அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஃகிஃபார், அஸ்லம், "முஸைனா", அல்லது "முஸைனா குலத்தில் இருப்போர்", "ஜுஹைனா குலத்தில் இருப்போர்" அல்லது "ஜுஹைனா" ஆகிய குலங்கள் மறுமை நாளில் அல்லாஹ்விடம் அசத், தய்யி, ஃகதஃபான் ஆகிய குலங்களைவிடச் சிறந்தவையாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அஸ்லம் குலத்தாரும், ஃகிஃபார் குலத்தாரும், "முஸைனா மற்றும் ஜுஹைனா குலத்தாரில் சில குடும்பங்களும்"அல்லது "ஜுஹைனா மற்றும் முஸைனா குலத்தாரில் சில குடும்பங்களும்" மறுமை நாளில் அல்லாஹ்விடம் அசத், ஃகதஃபான், ஹவாஸின், தமீம் ஆகிய குலங்களைவிடச் சிறந்தவை ஆகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த) அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ஹஜ் பயணிகளின் பொருட்களைக் களவாடிய அஸ்லம், ஃகிஃபார், முஸைனா ஆகிய குலங்கள்தான் தங்களிடம் (வந்து இஸ்லாத்தைக் கடைப்பிடிப்பதாக) வாக்குறுதி அளித்துள்ளனர்" என்று கூறினார்கள். (ஜுஹைனா குலத்தையும் குறிப்பிட்டார்கள் என்றே நான் கருதுகிறேன் என அறிவிப்பாளர் முஹம்மத் (ரஹ்) அவர்களே ஐயத்துடன் அறிவிக்கிறார்). அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அஸ்லம், ஃகிஃபார், முஸைனா (ஜுஹைனாவையும் குறிப்பிட்டார்கள் என்றே நான் கருதுகிறேன்) ஆகிய குலத்தார், பனூ தமீம், பனூ ஆமிர், அசத், ஃகதஃபான் ஆகிய குலத்தாரைவிடச் சிறந்தவர்களாக இருந்தாலுமா அவர்கள் நஷ்டமடைந்து இழப்புக்குள்ளாகிவிட்டனர், சொல்லுங்கள்" என்று கேட்டார்கள். அதற்கு அக்ரஉ (ரலி) அவர்கள் "ஆம்" (இழப்புக்குள்ளாகிவிட்டார்கள்) என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த ஏகயிறை)வன் மீதாணையாக! அவர்கள் இவர்களைவிட மிகவும் சிறந்தவர்களே" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூபக்ரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "ஜுஹைனா குலத்தாரும்" என்று உறுதிபடவே இடம்பெற்றுள்ளது. "ஜுஹைனா குலத்தாரையும் குறிப்பிட்டார்கள் என்று நான் கருதுகிறேன்" என்று (ஐயத்துடன்) இடம்பெறவில்லை. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அஸ்லம், ஃகிஃபார், முஸைனா, ஜுஹைனா ஆகிய குலத்தார் பனூ தமீம், பனூ ஆமிர் மற்றும் நட்புறவுக் குலங்களான பனூ அசத், ஃகதஃபான் ஆகியவற்றைவிடச் சிறந்தவர்களாவர். இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூபக்ரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: "ஜுஹைனா, அஸ்லம், ஃகிஃபார் ஆகிய குலங்கள், பனூ தமீம், பனூ அப்தில்லாஹ் பின் ஃகதஃபான், ஆமிர் பின் ஸஅஸஆ ஆகிய குலங்களைவிடச் சிறந்தவையாக இருந்தாலுமா, கூறுங்கள்?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரத்த குரலில் கேட்டார்கள். அதற்கு மக்கள், "அப்போது (பனூ தமீம் உள்ளிட்ட) அவர்கள் நஷ்டமடைந்துவிட்டார்கள்; இழப்புக்குள்ளாகிவிட்டார்கள்,அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) "(ஆம்;) அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களே" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூகுரைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (குலங்கள் வரிசையில் சற்று முன்பின்னாக) "ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், ஃகிஃபார் ஆகிய குலத்தார்..." என்று ஆரம்பமாகிறது. அத்தியாயம் :