அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், அன்பை நூறு பாகங்களாகப் படைத்தான். அவற்றில் ஒன்றை தன் படைப்பினங்களிடையே வைத்தான். தொண்ணூற்று ஒன்பது பாகங்களைத் தன்னிடமே பத்திரப்படுத்திக்கொண்டான்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் தமக்கிடையே பரிவு காட்டுகின்றன. தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பு, மறுமை நாளுக்கு உரியவையாகும். இதை சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் வானங்கள், பூமி ஆகியவற்றைப் படைத்த நாளில் அன்பை நூறு பாகங்களாகப் படைத்தான். அவற்றில் ஒவ்வொரு பாகமும் வானம் பூமிக்கிடையே உள்ள (இடத்)தை அடைத்துக் கொள்ளும் அளவுடையதாகும். அவற்றில் ஒரு பாகத்தையே பூமியில் வைத்தான். அந்த ஒரு பாகத்தினால்தான் தாய் தன் குழந்தைமீது பாசம் கொள்கிறாள். மிருகங்களும் பறவைகளும் ஒன்றன் மீதொன்று அன்பு காட்டுகின்றன. மறுமை நாள் வரும்போது இந்த ஓர் அன்புடன் சேர்த்து அன்பை இறைவன் (நூறாக) முழுமையாக்குவான். இதை சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 6978 — Sahih Muslim 50:26
حَدَّثَنِي الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، وَمُحَمَّدُ بْنُ سَهْلٍ التَّمِيمِيُّ، - وَاللَّفْظُ لِحَسَنٍ - حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّهُ قَالَ قَدِمَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِسَبْىٍ فَإِذَا امْرَأَةٌ مِنَ السَّبْىِ تَبْتَغِي إِذَا وَجَدَتْ صَبِيًّا فِي السَّبْىِ أَخَذَتْهُ فَأَلْصَقَتْهُ بِبَطْنِهَا وَأَرْضَعَتْهُ فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَتَرَوْنَ هَذِهِ الْمَرْأَةَ طَارِحَةً وَلَدَهَا فِي النَّارِ " . قُلْنَا لاَ وَاللَّهِ وَهِيَ تَقْدِرُ عَلَى أَنْ لاَ تَطْرَحَهُ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَلَّهُ أَرْحَمُ بِعِبَادِهِ مِنْ هَذِهِ بِوَلَدِهَا " .
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார்கள். அந்தக் கைதிகளில் ஒரு பெண் (தனது மார்பில் சுரந்த பாலை ஊட்டுவதற்காகத் தனது குழந்தையைத்) தேடினாள். (குழந்தை கிடைக்கவில்லை. எனவே,) கைதிகளிடையே எந்தக் குழந்தையைக் கண்டாலும் அதை (வாரி) எடுத்து, தனது வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். (தனது குழந்தை கிடைத்ததும் அதையும் நெஞ்சணைத்துப் பாலூட்டினாள்.) அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தப் பெண் தனது குழந்தையைத் தீயில் எறிவாளா,சொல்லுங்கள்?" என்றார்கள். நாங்கள், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது" என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்கள்மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்" என்று சொன்னார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர் அல்லாஹ்விடமுள்ள தண்டனையைப் பற்றி நன்கறிவாரானால், (அதிலிருந்து தப்பித்தால் போதும் என்று கருதுவாரே தவிர,) அவனது சொர்க்கத்தின் மீது (இறைநம்பிக்கையாளர்களில்) யாரும் ஆசை கொள்ளமாட்டார்கள். இறைமறுப்பாளர் அல்லாஹ்விடமுள்ள கருணையைப் பற்றி நன்கறிவாரானால், அவனது சொர்க்கத்தைப் பற்றி (இறைமறுப்பாளர்களில்) யாருமே நிராசை கொள்ளமாட்டார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) நன்மை எதையும் அறவே செய்யாத ஒரு மனிதர் தம் குடும்பத்தாரிடம், "நான் இறந்துவிட்டால் என்னை எரித்து, (சாம்பலாக்கி) அந்தச் சாம்பலில் பாதியைத் தரையிலும் பாதியைக் கடலிலும் தூவி விடுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! என் மீது இறைவனுக்குச் சக்தி ஏற்பட்டால், உலக மக்களில் யாருக்கும் அளிக்காத வேதனையை அவன் எனக்கு அளித்துவிடுவான்" என்று சொல்லி(விட்டு இறந்து)விட்டார். அவ்வாறே அந்த மனிதர் இறந்ததும் அவர் சொன்னதைப் போன்றே குடும்பத்தார் செய்தனர். பிறகு அல்லாஹ் தரைக்கு ஆணையிட்டு அதிலிருந்த அவரது உடலை ஒன்று திரட்டினான்; கடலுக்கு ஆணையிட்டு அதிலிருந்த அவரது உடலை ஒன்றுதிரட்டினான். பிறகு, "நீ எதற்காக இப்படிச் செய்தாய்?" என்று கேட்டான். அதற்கு அவர், "என் இறைவா! உன்மீதுள்ள அச்சத்தால்தான் (இப்படிச் செய்தேன்). நீ நன்கறிந்தவன்" என்று சொல்ல, அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், "வியப்பூட்டும் இரு ஹதீஸ்களை உமக்கு நான் அறிவிக்கட்டுமா?" என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்ததாக ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் தெரிவித்த பின்வரும் ஹதீஸைச் சொன்னார்கள்: (முற்காலத்தில் பாவச்செயல்களால் ஒருவர்) தமக்குத்தாமே எல்லை மீறி நடந்தார். அவருக்கு மரண வேளை வந்தபோது, தம் புதல்வர்களிடம் இறுதி விருப்பம் தெரிவித்தார். "நான் இறந்து விட்டால் என்னை எரித்துத் தூளாக்கி,பிறகு கடலில் காற்றில் தூற்றுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! என்மீது என் இறைவனுக்குச் சக்தியேற்பட்டால் எவரையும் வேதனை செய்யாத அளவுக்கு ஒரு வேதனையை (தண்டனையாக) எனக்கு அவன் நிச்சயமாக அளிப்பான்" என்று கூறினார். அவ்வாறே (அவர் இறந்ததும் அவருடைய) புதல்வர்கள் செய்தனர். பிறகு அல்லாஹ், பூமியை நோக்கி, "நீ எடுத்ததை (ஒன்றுசேர்த்து)க் கொடுத்துவிடு" என்று கட்டளையிட்டான். அப்போது அந்த மனிதர் (அல்லாஹ்வின் முன்னிலையில் முழு வடிவில்) நின்றார். அவரிடம் அல்லாஹ், "நீ இப்படிச் செய்ய என்ன காரணம்?" என்று கேட்டான். அந்த மனிதர், "என் இறைவா! உன் மீதுள்ள அச்சம்தான் (காரணம்)" என்று பதிலளித்தார். இவ்வாறு அவர் கூறியதால் அவருக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்கினான். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேலும் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் இன்னொரு ஹதீஸையும் கூறினார்கள். அது வருமாறு: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பூனையை, அது சாகும்வரை (பட்டினி போட்டு) கட்டிவைத்த காரணத்தால் ஒரு பெண் நரகத்தில் நுழைந்தாள். அவளும் அதற்குத் தீனி போடவில்லை; பூமியின் புழு பூச்சிகளைத் தின்று பிழைத்துக்கொள்ளட்டும் என அதை அவள் அவிழ்த்துவிடவுமில்லை. முடிவில் அது மெலிந்து போய் செத்துவிட்டது. ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எந்த மனிதரும் (இறையருளை) முழுவதுமாக நம்பி (நல்லறங்கள் செய்யாமல்) இருந்துவிடக் கூடாது என்பதற்காகவும், எந்த மனிதரும் (இறையருள்மீது) அவநம்பிக்கை கொண்டுவிடக் கூடாது என்பதற்காகவுமே இந்தத் தகவல் கூறப்படுகிறது. அத்தியாயம் :