அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களது வீட்டிலிருந்து புறப்பட்டு வந்து, "இறைமறுப்பின் தலை (குழப்பம்), இங்கிருந்து -அதாவது கிழக்கிலிருந்து-தான் தோன்றும்; ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்து" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஃபுளைல் பின் ஃகஸ்வான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இராக்வாசிகளே! நீங்கள் பெரும்பாவத்தைச் செய்துகொண்டு, சிறுபாவத்தைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருப்பது வியப்பையே அளிக்கிறது. என் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கிழக்குத்திசையை நோக்கித் தமது கரத்தால் சைகை செய்தவாறு, குழப்பம் இங்கிருந்துதான் தோன்றும்; ஷைத்தானின் கொம்புகள் உதயமாகும் இடத்திலிருந்து" என்று கூறியதை நான் கேட்டேன். (இராக்வாசிகளே!) உங்களில் சிலர் சிலரது கழுத்தை வெட்டிக்கொண்டிருக்கிறீர்கள். (அதைப் பற்றிக்கேட்டால் இறைத்தூதர் மூசா, ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் ஒருவனைக் கொன்றதைச் சான்றாகக் கூறுவீர்கள்.) மூசா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் ஒருவனைத் தவறுதலாகவே கொன்றார்கள். எனவேதான், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மூசா (அலை) அவர்களிடம், "நீர் ஓர் உயிரைக் கொன்றிருந்தீர். உம்மைக் கவலையிலிருந்து நாம் காப்பாற்றினோம். உம்மைப் பல வழிகளில் சோதித்தோம்" (20:40) என்று கூறினான். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அறியாமைக்கால கடவுள் சிலைகளான) "லாத்"தும் "உஸ்ஸா"வும் வழிபாடு செய்யப்படாத வரை இரவும் பகலும் (இல்லாமற்) போகாது" என்று கூறியதைக் கேட்டேன். நான், "அல்லாஹ்வின் தூதரே! இணை கற்பிப்போர் வெறுத்தபோதிலும், எல்லா மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக நல்வழியுடனும் உண்மை மார்க்கத்துடனும் அவனே தன் தூதரை அனுப்பினான்" (9:33; 61:9) என அல்லாஹ் அருளியபோது, இந்த மார்க்கம் முழுமையடையும் என்றே நான் எண்ணிக்கொண்டிருந்தேன். (ஆனால்,தாங்கள் வேறு விதமாகச் சொல்கிறீர்களே!)" என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(உண்மைதான்) விரைவில் அல்லாஹ் நாடிய அளவு இது நடக்கும். பிறகு அல்லாஹ் நல்ல காற்று ஒன்றை அனுப்புவான். அது யாரது உள்ளத்தில் கடுகுமணியளவு இறைநம்பிக்கை (ஈமான்) உள்ளதோ அந்த ஒவ்வொருவரையும் கைப்பற்றிக்கொள்ளும். பிறகு எந்த நன்மையும் இல்லாதவர்களே (பூமியில்) எஞ்சியிருப்பர். அவர்கள் தம் மூதாதையரின் மார்க்கத்திற்குத் திரும்பிச் சென்றுவிடுவர்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! மக்களுக்கு ஒரு காலம் நிச்சயமாக வரும். (அப்போது) கொலை செய்தவனுக்குத் தான் எதற்காகக் கொலை செய்தான் என்பது தெரியாது. கொல்லப்பட்டவனுக்குத் தான் எதற்காகக் கொல்லப்பட்டான் என்பது தெரியாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! மக்களுக்கு ஒருநாள் வராதவரை உலகம் அழியாது. அன்று கொலை செய்தவனுக்குத் தான் எதற்காகக் கொன்றோம் என்பது தெரியாது. கொல்லப்பட்டவனுக்குத் தான் எதற்காகக் கொல்லப்பட்டோம் என்பது தெரியாது" என்று கூறினார்கள். அப்போது "அது எவ்வாறு நடக்கும்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கொலை சர்வ சாதாரணமாகிவிடும். கொன்றவனும் கொல்லப்பட்டவனும் நரகத்திற்குச் செல்வார்கள்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :