ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய புதல்வர் இப்ராஹீம் (ரலி) அவர்கள் இறந்த நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது மக்கள் "இப்ராஹீம் இறந்ததனால் தான் கிரகணம் ஏற்பட்டது" என்று கூறினர். (இந்தச் செய்தி எட்டியதும்) நபி (ஸல்) அவர்கள் எழுந்து (இரண்டு ரக்அத்களில்) ஆறு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்தார்கள். அவர்கள் முதலில் "தக்பீர்" (தஹ்ரீம்) கூறினார்கள். பின்னர் நீண்ட நேரம் (குர்ஆன் வசனங்களை) ஓதினார்கள். பிறகு ஏறக்குறைய நிலையில் நின்றிருந்த அளவிற்கு ருகூஉச் செய்தார்கள். பிறகு ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தி முன்பு ஓதியதைவிடக் குறைவாக (குர்ஆனை) ஓதினார்கள். பிறகு ஏறக்குறைய முன்பு நிலையில் நின்றிருந்த அளவிற்கு ருகூஉச் செய்தார்கள். பிறகு ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தி இரண்டாவது முறை (குர்ஆனை) ஓதினார்கள். அது முதலாவது முறை ஓதியதைவிடக் குறைவாக இருந்தது. பிறகு ஏறக்குறைய முன்பு நிலையில் நின்றிருந்த அளவிற்கு ருகூஉச் செய்தார்கள். பிறகு ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தினார்கள். பிறகு (பூமியில்) சரிந்து இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள். பிறகு (இரண்டாவது ரக்அத்திற்காக) எழுந்து (முந்தைய ரக்அத்தில் செய்ததைப் போன்றே) மீண்டும் மூன்று ருகூஉகள் செய்தார்கள். அவர்கள் ஒரு ருகூஉச் செய்தால் அது அதற்கு முந்தைய ருகூஉவைவிடக் குறைவாகவே இருந்தது. அவர்களது ருகூஉ ஏறக்குறைய அவர்களது சஜ்தாவின் அளவிற்கே அமைந்திருந்தது. பிறகு அவர்கள் (தாம் நின்று தொழுவித்த இடத்திலிருந்து) பின்வாங்கினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த வரிசைகளும் அவர்களுடன் பின்வாங்கின. இறுதியில் நாங்கள் நின்ற இடத்திற்கே நபியவர்கள் வந்துவிட்டார்கள். (அறிவிப்பாளர் அபூபக்ர் கூறுகிறார்கள்: பெண்கள் நின்றிருந்த இடத்திற்கு வந்துசேர்ந்தார்கள்.) பிறகு நபி (ஸல்) அவர்கள் முன்னோக்கி நகர அவர்களுடன் சேர்ந்து மக்களும் முன்னோக்கி நகர்ந்து, முன்பு நின்றிருந்த இடத்தில் நின்றனர். (கிரகணம் விலகி) சூரியன் தனது பழைய நிலைக்குத் திரும்பிய வேளையில் தொழுகையை முடித்தார்கள். பிறகு (உரையாற்றினார்கள். அதில் பின்வருமாறு) குறிப்பிட்டார்கள்: மக்களே, சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். மக்களில் எவரது இறப்புக்காகவும் (அறிவிப்பாளர் அபூபக்ர் கூறுகிறார்கள்: எந்த மனிதரின் இறப்புக்காகவும்) அவற்றுக்குக் கிரகணம் ஏற்படுவதில்லை. இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் சூரிய வெளிச்சம் வரும்வரை நீங்கள் தொழுங்கள். உங்களுக்கு வாக்களிக்கப் பட்டுள்ள (சொர்க்கம் மற்றும் நரகம் உள்ளிட்ட) அனைத்தையும் நான் இத்தொழுகையில் இருந்தபோது கண்டேன். நரகம் என் (கண்)முன்னே கொண்டுவரப்பட்டது. அதன் தீச்சுவாலை என்னைத் தாக்கிவிடுமோ என நான் அஞ்சினேன். அதன் காரணமாகவே நான் பின்வாங்கியதை நீங்கள் கண்டீர்கள். அ(ந்த நரகத்)தில் முனை வளைந்த கைத்தடி வைத்திருந்த ஒருவன் தனது குடலை இழுத்தபடி நரகத்தில் சென்றுகொண்டிருந்ததைக் கண்டேன். அவன் கைத்தடியின் முனையால் ஹஜ் பயணிகளிடம் திருடிவந்தான். திருட்டு அம்பலமாகிவிட்டால் "எனது கைத்தடியில் (எப்படியோ இந்தப் பொருள்) மாட்டிக்கொண்டது" என்று கூறுவான். யாருக்கும் தெரியாவிட்டால் அதைக் கொண்டு சென்றுவிடுவான். மேலும், நரகத்தில் நான், பூனை வளர்த்த பெண்ணையும் கண்டேன். அவள் அதற்குத் தீனி போடாமல் கட்டிப்போட்டு வைத்திருந்தாள். அவள் அதை பூமியிலுள்ள புழுப்பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து)விடவுமில்லை. அது பசியாலேயே செத்துப்போய்விட்டது. பிறகு என் (கண்) முன்னே சொர்க்கம் கொண்டுவரப்பட்டது. நான் இந்த இடத்திற்கு மீண்டும் முன்னேறி வந்ததை நீங்கள் பார்த்தீர்களே அதற்குக் காரணம் அதுதான். நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே நான் சொர்க்கத்தின் கனிகளைப் பறிக்க எனது கையை நீட்டினேன். பிறகு அவ்வாறு செய்யலாகாது என்று எனக்குத் தோன்றியது (ஆகவே, அதிலிருந்து பின்வாங்கி விட்டேன்). உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள அனைத்தையும் இந்தத் தொழுகையில் இருந்தபோது நான் கண்டுகொண்டேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஃபாத்திமா பின்த் அல்முன்திர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது நான் (என் சகோதரி) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர் தொழுதுகொண்டிருந்தார். நான் ஆயிஷாவிடம் "மக்களுக்கு என்னவாயிற்று? ஏன் (இந்தநேரத்தில்) தொழுதுகொண்டிருக்கிறார்கள்?" என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா தமது தலையால் வானை நோக்கிச் சைகை செய்தார்கள். நான் "ஏதேனும் அடையாளமா?" என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா "ஆம்" என (சைகையால்) விடையளித்தார். (நானும் தொழுகையில் நின்று கொண்டேன்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெகுநேரம் நிலையில் நின்றதால் எனக்குத் தலைச் சுற்றலே வந்துவிட்டது. எனக்குப் பக்கத்திலிருந்த தோல் பாத்திரத்திலிருந்து தண்ணீர் எடுத்து ‘எனது தலைமீது" அல்லது ‘முகத்தின் மீது" தெளித்தேன். சூரிய வெளிச்சம் வந்து விட்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து மக்களுக்கு உரையாற்றினார்கள். "இறைவாழ்த்துக்குப் பின்! நான் இந்த இடத்தில் (தொழுதவாறு) நின்றபோது சொர்க்கம் மற்றும் நரகம் உட்பட இதுவரை நான் பார்த்திராத அனைத்தையும் கண்டேன். நீங்கள் உங்கள் மண்ணறைகளில் (கப்றுகளில்), மகாக்குழப்பவாதியான மஸீஹுத் தஜ்ஜாலின் "குழப்பத்தைப் போன்ற" அல்லது "அதற்கு நிகரான" குழப்பத்துக்கு உள்ளாக்கப்படுவீர்கள் என எனக்கு வஹீ (இறைச்செய்தி) அறிவிக்கப்பட்டது. - ("குழப்பத்தைப் போன்ற" அல்லது "அதற்கு நிகரான" என்பதில் எதை அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள் என எனக்குத் தெரியவில்லை) - (நீங்கள் மண்ணறையில் (கப்று) இருக்கும்போது) உங்களில் ஒருவரிடம் (என்னைக் காட்டி) "இம் மனிதரைப் பற்றி நீ என்ன அறிந்துள்ளாய்?" என வினவப்படும். அதற்கு "இறைநம்பிக்கையாளர்" அல்லது "(இறுதித்தூதரின் மீது) உறுதிகொண்டிருந்தவர்" (இந்த இரண்டில் எதை அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள் என எனக்குத் தெரியவில்லை.) "இவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) ஆவார்கள்; எங்களிடம் தெளிவான சான்றுகளையும் நேர்வழியையும் கொண்டுவந்தார்கள். நாங்கள் அவர்களது அழைப்பை ஏற்றோம்; இணங்கினோம்" என்று மூன்று முறை கூறுவார். அப்போது அவரிடம், "உறங்குவீராக! நீர் அவரை நம்பிக்கை கொண்டிருந்தீர் என நாங்கள் அறிவோம். எனவே, நலமாக உறங்குவீராக" என்று கூறப்படும். ஆனால், "நயவஞ்சகன்" அல்லது "சந்தேகத்துடன் இருந்தவன்" "(அவரை) எனக்குத் தெரியாது. மக்கள் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதைக் கேட்டு நானும் அதையே சொன்னேன்" என்று பதிலளிப்பான். (நயவஞ்சகன்,சந்தேகத்துடன் இருந்தவன் ஆகிய இவ்விரண்டில் எதை அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள் என எனக்குத் தெரியவில்லை.) அத்தியாயம் :