அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுதுப் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாள் ஒன்றை எடுத்து, "என்னிடமிருந்து இதைப் பெற்றுக்கொள்பவர் யார்?" என்று கேட்டார்கள். மக்களில் ஒவ்வொருவரும் "நான், நான்" எனத் தம் கைகளை நீட்டினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதற்குரிய கடமை(யை நிறைவேற்றும் வாக்குறுதி)யுடன் இதை வாங்கிக்கொள்பவர் யார்?" என்று கேட்டார்கள். மக்கள் அனைவரும் பின்வாங்கிவிட்டார்கள். அப்போது அபூதுஜானா சிமாக் பின் கரஷா (ரலி) அவர்கள், "நான் அதற்குரிய கடமை(யை நிறைவேற்றும் வாக்குறுதி)யுடன் இதை வாங்கிக்கொள்கிறேன்" என்று கூறி, அதைப் பெற்றுச் சென்று, (எதிரணியிலிருந்த) இணைவைப்பாளர்களின் மண்டையைப் பிளந்தார்கள். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுதுப் போர் நாளில் என் தந்தையின் உடல் சிதைக்கப்(பட்டு காது, மூக்கு உள்ளிட்ட உறுப்புகள் அறுக்கப்)பட்ட நிலையில் ஒரு துணியில் போர்த்திக் கொண்டுவரப்பட்டது. நான் (என் தந்தையின் முகத்திலிருந்த) துணியை விலக்கப்போனேன். என் குலத்தார் என்னைத் தடுத்துவிட்டனர். பிறகு மறுபடியும் துணியை விலக்கப்போனேன். அப்போதும் என் குலத்தார் என்னைத் தடுத்துவிட்டனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரேதத்தைத் "தூக்கினார்கள்"; அல்லது "தூக்கும்படி உத்தரவிட்டார்கள்".அவ்வாறே தூக்கப்பட்டபோது யாரோ ஒரு பெண் "அழும் சப்தம்" அல்லது "ஓலமிடும் சப்தம்" கேட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அது?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அம்ர் (பின் ஹராம்) அவர்களின் புதல்வி" அல்லது "அம்ர் (பின் ஹராம்) அவர்களின் சகோதரி" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஏன் அழுகிறாய்? வானவர்கள் தம் இறக்கைகளை விரித்து அவர் தூக்கப்படும்வரை நிழல் கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள் (இத்தகைய சிறப்புக்குரிய ஒருவருக்காக ஏன் அழவேண்டும்?)" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 6355 — Sahih Muslim 44:185
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ أُصِيبَ أَبِي يَوْمَ أُحُدٍ فَجَعَلْتُ أَكْشِفُ الثَّوْبَ عَنْ وَجْهِهِ، وَأَبْكِي، وَجَعَلُوا يَنْهَوْنَنِي وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يَنْهَانِي - قَالَ - وَجَعَلَتْ فَاطِمَةُ بِنْتُ عَمْرٍو تَبْكِيهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " تَبْكِيهِ أَوْ لاَ تَبْكِيهِ مَا زَالَتِ الْمَلاَئِكَةُ تُظِلُّهُ بِأَجْنِحَتِهَا حَتَّى رَفَعْتُمُوهُ " .
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை உஹுதுப் போரில் கொல்லப்பட்டார்கள். பிறகு (அவர்களது உடல் கொண்டுவரப்பட்டபோது) அவர்களின் முகத்திலிருந்த துணியை விலக்கி நான் அழலானேன். மக்கள் என்னைத் தடுக்கலாயினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தடுக்கவில்லை. (என் அத்தை) ஃபாத்திமா பின்த் அம்ர் பின் ஹராம் (ரலி) அவர்களும் அழலானார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ அழுதாலும் அழாவிட்டாலும் அவரை நீங்கள் தூக்கும்வரை வானவர்கள் தம் இறக்கைகளை விரித்து அவருக்கு நிழல் கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள்" என்று சொன்னார்கள். - மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் வானவர்களைப் பற்றியோ அப்பெண்மணி அழுதது பற்றியோ குறிப்பு இல்லை. - மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "உஹுதுப் போர் நாளில் காது, மூக்கு ஆகிய உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் என் தந்தையின் உடல் கொண்டுவரப்பட்டு நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :
அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு போர் பயணத்தில் இருந்தார்கள். பிறகு அவர்களுக்கு அல்லாஹ் போர்ச் செல்வங்களை வழங்கினான். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், "(உங்களில்) யாரையேனும் காணாமல் நீங்கள் தேடுகிறீர்களா?" என்று கேட்டார்கள். தோழர்கள் "ஆம்; இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் (காணாமல் தேடுகிறோம்)" என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்), "(உங்களில்) யாரையேனும் காணாமல் தேடுகிறீர்களா?" என்று நபியவர்கள் கேட்டார்கள். தோழர்கள், "ஆம்; இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் (காணாமல் தேடுகிறோம்)" என்று கூறினர். பிறகு (மூன்றாவது முறையாக) "(உங்களில்) யாரையேனும் காணாமல் நீங்கள் தேடுகிறீர்களா?" என்று கேட்டார்கள். தோழர்கள், "இல்லை (எல்லாரும் கிடைத்துவிட்டனர்)" என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "நான் ஜுலைபீபைக் காணாமல் தேடுகிறேன். நீங்களும் அவரைத் தேடுங்கள்" என்று கூறினார்கள். கொல்லப்பட்டவர்களிடையே அவர் தேடப்பட்டார். (எதிரிகளில்) ஏழு பேரின் உடல்களுக்கு அருகில் அவரது உடலைக் கண்டனர். ஜுலைபீப் அந்த எழுவரையும் கொல்ல, அவர்களும் ஜுலைபீபைக் கொன்றுவிட்டிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் வந்து ஜுலைபீப் (ரலி) அவர்களுக்கு அருகில் நின்று, "இவர் (எதிரிகளில்) எழுவரைக் கொன்றார். அவர்களும் இவரைக் கொன்றுவிட்டனர். (இதோ) இவர் என்னைச் சேர்ந்தவர் ஆவார். நான் இவரைச் சேர்ந்தவன் ஆவேன். இவர் என்னைச் சேர்ந்தவர் ஆவார். நான் இவரைச் சேர்ந்தவர் ஆவேன்" என்று கூறினார்கள். பிறகு அவரைத் தமது (முன்)கையில் வைத்துத் தூக்கிக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் கைகளைத் தவிர (கட்டிலாக) வேறெதுவும் அவருக்கு இருக்கவில்லை. பிறகு குழி தோண்டப்பட்டு அவரது உடல் குழிக்குள் வைக்கப்பட்டது. இந்த அறிவிப்பில், அவர் நீராட்டப்பட்டாரா என்பது பற்றிய குறிப்பு இல்லை. அத்தியாயம் :