அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி), மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) ஆகியோரையும், நீங்கள் "ரவ்ளத்து காக்" எனும் இடத்திற்குச் செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகப் பல்லக்கில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்" என்று கூறியனுப்பினார்கள். அவ்வாறே நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்துகொண்டு எங்கள் குதிரைகள் விரைந்து சென்றன. (அந்த இடத்தை அடைந்தோம்.) அங்கு அந்தப் பெண் இருந்தாள். நாங்கள் அவளிடம், "அந்தக் கடிதத்தை வெளியே எடு" என்று சொன்னோம். அவள் "என்னிடம் கடிதம் எதுவுமில்லை" என்று சொன்னாள். நாங்கள், "நீயாகக் கடிதத்தை எடுத்து(க் கொடுத்து)விடு; இல்லாவிட்டால் (சோதனைக்காக) உன் ஆடையை நீ அவிழ்க்க வேண்டியதிருக்கும்" என்று கூறினோம். உடனே அவள் (இடுப்புவரை நீண்டிருந்த) தனது சடையின் பின்னல்களுக்கிடையிலிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அந்தக் கடிதத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தோம். அதில், ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (ரலி) அவர்கள், மக்காவாசிகளான இணை வைப்பாளர்களில் சிலருக்கு,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (போர்) விவகாரம் குறித்து சிலவற்றை (முன் கூட்டியே) தெரிவித்திருந்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹாத்திபே! என்ன இது?" என்று கேட்டார்கள். ஹாத்திப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து)விடாதீர்கள். நான் குறைஷியரைச் சார்ந்து வாழ்பவனாகவே இருந்து வந்தேன். (அதாவது குறைஷியரின் நட்புக் குலத்தாராகவே இருந்துவந்தார்; குறைஷிக் குலத்தில் ஒருவராக இருக்கவில்லை என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.) தங்களுடன் இருந்துவந்த முஹாஜிர்களுக்கு அவர்களுடைய குடும்பத்தாரைப் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர் பலர் இருந்தனர். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர் எவரும் இல்லாததால் (இணை வைப்பாளர்களான) மக்காவாசிகளுக்கு நான் உபகாரம் எதையாவது செய்து, அதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் (அங்குள்ள) என் (பலவீனமான) உறவினரைக் காப்பாற்றட்டும் என்று விரும்பினேன். (அதனால்தான் இணைவைப்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இத்தகவல்களைத் தெரிவித்தேன்.) நான் என் மார்க்கமான இஸ்லாத்தைவிட்டு வேறு மதத்தை ஏற்பதற்காகவோ,இறைமறுப்பாலோ, இஸ்லாத்தைத் தழுவியபின் இறைமறுப்பை விரும்பியோ இப்படிச் செய்யவில்லை" என்று கூறினார்கள். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவர் சொல்வது உண்மையே" என்றார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள். இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகிறேன்" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவர் பத்ருப்போரில் கலந்துகொண்டிருக்கிறார். உமக்கென்ன தெரியும்? பத்ருப்போரில் கலந்துகொண்டவர்களை நோக்கி, "நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களை மன்னித்துவிட்டேன்" என்று அல்லாஹ் கூறிவிட்டிருக்கலாம்" என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ், "இறைநம்பிக்கை கொண்டவர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாக இருப்போரைப் பாதுகாவலர்களாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்" (60:1) எனும் வசனத்தை அருளினான். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்), ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் இந்த வசனம் அருளப்பெற்றது பற்றிய குறிப்பு இல்லை. இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் அந்த வசனத்தை ஓதிக்காட்டியதாக இடம்பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரைவீரர்களான என்னையும் அபூமர்ஸத் அல்ஃகனவீ (ரலி) அவர்களையும் ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களையும் "நீங்கள் "ரவ்ளத்து காக்" எனும் இடம் வரை செல்லுங்கள். அங்கு இணைவைப்பாளர்களில் ஒரு பெண் இருப்பாள். அவளிடம் ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (மக்கா) இணை வைப்பாளர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்று இருக்கும்" என்று கூறியனுப்பினார்கள் என்று இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம், "அபூஹுரைரா(வின் நடவடிக்கை) உனக்கு வியப்பூட்டவில்லையா? (ஒரு நாள்) அவர் வந்து என் அறைக்கருகில் அமர்ந்து என் காதில் விழும் விதமாக நபிமொழிகளை அறிவித்துக்கொண்டிருந்தார். அப்போது நான் கூடுதல்தொழுகை (நஃபில்) தொழுதுகொண்டிருந்தேன். நான் தொழுது முடிப்பதற்குமுன் அவர் எழுந்து சென்றுவிட்டார். அவர் என்னிடம் சிக்கியிருந்தால், "நீங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஹதீஸ்களை அறிவித்துக்கொண்டிருப்பதைப் போன்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ச்சியாக (ஹதீஸ்களை) அறிவித்துக் கொண்டிருக்கவில்லை" என்று அவருக்கு மறுப்புத் தெரிவித்திருப்பேன்" என்று கூறினார்கள். - அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: "அபூஹுரைரா அதிகமான நபிமொழிகளை அறிவிக்கிறாரே!" என்று மக்கள் (குறை) கூறுகிறார்கள். (இந்தக் குற்றச்சாட்டு சரியா, தவறா என்பதை அறிய) அல்லாஹ்விடம் குறித்த நேரம் ஒன்று உண்டு. "முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் என்ன நேர்ந்தது? அபூஹுரைராவைப் போன்று (அதிகமான) நபிமொழிகளை அவர்கள் அறிவிப்பதில்லையே!" என்றும் கேட்கிறார்கள். அது குறித்து அவர்களுக்கு விளக்கப்போகிறேன்: என் அன்சாரி சகோதரர்கள் தம் நிலபுலன்களில் (விவசாயத்தில்) கவனம் செலுத்தி வந்தார்கள். என் முஹாஜிர் சகோதரர்கள் கடைவீதிகளில் வியாபாரம் செய்வதில் கவனம் செலுத்திவந்தார்கள். அதே நேரத்தில் நானோ, என் வயிற்றை நிரப்பும் (வருவாய் போதுமென்ற) திருப்தியுடன் (பொருள் சேர்க்கும் பணியில் ஈடுபடாமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனேயே எப்போதும் இருந்துவந்தேன். மக்கள் (வருவாய் தேடி) வெளியே சென்றுவிடும்போதும் நான் அல்லாஹ்வின் தூதருடனேயே இருப்பேன்; அவர்கள் (நபிமொழிகளை) மறந்துவிடும்போது நான் (அவற்றை) நினைவில் வைத்திருப்பேன். ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் யார் தமது ஆடையை விரித்து வைத்து, என்னுடைய இந்த உரையை வாங்கி, பிறகு தமது நெஞ்சோடு சேர்த்து (அணைத்து)க்கொள்கிறாரோ அவர் (என்னிடமிருந்து) கேட்ட எதையும் மறக்கமாட்டார்" என்று கூறினார்கள். உடனே நான் என் மீதிருந்த போர்வையை விரித்(துப் பிடித்)தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உரையை முடிக்கும்வரை அதை விரித்து வைத்திருந்துவிட்டு, பிறகு அதை என் நெஞ்சோடு சேர்த்து (அணைத்து)க்கொண்டேன். அன்றைய தினத்திற்குப் பிறகு அவர்கள் எனக்கு அறிவித்த செய்திகள் எதையும் நான் மறந்ததேயில்லை. அல்லாஹ் தனது வேதத்தில் அருளியுள்ள இரு வசனங்கள் மட்டும் இல்லாவிட்டால் நான் (நபிமொழிகளில்) எதையுமே ஒருபோதும் அறிவித்திருக்கமாட்டேன். (இவைதான் அந்தத் திரு வசனங்கள்:) "நாம் அருளிய சான்றுகளையும் நல்வழியையும் வேதத்தில் நாம் மக்களுக்குத் தெளிவுபடுத்திய பிறகும் அவற்றை மறைப்பவர்களை அல்லாஹ் சபிக்கின்றான்; சபிப்போரும் அவர்களைச் சபிக்கின்றனர். எனினும், பாவத்திலிருந்து மீண்டு, (தம்மைச்) சீர்திருத்தி, (தாம் மறைத்தவற்றைத்) தெளிவுபடுத்தியவர்களைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மிகவும் மன்னிப்பவனும் பெருங்கருணையாளனும் ஆவேன்". (2:159,160) - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "அபூஹுரைரா அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கின்றார் என்று நீங்கள் (குறை) கூறுகிறீர்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன. அத்தியாயம் :
ஹதீஸ் 6403 — Sahih Muslim 44:234
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ عَبْدًا، لِحَاطِبٍ جَاءَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَشْكُو حَاطِبًا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَيَدْخُلَنَّ حَاطِبٌ النَّارَ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كَذَبْتَ لاَ يَدْخُلُهَا فَإِنَّهُ شَهِدَ بَدْرًا وَالْحُدَيْبِيَةَ " .
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) ஹாத்திப் (ரலி) அவர்களின் அடிமை ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (தம் உரிமையாளர்) ஹாத்திபைப் பற்றி முறையிட்டார்; "அல்லாஹ்வின் தூதரே! ஹாத்திப் கட்டாயம் நரகத்திற்குத்தான் செல்வார்" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ தவறாகச் சொல்கிறாய். அவர் (நரகத்திற்குச்) செல்லமாட்டார். ஏனெனில், அவர் பத்ருப்போரிலும் ஹுதைபியாவிலும் கலந்துகொண்டிருக்கிறார்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஹுனைன் போர் முடிந்த பின்னர் அபூஆமிர் (ரலி) அவர்களின் தலைமையில் "அவ்தாஸ்" பள்ளத்தாக்கிற்கு ஒரு படைப் பிரிவை அனுப்பினார்கள். அப்போது அபூஆமிர் (ரலி) அவர்கள் (கவிஞன்) "துரைத் பின் அஸ்ஸிம்மா"வைச் சந்தித்தார்கள். (அவர்கள் இருவருக்குமிடையே நடந்த சண்டையில்) "துரைத்" கொல்லப்பட்டான்; அவனுடைய தோழர்களை அல்லாஹ் தோற்கடித்தான். அபூஆமிர் அவர்களுடன் என்னையும் நபி (ஸல்) அவர்கள் (அந்தப் போருக்கு) அனுப்பியிருந்தார்கள். அப்போரின்போது அபூஆமிர் அவர்களின் முழங்கால்மீது அம்பு (வந்து) பாய்ந்தது. "பனூ ஜுஷம்" குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனே அந்த அம்பை எய்து, அதை அவர்களது முழங்காலில் நிறுத்தினான். உடனே நான் அபூஆமிர் அவர்களுக்கு அருகில் சென்று, "என் தந்தையின் சகோதரரே! உங்கள்மீது அம்பெய்தவன் யார்?" என்று கேட்டேன். "இதோ அங்கே தெரிகிறானே அவன்தான் என்மீது அம்பெய்து என்னைக் கொன்றவன்"என்று எனக்குச் சைகை செய்து காட்டினார்கள். நான் அவனைக் குறி வைத்து நேராக அவனை நோக்கிச் சென்று அவனை அடைந்தேன். என்னைக் கண்டதும் அவன் புறமுதுகிட்டு ஓடலானான். "புறமுதுகிட்டு ஓடுகிறாயே உனக்கு வெட்கமில்லையா? நீ ஓர் அரபியன் இல்லையா? நீ நிற்கமாட்டாயா?" என்று அவனிடம் கேட்டுக்கொண்டே அவனைப் பின்தொடர்ந்தேன். உடனே அவன் (ஓடு வதை) நிறுத்திக்கொண்டான். பிறகு நானும் அவனும் நேருக்குநேர் சந்தித்து, வாளால் மாறி மாறித் தாக்கிக்கொண்டோம். அவனை நான் வாளால் வெட்டிக் கொன்றேன். பிறகு அபூஆமிர் அவர்களிடம் திரும்பி வந்து, "உங்களைக் கொ(ல்ல முய)ன்றவனை அல்லாஹ் கொன்றொழித்துவிட்டான்" என்று சொன்னேன். பிறகு "(எனது முழங்காலில் தைத்திருக்கும்) இந்த அம்பைப் பிடுங்கி எடுங்கள்" என்று அபூஆமிர் (ரலி) அவர்கள் கூற, உடனே நான் அதைப் பிடுங்கினேன். அதிலிருந்து நீர் கொட்டியது. அப்போது அபூஆமிர் அவர்கள், "என் சகோதரர் மகனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு என் முகமன் (சலாம்) கூறி, அபூஆமிர் தமக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி கூறியதாகச் சொல்வீராக!"என்றார்கள். பிறகு அபூஆமிர் (ரலி) அவர்கள் என்னை மக்களுக்குத் தளபதியாக நியமித்துவிட்டுச் சிறிது நேரத்திற்குப்பின் இறந்துவிட்டார்கள். நான் (அங்கிருந்து) திரும்பி நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் ஒரு வீட்டில் (பேரீச்ச நாரினால் வேயப்பட்ட) கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார்கள். அதன் மீது விரிப்பு ஒன்று இருந்தது. எனினும், கட்டிலின் கயிறு நபி (ஸல்) அவர்களின் முதுகிலும் விலாப் புறங்களிலும் அடையாளம் பதிந்திருந்தது. அப்போது அவர்களிடம் எங்கள் (படையினர் பற்றிய) செய்தியையும் அபூஆமிர் (ரலி) அவர்களது செய்தியையும் கூறி,தமக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி அபூஆமிர் வேண்டியது பற்றியும் கூறினேன். உடனே நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரும்படி கூறி, அதில் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு தம் அக்குள்களின் வெண்மையை நான் பார்க்குமளவுக்குத் தம் இரு கைகளையும் உயர்த்தி, "இறைவா! அபூஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக! மறுமை நாளில் உன் "படைப்பினங்களில்" அல்லது "மனிதர்களில்" பலரையும்விட (தகுதியில்) உயர்ந்தவராக அவரை ஆக்குவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். உடனே நான், "எனக்காகவும் பாவமன்னிப்புக் கோருங்கள், அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினேன். அதற்கு அவர்கள், "இறைவா! "(அபூமூசா) அப்துல்லாஹ் பின் கைஸின் பாவத்தை மன்னித்து, மறுமை நாளில் கண்ணியமான இருப்பிடத்திற்கு அவரை அனுப்புவாயாக" என்று பிரார்த்தித்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (நபி (ஸல்) அவர்கள் செய்த) இரு பிரார்த்தனைகளில் முந்தியது அபூஆமிர் (ரலி) அவர்களுக்கும் இரண்டாவது (என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்களுக்கும் உரியதாகும். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அஷ்அரீ" குலத்தைச் சேர்ந்த என் நண்பர்கள் (தம் பணிகளை முடித்துக்கொண்டு) இரவில் (இருப்பிடங்களில்) நுழையும்போது, அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையை நான் அறிவேன். பகல் நேரங்களில் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் பார்த்திருக்காவிட்டாலும் இரவில் அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையைக் கேட்டு அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் அடையாளம் கண்டுகொள்கிறேன். அவர்களில் விவேகம் மிக்க ஒருவர் இருக்கிறார். அவர் "குதிரைப் படையினரை" அல்லது "எதிரிகளை"ச் சந்தித்தால்,அவர்களைப் பார்த்து (வெருண்டோடாமல்) "என் தோழர்கள், தங்களுக்காகக் காத்திருக்கும்படி உங்களுக்கு உத்தரவிடுகின்றனர்" என்று கூறுவார். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறப்போரின்போது "அஷ்அரீ" குலத்தாரின் பயண உணவு (இருப்புக்) குறைந்துவிட்டால், அல்லது மதீனாவில் தம் மனைவி, மக்களின் உணவு (இருப்புக்) குறைந்துபோய் விட்டால், தம்மிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு ஒரே பாத்திரத்தின் மூலம் சமமாக அதைத் தமக்கிடையே பங்கிட்டுக்கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :