அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ஓர் இரகசியம் சொன்னார்கள். அவர்களது இறப்புக்குப் பிறகும்கூட ஒருவரிடமும் அதை நான் தெரிவிக்கவில்லை. என்னிடம் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அது குறித்துக் கேட்டார்கள். அதை நான் அவருக்கும் தெரிவிக்கவில்லை. அத்தியாயம் :
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பூமியின்மீது நடமாடும் எவரையும் "இவர் சொர்க்கவாசி" என்று சொல்லி நான் கேட்டதில்லை; அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களைத் தவிர. அத்தியாயம் :
கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் மதீனாவில் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளி வாசலில்) மக்களில் சிலருடன் இருந்தேன். அவர்களில் நபித்தோழர்கள் சிலரும் இருந்தனர். அப்போது ஒரு மனிதர் வந்தார். அவரது முகத்தில் சிரம்பணிந்(து சஜ்தா செய்)ததற்கான அடையாளம் இருந்தது. மக்களில் சிலர், "இவர் சொர்க்கவாசிகளில் ஒருவர்; இவர் சொர்க்கவாசிகளில் ஒருவர்" என்று சொன்னார்கள். அவர் இரண்டு ரக்அத்கள் தொழுதார்; அவற்றை (அதிக நேரம் எடுக்காமல்) சுருக்கமாகத் தொழுதார். பிறகு அவர் வெளியேற, நான் அவரைப் பின்தொடர்ந்து சென்றேன். அவர் தமது இல்லத்திற்குள் நுழைந்தபோது நானும் நுழைந்தேன். நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அவர் சகஜ நிலைக்கு வந்தபோது, "நீங்கள் சற்று முன்னர் (பள்ளிவாசலுக்குள்) நுழைந்த சமயம், ஒரு மனிதர் இப்படி (நீங்கள் சொர்க்கவாசி என்று) சொன்னார்" என அவரிடம் சொன்னேன். அவர் கூறினார்: அல்லாஹ் தூயவன் (சுப்ஹானல்லாஹ்)! தமக்குத் தெரியாததைக் கூறுவது எவருக்கும் முறையாகாது. ஏன் அவ்வாறு (மக்கள் பேசிக் கொள்கிறார்கள்) என்று உங்களுக்கு இதோ தெரிவிக்கிறேன்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் கனவொன்று கண்டேன். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விவரித்தேன். நான் ஒரு பூங்காவில் இருப்பதைப் போன்று கண்டேன். (அதன் விசாலத்தையும் புற்பூண்டுகளையும் பசுமையையும் வர்ணித்தார்) பூங்காவின் நடுவே இரும்பாலான தூண் ஒன்று இருந்தது. அதன் அடிப்பகுதி தரையிலும் மேற்பகுதி வானத்திலும் இருந்தது. அதற்கும் மேலே "கைப்பிடி" ஒன்று இருந்தது. என்னிடம் "இதில் ஏறு" என்று சொல்லப்பட்டது. நான் "என்னால் இயலாதே!" என்று சொன்னேன். அப்போது என்னிடம் "மின்ஸஃப்" ஒருவர் வந்தார் ("மின்ஸஃப்" என்பதற்கு ஊழியர் என்பது பொருள் என அறிவிப்பாளர் இப்னு அவ்ன் சொல்கிறார்). அவர் என் ஆடையைப் பிடித்து பின்பக்கமாக என்னை இவ்வாறு தூக்கிவிட்டார். அதைச் சைகையால் செய்து காட்டுகிறார். உடனே நான் அந்தத் தூணில் ஏறினேன். இறுதியில் அதன் உச்சிக்கு நான் சென்று அந்தப் பிடியைப் பற்றினேன். அப்போது என்னிடம் "நன்கு பற்றிப் பிடித்துக்கொள்" என்று சொல்லப்பட்டது. (நான் அதைப் பற்றிக்கொண்டேன்.) அந்தப் பிடி என் கையில் இருக்க, (திடுக்கிட்டு) நான் விழித்தேன். நபி (ஸல்) அவர்களிடம் அதை நான் விவரித்தபோது, "அந்தப் பூங்காதான் இஸ்லாம். அந்தத் தூண் இஸ்லாம் எனும் தூணாகும். அந்தப் பிடி பலமான (இறைநம்பிக்கை எனும்) பிடியாகும். ஆகவே, நீங்கள் இறக்கும்வரை இஸ்லாத்திலேயே நிலைத்து நிற்பீர்கள்" என்று நபியவர்கள் பதிலளித்தார்கள். (இப்படிச் சொன்ன) அந்த மனிதர் அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள்தான். அத்தியாயம் :
கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) வட்ட(மாக மக்கள் வீற்றிருந்த ஓர்) அவையில் இருந்தேன். அதில் சஅத் பின் மாலிக் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் இருந்தனர். அப்போது அப்துல் லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் (எங்களைக்) கடந்து சென்றார்கள். அப்போது அ(ங்கிருந்த)வர்கள், "இவர் சொக்கவாசிகளில் ஒருவர்" என்று கூறினர். உடனே நான் (அங்கிருந்து) எழுந்து அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களிடம் (சென்று), "மக்கள் இப்படி இப்படிக் கூறினர்" என்று சொன்னேன். அதற்கு அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், "அல்லாஹ் தூயவன். தமக்குத் தெரியாததைச் சொல்வது எவருக்கும் தகாது. (அவர்கள் இப்படிச் சொல்வதற்குக் காரணம் ஒன்று உண்டு:) நான் ஒரு கனவு கண்டேன். ஒரு பசுமையான பூங்காவில் தூண் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. பின்பு அது அங்கு நாட்டப்பட்டது. அதன் மேற்பகுதியில் "பிடி" ஒன்று இருந்தது. அதன் கீழ்ப் பகுதியில் "மின்ஸஃப்" ஒருவர் இருந்தார். (மின்ஸஃப் என்பதற்கு ஊழியர் என்பது பொருள்) அப்போது என்னிடம் "இதில் ஏறு" என்று சொல்லப்பட்டது. நான் அதில் ஏறி அந்தப் பிடியைப் பற்றினேன். பிறகு அதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்துல்லாஹ் பலமான பிடி(யான இஸ்லாமிய நெறி)யைப் பற்றிய நிலையில் இறப்பார்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
கரஷா பின் அல்ஹுர்ரு (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் மதீனாவின் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வட்ட(மாக மக்கள் வீற்றிருந்த) அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அங்கு அழகிய தோற்றத்துடன் முதியவர் ஒருவர் இருந்தார். அவர்தான் அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள். அவர்கள் மக்களுக்கு அழகிய ஹதீஸ் ஒன்றைக் கூறலானார்கள். பிறகு அவர்கள் எழுந்து சென்றபோது மக்கள், "சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகின்றவர் (இதோ) இவரைப் பார்த்துக்கொள்ளட்டும்" என்று கூறினர். அப்போது நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களைப் பின்தொடர்ந்து சென்று, அவர்களது இல்லத்தை நான் அறிந்துகொள்வேன்" என்று கூறிக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். அவர்கள் நடந்து, மதீனாவைவிட்டு வெளியேறும் தூரத்திற்குச் சென்று தமது இல்லத்திற்குள் நுழைந்தார்கள். பிறகு நான் (சென்று) அவர்களிடம் உள்ளே நுழைய அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். பிறகு என்னிடம், "என் சகோதரர் புதல்வரே! உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்கள். அவர்களிடம் நான், "நீங்கள் எழுந்து சென்றபோது உங்களைப் பற்றி மக்கள், "சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகின்றவர் (இதோ) இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்" என்று கூறியதைக் கேட்டேன். ஆகவே, தங்களுடன் இருப்பதை நான் விரும்பினேன்" என்று சொன்னேன். அதற்கு அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகளை அல்லாஹ்வே நன்கறிவான். மக்கள் ஏன் இவ்வாறு கூறினர் என உமக்கு நான் தெரிவிக்கிறேன்: (ஒரு நாள்) நான் உறங்கிக்கொண்டிருந்த போது (கனவில்) ஒரு மனிதர் என்னிடம் வந்து, "எழுங்கள்" என்று சொல்லிவிட்டு, எனது கையைப் பிடித்துக்கொண்டார். அவருடன் நான் நடந்தேன். அப்போது நான் எனக்கு இடப் பக்கத்தில் தெளிவான பல பாதைகளைக் கண்டேன். அதில் நான் செல்லப்போனேன். அப்போது அந்த மனிதர் என்னிடம், "அவற்றில் நீங்கள் செல்லாதீர்கள். இவை இடப் புறத்திலிருப்போரின் (நரகவாசிகளின்) பாதைகள்" என்று கூறினார். எனக்கு வலப் பக்கத்தில் பல நேரான பாதைகள் இருந்தன. அப்போது அந்த மனிதர், "இதில் செல்லுங்கள்" என்று கூறினார். பிறகு என்னை அழைத்துக்கொண்டு ஒரு மலை அருகே சென்றார். "இதில் ஏறுங்கள்" என்று கூறினார். அதில் நான் ஏறப்போனபோது மல்லாந்து விழலானேன். இவ்வாறு பல முறை செய்தேன். பிறகு அவர் என்னை ஒரு தூண் அருகே அழைத்துச் சென்றார். அதன் மேற்பகுதி வானத்தில் இருந்தது. அதன் கீழ்ப்பகுதி தரையில் இருந்தது. அத்தூணுக்கு மேலே வளையம் ஒன்று இருந்தது. அவர் என்னிடம், "இதற்கு மேலே ஏறுங்கள்" என்று கூறினார். நான், "இதில் எப்படி ஏறுவேன்? அதன் மேற்பகுதி வானத்தில் இருக்கிறதே!" என்று கேட்டேன். உடனே அவர் என்னைப் பிடித்து மேலே வீசினார். உடனே நான் அந்த வளையத்தைப் பிடித்துத் தொங்கினேன். பிறகு அவர் அந்தத் தூணை அடித்தார். அது கீழே விழுந்துவிட்டது. அப்போதும் நான் அந்த வளையத்தைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்தேன். விடிந்தவுடன் நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றி அவர்களிடம் விவரித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உங்களுக்கு இடப் பக்கத்தில் நீங்கள் கண்ட பாதைகள் இடப் புறக்காரர்களின் (நரகவாசிகளின்) பாதைகளாகும். உங்களுக்கு வலப் பக்கத்திலிருந்த பாதைகள் வலப் புறக்காரர்களின் (சொர்க்கவாசிகளின்) பாதைகளாகும். அந்த மலை உயிர்த்தியாகிகளின் இருப்பிடமாகும். அதை உங்களால் ஒருகாலும் அடைய முடியாது. அந்தத் தூண் இஸ்லாம் எனும் தூணாகும்.அந்தப் பிடி (வளையம்) இஸ்லாத்தின் பிடியாகும். நீங்கள் இறக்கும்வரை எப்போதும் அதைப் பலமாகப் பற்றிக்கொண்டே இருப்பீர்கள்" என்று சொன்னார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :