அப்துல்லாஹ் பின் ஷிஹாப் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் (ஒரு நாள் விருந்தினராகத்) தங்கியிருந்தேன். இரு ஆடைகளில் (உறங்கிய) எனக்கு உறக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டது. எனவே, அவ்விரு ஆடைகளையும் (கழுவுவதற்காகத்) தண்ணீரில் முக்கி வைத்தேன். இதை ஆயிஷா (ரலி) அவர்களின் பணிப்பெண் பார்த்துவிட்டு(ப் போய்) ஆயிஷாவிடம் தெரிவித்துவிட்டார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் என்னை வரச்சொல்லி ஆளனுப்பினார்கள். (நான் சென்றேன்.) அப்போது அவர்கள், உங்கள் ஆடைகளை இவ்வாறு நீங்கள் செய்யக் காரணமென்ன? என்று கேட்டார்கள். நான்,தூங்கக்கூடியவர் கனவில் எதைக் காண்பாரோ அதை நான் கண்டேன் என்று கூறினேன். அந்த ஆடைகளில் ஏதேனும் (இந்திரியம் பட்டிருக்கக்) கண்டீர்களா? என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன். அப்படியே எதையேனும் நீங்கள் பார்த்திருந்தாலும்கூட அதைக் கழுவத்தான் வேண்டுமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் பட்டுக் காய்ந்துவிட்டிருந்த இந்திரியத்தை நான் என் நகத்தால் சுரண்டித் தான்விடுவேன் (கழுவமாட்டேன்) என்று கூறினார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு அடக்கத்தலங்களைக் கடந்துசென்றார்கள். அப்போது அறிந்துகொள்ளுங்கள்! (இதோ) இவர்கள் இருவரும் (சவக் குழிக்குள்) வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. இவர்களில் ஒருவரோ (மக்களிடையே) கோள் சொல்லித் திரிந்து கொண்டிருந்தார். மற்றொருவரோ சிறுநீர் கழிக்கும்போது (தமது உடலை) மறைக்கமாட்டார் என்று கூறினார்கள். பிறகு பச்சை பேரீச்சமட்டை ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து இவர் (சவக் குழி)மீது ஒரு துண்டையும் இவர் (சவக் குழி)மீது மற்றொரு துண்டையும் ஊன்றிவைத்தார்கள். பிறகு இவ்விரண்டின் ஈரம் உலராதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படலாம் என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் மற்றொருவரோ சிறுநீர் கழித்துவிட்டுத் துப்புரவு செய்யமாட்டார் என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :