மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "ஹஜ்ஜாஜ் தொழுகைகளைத் தாமதப்படுத்திவந்தார். ஆகவே, நாங்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடம் (தொழுகை நேரம் குறித்துக்) கேட்டோம்" என ஹதீஸ் தொடங்குகிறது. அத்தியாயம் :
ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சய்யார் பின் சலாமா (ரஹ்) அவர்கள் "என் தந்தை சலாமா (ரஹ்) அவர்கள் அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை பற்றி வினவியதை நான் செவியுற்றேன்" என்று கூறினார்கள். நான் சய்யார் (ரஹ்) அவர்களிடம், "நீங்கள் அதை (நேரடியாக)ச் செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நீங்கள் கூறுவதைத் தற்போது நான் செவியேற்பதைப் போன்றே செவியேற்றேன். என் தந்தை சலாமா (ரஹ்) அவர்கள் அபூபர்ஸா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை குறித்து வினவினார்கள். அதற்கு அபூபர்ஸா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை (அதாவது இஷாவை)ச் சிறிது நேரம் (அதாவது பாதி இரவுவரை) தாமதப்படுத்துவதைப் பொருட்படுத்தியதில்லை. இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாத் தொழுகைக்குப் பின் (உறங்காமல்) பேசிக் கொண்டிருப்பதையும் விரும்பியதில்லை" என்று கூறினார்கள். பிறகு (மற்றொரு முறை) நான் சய்யார் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது அவர்களிடம் வினவினேன். அப்போது அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் (நடு வானிலிருந்து மேற்கு நோக்கிச்) சாயும்போது லுஹர் தொழுவார்கள். பிறகு அஸ்ர் தொழுவார்கள். ஒருவர் (அஸ்ர் தொழுதுவிட்டு) மதீனாவின் கடைக் கோடியிலுள்ள தமது இல்லத்திற்குச் சென்றுவிடுவார். அப்போதும் சூரியன் (வெளிச்சம் குன்றாமல்) இருந்து கொண்டிருக்கும். மஃக்ரிப் (தொழுகையின் நேரம்) குறித்து அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறினார்கள்: ஆனால், அவர்கள்) கூறியதை நான் அறியவில்லை (மறந்துவிட்டேன்)" என்று கூறினார்கள். பிறகு (இன்னொரு முறை) அவர்களைச் சந்தித்து வினவியபோது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையைத் தொழுவி(த்து முடி)ப்பார்கள். அப்போது (எங்களில்) ஒருவர் (தொழுதுவிட்டுத்) திரும்புவார். அவர் தமக்கு அறிமுகமான பக்கத்திலிருப்பவரைப் பார்த்து (இன்னார் என) அறிந்துகொள்வார் (அந்த அளவிற்கு வெளிச்சம் வந்திருக்கும்). சுப்ஹுத் தொழுகையில் அறுபது முதல் நூறு வசனங்கள்வரை ஓதுவார்கள்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
அபூபர்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையைப் பாதி இரவுவரைச் சற்றே தாமதப்படுத்துவதைப் பொருட்படுத்தியதில்லை. இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் அதற்குப் பின் பேசிக்கொண்டிருப்பதையும் விரும்பமாட்டார்கள். இதை சய்யார் பின் சலாமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் மற்றொரு முறை சய்யார் பின் சலாமா (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது "("பாதி இரவுவரை") அல்லது "இரவில் மூன்றில் ஒரு பகுதிவரை" (தாமதப்படுத்துவதைப் பொருட்படுத்தியதில்லை)" என்று கூறினார்கள். அத்தியாயம் :
அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை இரவின் மூன்றிலொரு பகுதிவரைத் தாமதப்படுத்துவார்கள். இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசிக்கொண்டிருப்பதையும் வெறுப்பார்கள். ஃபஜ்ர் தொழுகையில் அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதுவார்கள். தொழுது முடித்துத் திரும்பிச்செல்லும்போது எங்களில் ஒருவர் மற்றவரின் முகத்தை அறிந்து கொள்வார். அத்தியாயம் :
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது : என் உற்ற தோழர் (நபி-ஸல்) அவர்கள் என்னிடம் "(உங்கள் தலைவருடைய சொல்லை) செவியேற்று அதற்குக் கட்டுப்பட வேண்டும்; அவர் (கை, கால்) உறுப்புகள் துண்டிக்கப்பட்ட அடிமையாக இருந்தாலும் சரியே" என்றும்,தொழுகையை உரிய நேரத்தில் தொழ வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். "பின்னர் மக்கள் தொழுது முடித்துவிட்ட நிலையில் அவர்களை நீங்கள் அடைந்தால், (முன்பே) உங்களது தொழுகையை நீங்கள் காப்பாற்றிக் கொண்டவராவீர்கள்;அவ்வாறின்றி (அவர்களுடன் சேர்ந்து நீங்கள் மறுபடியும் தொழுதால்) அது உங்களுக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக அமையும்" என்றும் கூறினார்கள். அத்தியாயம் :
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தொடையில் அடித்து, "தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் தாமதப்படுத்தும் மக்களிடையே நீங்கள் தங்க நேரிட்டால் உங்களது நிலை எப்படி இருக்கும்?" என்று கேட்டார்கள். "(அப்போது) நான் என்ன செய்ய வேண்டும் எனத் தாங்கள் உத்தரவிடுகின்றீர்கள்?" என்று நான் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உரிய நேரத்தில் தொழுது கொள்ளுங்கள். பிறகு உங்களது தேவைக்காகச் செல்லுங்கள்! நீங்கள் பள்ளிவாசலில் இருக்கும்போதே தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் அப்போதும் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்!" என்று கூறினார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தையின் சகோதரர்) அபூதர் (ரலி) அவர்கள் (என்னிடம்), "தொழுகையை உரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்தும் மக்களிடையே நீங்கள் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டால் "உமது நிலை எப்படி இருக்கும்?" அல்லது (பன்மையில்) "உங்களுடைய நிலை எப்படி இருக்கும்?" "என்று கேட்டுவிட்டுப் பிறகு, "அப்போது தொழுகையை உரிய நேரத்தில் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள். பிறகு (கூட்டுத்) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் அப்போதும் நீங்கள் மக்களுடன் (சேர்ந்து) தொழுது கொள்ளுங்கள். அது கூடுதல் நன்மையாகும்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :