ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் (திடுக்கிட்டுத்) தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து, "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணமாக அரபியருக்குக் கேடுதான். இன்று யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவுக்குத் திறக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள். -அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் ("இந்த அளவுக்கு" என்று கூறியபோது) தம் கைவிரல்களால் (அரபி எண் வடிவில்) 10 என்று மடித்துக் காட்டினார்கள்.- அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! நல்லவர்கள் நம்மிடையே இருக்கும்போதா நமக்கு அழிவு ஏற்படும்?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்; தீமை பெருத்து விட்டால்" என்று பதிலளித்தார்கள். - மேற்கண்ட ஹதீஸ் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் பதற்றத்துடன் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணமாக அரபியருக்குக் கேடு தான். இன்று யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவுக்குத் திறக்கப் பட்டுள்ளது" என்று கூறியபடி வெளியேறினார்கள். ("இந்த அளவுக்கு" என்று கூறியபோது) பெருவிரலையும் அதற்கு அடுத்துள்ள (சுட்டு) விரலையும் வளையமிட்டுக் காட்டினார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! நல்லவர்கள் நம்மிடையே இருக்கும்போதுமா நமக்கு அழிவு ஏற்படும்?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்; தீமை பெருத்துவிட்டால்" என்று பதிலளித்தார்கள். - மேற்கண்ட ஹதீஸ் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
உபைதுல்லாஹ் இப்னு கிப்திய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஹாரிஸ் பின் அபீரபீஆ மற்றும் அப்துல்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) ஆகியோர் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்றனர். அப்போது அவ்விருவருடன் நானும் இருந்தேன். அவர்கள் இருவரும் உம்மு சலமா (ரலி) அவர்களிடம், பூமிக்குள் புதைந்துபோகும் படையினரைப் பற்றிக் கேட்டார்கள். -இது அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களின் காலத்தில் நடைபெற்றது.- அதற்கு உம்மு சலமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒருவர் இறையில்லம் கஅபா (எல்லை)க்குள் அபயம் தேடி வருவார். அவரை நோக்கிப் படையொன்று அனுப்பப்படும். அப்படையினர் ஒரு சமவெளியில் இருக்கும்போது, பூமிக்குள் புதைந்துபோய் விடுவார்கள்" என்று சொன்னார்கள். உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! நிர்பந்தமாகப் புறப்பட்டு வந்தவரின் நிலை என்ன?" என்று கேட்டேன். "அவர்களுடன் சேர்த்து அவரும் புதைந்துபோவார். எனினும், மறுமை நாளில் அவரது எண்ணத்திற்கேற்ப அவர் எழுப்பப்படுவார்" என்று கூறினார்கள் என்றார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஜஅஃபர் (ரஹ்) அவர்கள், "("சமவெளி" என்பது) மதீனாவிலுள்ள சமவெளி (பைதாஉல் மதீனா) ஆகும்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) அவர்கள், "நான் அபூஜஅஃபர் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது, "பூமியில் ஒரு சமவெளியில் என்றே உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்" என்றேன். அதற்கு அபூஜஅஃபர் (ரஹ்) அவர்கள், "அவ்வாறில்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அது மதீனாவிலுள்ள பைதா(சமவெளி) ஆகும்" என்று கூறினார்கள்" என்றார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த இல்லத்தை -அதாவது கஅபாவை- நோக்கி அபயம் தேடி ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்களிடம் ஆதரவுப் படையினரோ ஆட்பலமோ முன்னேற்பாடோ இருக்காது. (அவர்களைத் தாக்குவதற்காக) படை ஒன்று அவர்களிடம் அனுப்பப்படும். அப்படையினர் ஒரு சமவெளியில் இருக்கும்போது அவர்கள் பூமிக்குள் புதைந்து போய்விடுவார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யூசுஃப் பின் மாஹக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் ஸஃப் வான் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்த போது) நான், "ஷாம் (சிரியா)வாசிகள் அன்றைய நாளில் மக்கா நோக்கிப் பயணம் மேற்கொள்வார்கள்" என்று சொன்னேன். அதற்கு அப்துல்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) அவர்கள், "அறிந்துகொள்ளுங்கள்! அது (பூமிக்குள் புதைந்துபோகும்) இந்தப் படையல்ல" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸைத் பின் அபீஉனைசா (ரஹ்) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது. ஆயினும், அதில் அப்துல்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) அவர்கள் கூறிய படையினர் பற்றிய குறிப்பு இல்லை. அத்தியாயம் :