அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉவிலிருந்து தமது முதுகை நிமிர்த்திவிட்டால் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ். அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல்அர்ளி வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது என்று கூறுவார்கள். (பொருள்: அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கின்றான். இறைவா! எங்கள் அதிபதியே! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றுக்குப் பின் நீ நாடிய இன்ன பிற பொருள்கள் நிரம்பப் புகழ் அனைத்தும் உனக்கே உரியது.) இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ருகூஉவிலிருந்து நிமிர்ந்து சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறியதும்), அல்லஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து, மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது என்று துதிப்பார்கள். (பொருள்: இறைவா! எங்கள் அதிபதியே! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றுக்குப் பின் நீ நாடிய இன்ன பிற பொருள்கள் நிரம்பப் புகழ் அனைத்தும் உனக்கே உரியது.) இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ருகூஉவிலிருந்து நிமிர்ந்ததும்), அல்லாஹும்ம ல(க்)கல் ஹம்து, மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி, வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது. அல்லாஹும்ம, தஹ்ஹிர்னீ பிஸ்ஸல்ஜி வல்பரதி வல்மாயில் பாரித். அல்லாஹும்ம, தஹ்ஹிர்னீ மினத் துனூபி வல்கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினல் வஸ(க்)கி என்று பிரார்த்திப்பார்கள். (பொருள்: இறைவா! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றுக்குப் பின் நீ நாடிய இன்ன பிற பொருள்கள் நிரம்பப் புகழ் அனைத்தும் உனக்கே உரியது. இறைவா, பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் குளிர்ந்த நீராலும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! இறைவா, அழுக்கிலிருந்து வெண்மையான ஆடை தூய்மைப்படுத்தப்படுவதைப் போன்று பாவங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக!) இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், முஆத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (வஸக் எனும் சொல்லுக்கு பதிலாக) தரன் எனும் சொல் இடம்பெற்றுள்ளது. யஸீத் பின் ஹாரூன் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் தனஸ் எனும் சொல் இடம் பெற்றுள்ளது. (எல்லாவற்றுக்கும் பொருள்: அழுக்கு.) அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தியதும் அல்லாஹும்ம, ரப்பனா, ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி, வ மா பய்னஹுமா, வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது. அஹ்லஸ் ஸனாயி வல்மஜ்த். லா மானிஅ லிமா அஉதைத்த, வ லா முஉத்திய லிமா மனஉத்த, வ லா யனஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத் என்று கூறுவார்கள். (பொருள்: இறைவா, எங்கள் அதிபதியே! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, இன்னும் அவற்றுக்கிடையே உள்ளவை நிரம்ப மற்றும் நீ நாடிய இன்ன பிற பொருள்கள் நிரம்பப் புகழனைத்தும் உனக்கே உரியது. புகழுக்கும் மாண்புக்கும் உரியவனே! நீ கொடுத்ததைத் தடுப்பவர் யாருமிலர். நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாருமிலர். எந்தச் செல்வரின் செல்வமும் அவருக்கு உ(ந்தன் வேதனை த)ன்னிலிருந்து பயன் அளிக்காது.) - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் வமில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது (மற்றும் நீ நாடிய இன்ன பிற பொருள்கள் நிரம்பப் புகழனைத்தும் உனக்கே உரியது) என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னால் உள்ளது குறிப்பிடப்படவில்லை. அத்தியாயம் :