ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் பால்குடித் தந்தையின் சகோதரர் (அஃப்லஹ் (ரலி) அவர்கள்) வந்து, என் வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இது குறித்து ஆலோசனை கேட்காமல் அவருக்கு அனுமதியளிக்க முடியாது" என்று மறுத்துவிட்டேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்ததும் நான், "என் பால்குடித் தந்தையின் சகோதரர் வந்து என் வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். நான் அவருக்கு அனுமதி மறுத்துவிட்டேன்" என்று தெரிவித்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர் உன் வீட்டிற்குள் வரட்டும்" என்று கூறினார்கள். அப்போது நான், "(அவருடைய) மனைவி தான் எனக்குப் பாலூட்டினார்; அவர் எனக்குப் பாலூட்டவில்லையே?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்) என்னிடம், "அவர் உன்னுடைய (பால்குடித்) தந்தையின் சகோதரர் ஆவார். எனவே, அவர் உன் வீட்டிற்குள் வரட்டும்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் அபுல்குஐஸின் சகோதரர் ஆயிஷா (ரலி) அவர்களது வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், (ஆயிஷா (ரலி) அவர்களின் பால்குடித் தந்தை) அபுல்குஐஸ் (ரலி) அவர்களே ஆயிஷா (ரலி) அவர்களிடம் அனுமதிகேட்டார் என வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹம்ஸா (ரலி) அவர்களின் புதல்வியை மணமுடித்துக்கொள்ளும்படி நபி (ஸல்) அவர்களிடம் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அவர் எனக்கு (திருமணம் செய்ய) அனுமதிக்கப்பட்டவர் அல்லர். ஏனெனில், அவர் என் பால்குடிச் சகோதரரின் மகளாவார். மேலும், இரத்த உறவால் எந்த உறவுகளெல்லாம் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவுகளாக ஆகுமோ, அந்த உறவுகளெல்லாம் பால்குடி உறவாலும் நெருங்கிய உறவுகளாக ஆகிவிடும்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர் என் பால்குடிச் சகோதரரின் புதல்வியாவார்" என்பதுடன் ஹதீஸ் முடிவடைகிறது. சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இரத்த உறவு" என்பதைக் குறிக்க "ரஹிம்" எனும் சொல்லுக்குப் பதிலாக "நசப்" எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! ஹம்ஸா (ரலி) அவர்களின் மகள் விஷயத்தில் உங்களது நிலை என்ன?" அல்லது, "ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களின் மகளை நீங்கள் பெண் கேட்கக் கூடாதா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஹம்ஸா என் பால்குடிச் சகோதரர் ஆவார். (எனவே, நான் அவருடைய மகளை மணப்பது எனக்கு அனுமதிக்கப்பட்டதன்று)" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) அபூசுஃப்யானின் புதல்வி உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தபோது, நான் அவர்களிடம், "என் சகோதரியான அபூசுஃப்யானின் புதல்வி விஷயத்தில் தங்களுக்கு நாட்டம் உண்டா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள். நான் "அவளை நீங்கள் மணந்துகொள்ள வேண்டும்" என்றேன். அவர்கள், "இதை நீயே விரும்புகிறாயா?" என்று கேட்டார்கள். நான், "(ஆம்! மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்)பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்" என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அ(வளை மணப்ப)து எனக்கு அனுமதிக்கப் பட்டதன்று" என்றார்கள். (சகோதரிகளை ஒரே நேரத்தில் மணப்பது கூடாது என்பதே காரணம்.)நான், "தாங்கள் அபூசலமாவின் மகள் "துர்ரா"வைப் பெண் கேட்பதாகக் கேள்விப் பட்டேனே!"என்று கூறினேன். அதற்கு அவர்கள், "(அதாவது என் துணைவியார்) உம்மு சலமாவுக்கு (முந்தைய கணவன் மூலம்) பிறந்த மகளையா?" என்று கேட்க, நான் "ஆம்" என்றேன். அவர்கள், "அவள் (உம்மு சலமாவின் மகள்) எனது மடியில் வளர்ப்பு மகளாக (இருந்து வருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும் கூட, அவளை நான் மணக்க முடியாது. (ஏனெனில்,) அவள் என் பால்குடிச் சகோதரரின் புதல்வியாவாள். எனக்கும் அவளுடைய தந்தை (அபூசலமாவு)க்கும் "ஸுவைபா" (எனும் அடிமைப் பெண்) பாலூட்டியிருக்கிறார். ஆகவே, உங்கள் பெண் மக்களையோ உங்கள் சகோதரிகளையோ (மணந்து கொள்ளும்படி) என்னிடம் கோராதீர்கள்" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அப்படியே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :