حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، بْنِ أَبِي نُعْمٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ بَعَثَ عَلِيٌّ - رضى الله عنه - وَهُوَ بِالْيَمَنِ بِذَهَبَةٍ فِي تُرْبَتِهَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَسَمَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ أَرْبَعَةِ نَفَرٍ الأَقْرَعُ بْنُ حَابِسٍ الْحَنْظَلِيُّ وَعُيَيْنَةُ بْنُ بَدْرٍ الْفَزَارِيُّ وَعَلْقَمَةُ بْنُ عُلاَثَةَ الْعَامِرِيُّ ثُمَّ أَحَدُ بَنِي كِلاَبٍ وَزَيْدُ الْخَيْرِ الطَّائِيُّ ثُمَّ أَحَدُ بَنِي نَبْهَانَ - قَالَ - فَغَضِبَتْ قُرَيْشٌ فَقَالُوا أَتُعْطِي صَنَادِيدَ نَجْدٍ وَتَدَعُنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنِّي إِنَّمَا فَعَلْتُ ذَلِكَ لأَتَأَلَّفَهُمْ " فَجَاءَ رَجُلٌ كَثُّ اللِّحْيَةِ مُشْرِفُ الْوَجْنَتَيْنِ غَائِرُ الْعَيْنَيْنِ نَاتِئُ الْجَبِينِ مَحْلُوقُ الرَّأْسِ فَقَالَ اتَّقِ اللَّهَ يَا مُحَمَّدُ . - قَالَ - فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فَمَنْ يُطِعِ اللَّهَ إِنْ عَصَيْتُهُ أَيَأْمَنُنِي عَلَى أَهْلِ الأَرْضِ وَلاَ تَأْمَنُونِي " قَالَ ثُمَّ أَدْبَرَ الرَّجُلُ فَاسْتَأْذَنَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فِي قَتْلِهِ - يُرَوْنَ أَنَّهُ خَالِدُ بْنُ الْوَلِيدِ - فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ مِنْ ضِئْضِئِ هَذَا قَوْمًا يَقْرَءُونَ الْقُرْآنَ لاَ يُجَاوِزُ حَنَاجِرَهُمْ يَقْتُلُونَ أَهْلَ الإِسْلاَمِ وَيَدَعُونَ أَهْلَ الأَوْثَانِ يَمْرُقُونَ مِنَ الإِسْلاَمِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ لَئِنْ أَدْرَكْتُهُمْ لأَقْتُلَنَّهُمْ قَتْلَ عَادٍ " .
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள் யமன் நாட்டிலிருந்து மண் அகற்றப்பட்டிராத தங்கக்கட்டி ஒன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அனுப்பிவைத்தார்கள். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள்: அக்ரஉ பின் ஹாபிஸ் அல்ஹன்ழலீ (ரலி), உயைனா பின் பத்ர் அல்ஃபஸாரீ (ரலி), பனூ கிலாப் குலத்தாரில் ஒருவரான அல்கமா பின் உலாஸா அல்ஆமிரீ (ரலி) மற்றும் பனூ நப்ஹான் குலத்தாரில் ஒருவரான ஸைத் அல்கைர் அத்தாயீ (ரலி) ஆகியோரே அந்நால்வரும். இதைக் கண்ட குறைஷி (முஸ்லிம்)கள் கோபமடைந்தனர். "நஜ்த்வாசிகளின் தலைவர்களுக்குக் கொடுக்கிறீர்கள்; எங்களை விட்டுவிடுகிறீர்களே!" என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(புதிதாக இஸ்லாத்தைத் தழுவியுள்ள) அவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே நான் இவ்வாறு செய்தேன்" என்று கூறினார்கள். அப்போது அடர்த்தியான தாடி கொண்ட, கன்னங்கள் தடித்திருந்த, கண்கள் பஞ்சடைந்த, நெற்றி புடைத்திருந்த, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த மனிதர் ஒருவர் வந்து, "முஹம்மதே! அல்லாஹ்விற்கு அஞ்சுவீராக!" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானே (அல்லாஹ்விற்கு) மாறுசெய்தால் வேறெவர்தாம் அவனுக்குக் கீழ்ப்படிவார்? பூமியில் வசிப்பவர்கள் விஷயத்தில் அவ(ர்களைப் படைத்த இறைவ)ன் என்மீது நம்பிக்கை வைத்திருக்க, நீங்கள் என்மீது நம்பிக்கை வைக்கமாட்டீர்களா?" என்று கேட்டார்கள். பின்னர் அந்த மனிதர் திரும்பிச் சென்றபோது, அங்கிருந்த மக்களில் ஒருவர் அவரைக் கொல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். (அனுமதி கேட்டவர் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் என்றே கருதப்படுகிறது.) பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இ(வ்வாறு என்னிடம் பேசிய அ)ந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக்குழிகளைத் தாண்டிச் செல்லாது; இஸ்லாமியர்களைக் கொல்வார்கள்: சிலை வணக்கம் செய்பவர்களை விட்டுவிடுவார்கள். (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறுபக்கமாக) வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் "ஆத்" கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நான் நிச்சயம் அழித்துவிடுவேன்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கருவேல இலையால் பதனிடப்பட்ட தோல்பை ஒன்றில், மண் அகற்றப்பட்டிராத தங்கக்கட்டி ஒன்றை யமனிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அனுப்பிவைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டார்கள்: உயைனா பின் ஹிஸ்ன் (ரலி), அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி), ஸைத் அல்கைல் (ரலி). நான்காமவர் அல்கமா பின் உலாஸா (ரலி); அல்லது ஆமிர் பின் அத்துஃபைல் (ரலி). அப்போது நபித்தோழர்களில் ஒருவர், "இதைப் பெறுவதற்கு இவர்களைவிடத் தகுதி வாய்ந்தவர்கள் நாம்தாம்" என்று கூறினார். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், "நான் வானத்திலுள்ளவனின் நம்பிக்கைக்குரியவனாயிருக்க, என்மீது நீங்கள் நம்பிக்கை வைக்கமாட்டீர்களா? காலையிலும் மாலையிலும் எனக்கு வானத்தின் செய்திகள் வந்தவண்ணமுள்ளன" என்று சொன்னார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் உப்பிய, நெற்றி புடைத்த,அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த, கீழாடையை வரிந்து கட்டியிருந்த மனிதர் ஒருவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்" என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், "உமக்குக் கேடுதான். பூமியிலிருப்பவர்களில் அல்லாஹ்வை அஞ்சுவதற்கு நானல்லவா மிகவும் அருகதை வாய்ந்தவன்?" என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார். அப்போது காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவருடைய தலையைக் கொய்துவிடட்டுமா?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "(அவரைக் கொல்ல) வேண்டாம். அவர் தொழக்கூடியவராக இருக்கலாம்" என்று சொன்னார்கள். அதற்கு காலித் (ரலி) அவர்கள், "எத்தனையோ தொழுகையாளிகள் தமது இதயத்தில் இல்லாததை நாவில் மொழிகின்றார்கள்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்களின் இதயங்களைத் துளையிட்டுப் பார்க்கவோ அவர்களின் வயிறுகளைக் கிழித்துப் பார்க்கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லை" என்று கூறினார்கள். பின்னர் திரும்பிச் சென்றுகொண்டிருந்த அந்த மனிதரைப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை இனிமையாக ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறுபக்கமாக) வெளியேறி விடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து (சுவடே தெரியாமல்) வெளியேறிவிடுவார்கள்" என்று கூறினார்கள். "நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் "ஸமூத்" கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போல அவர்களை நிச்சயம் அழித்துவிடுவேன்" என்று கூறியதாகவும் நான் எண்ணுகிறேன். அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "(அல்கமா பின் உலாஸாவா, அல்லது ஆமிர் பின் அத்துஃபைலா என்ற ஐயப்பாடின்றி) அல்கமா பின் உலாஸா என்றே இடம்பெற்றுள்ளது. ஆமிர் பின் அத்துஃபைல் (ரலி) அவர்களது பெயர் காணப்படவில்லை. மேலும் ("நெற்றி புடைத்த" என்பதைக் குறிக்க) "நாத்திஉல் ஜப்ஹா" எனும் சொற்றொடரே இடம்பெற்றுள்ளது. "நாஷிஸுல் ஜப்ஹா" எனும் சொற்றொடர் இல்லை. மேலும், இந்த அறிவிப்பில், "அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் எழுந்து வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அவரது தலையைக் கொய்துவிடட்டுமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேண்டாம்" என்று கூறிவிட்டார்கள். பின்னர் அந்த மனிதர் திரும்பிச் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் வாள்" (என்று சொல்லப்பட்ட) காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் எழுந்து வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அவரது தலையைக் கொய்துவிடட்டுமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேண்டாம்" என்று கூறிவிட்டு, "இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை இனிமையாக, அநாயசமாக ஓதுவார்கள்" என்று கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. மேலும், "நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் "ஸமூத்" கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் அழித்துவிடுவேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக நான் கருதுகிறேன் என அறிவிப்பாளர் உமாரா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("ஹவாஸின்") போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக்கொண்டிருந்தபோது அவர்களின் அருகே நாங்கள் இருந்தோம். அப்போது "பனூ தமீம்" குலத்தைச் சேர்ந்த "துல்குவைஸிரா" எனும் மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நீதியுடன் நடந்துகொள்ளுங்கள்" என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், "உனக்குக் கேடுதான். நான் நீதியுடன் நடந்துகொள்ளவில்லையென்றால் வேறு யார்தாம் நீதியுடன் நடந்துகொள்வார்? நான் நீதியுடன் நடந்துகொள்ளவில்லையென்றால் நான் இழப்புக்குள்ளாகி நஷ்டமடைந்துவிடுவேன்" என்று பதிலளித்தார்கள். உடனே உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இவரது விவகாரத்தில் எனக்கு அனுமதி கொடுங்கள். இவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவரை விட்டுவிடுங்கள். நிச்சயமாக, இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கின்றார்கள். அவர்களது தொழுகையுடன் உங்களது தொழுகையையும், அவர்களது நோன்புடன் உங்களது நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களது தொழுகையையும் உங்களது நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்,) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களது கழுத்தெலும்பை (தொண்டையை)த் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்ததற்கான இரத்தக்குறி எதுவும் இருக்கிறதா என்று) அம்பின் முனை பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு (அம்பில்) அதன் (முனையைப் பொருத்துவதற்குப் பயன்படும்) நாண் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு, அம்பின் (அடிப்பாகக்) குச்சி பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணப் படாது. பிறகு, அம்பின் இறகு பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணப்படாது. அம்பானது சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன்மீது படாதவாறு) முந்திக்கொண்டு விட்டிருக்கும். அவர்களின் அடையாளம் ஒரு கறுப்புநிற மனிதராவார். அவருடைய இரு கை புஜங்களில் ஒன்று "பெண்ணின் கொங்கை போன்றிருக்கும்" அல்லது "துடிக்கும் இறைச்சித்துண்டு போன்றிருக்கும்". அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள்" என்று சொன்னார்கள். நான் இந்த நபிமொழியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடமிருந்து கேட்டேன் என்று உறுதி அளிக்கின்றேன். மேலும், அந்தக் கூட்டத்தாருடன் அலீ (ரலி) அவர்கள் போர் புரிந்தார்கள்.அப்போது நானும் அலீயுடன் இருந்தேன். அலீ (ரலி) அவர்கள், (நபி (ஸல்) அவர்கள் அடையாளம் கூறிய) அந்த மனிதரைக் கொண்டுவரும்படி கட்டளையிட, அவ்வாறே அவர் தேடப்பட்டு கொண்டு வரப்பட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட வர்ணனையின்படியே அவர் இருப்பதை நான் பார்த்தேன் என்றும் உறுதி கூறுகின்றேன். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :