்மையாக உள்ள குதிரை ஒன்று இருந்தது. அது கறுப்புக் குதிரைகளுக்கிடையே இருந்தால் தமது குதிரையை அவர் அறிந்துகொள்ளமாட்டாரா, கூறுங்கள் என்று கேட்டார்கள். மக்கள், ஆம் (அறிந்து கொள்வார்), அல்லாஹ்வின் தூதரே! என்று பதிலளித்தனர். (அவ்வாறே) அவர்கள் அங்கத் தூய்மையினால் (பிரதான) உறுப்புகள் பிரகாசிக்கும் நிலையில் (மறுமையில்) வருவார்கள். நான் அவர்களுக்கு முன்பே (அல்கவ்ஸர் எனும் எனது) தடாகத்திற்குச் சென்று அவர்களுக்கு நீர் புகட்டக் காத்திருப்பேன். அறிந்துகொள்ளுங்கள்! வழி தவறி(விளைச்சல் நிலத்திற்குள் நுழைந்து)விட்ட ஒட்டகம் துரத்தப்படுவதைப் போன்று, சிலர் எனது தடாகத்திலிருந்து துரத்தப்படுவார்கள். அவர்களை நான் வாருங்கள் என்று சப்தமிட்டு அழைப்பேன். அப்போது, இவர்கள் உங்களுக்குப் பின்னால் (உங்களது மார்க்கத்தை) மாற்றிவிட்டார்கள் என்று சொல்லப்படும். அப்போது நான் (இவர்களை) இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக;அப்புறப்படுத்துவானாக! என்று கூறுவேன்.- இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) பொது மையவாடிக்குப் புறப்பட்டார்கள். (அங்கு போய்) அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன்; வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹிகூன் என்று கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது. (அறிந்துகொள்ளுங்கள் என்பதற்கு பதிலாக) உறுதியாக என்று காணப்படுகிறது. அத்தியாயம் :
அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குப் பின்னால் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் தமது கையை அக்குள்வரை நீட்டிக் கழுவினார்கள். நான், அபூஹுரைரா (ரலி) அவர்களே! இது என்ன அங்கத் தூய்மை? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஃபர்ரூகின் மக்களே! (பாமரர்களான) நீங்கள் இங்குதான் இருந்தீர்களா? நீங்கள் இங்குதான் இருக்கிறீர்கள் என்று நான் அறிந்திருந்தால் இவ்வாறு அங்கத் தூய்மை செய்திருக்கமாட்டேன். என் உற்ற தோழர் (ஸல்) அவர்கள், இறைநம்பிக்கையாளரின் உறுப்புகளில் எங்கெல்லாம் உளூவின் நீர் படுகிறதோ அங்கெல்லாம் வெண்மை பரவும் என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள். அத்தியாயம் :