இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் "என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரணையுமின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்" என்று கூறினார்கள். மக்கள், "அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அவர்கள் (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள்; ஓதிப்பார்க்கமாட்டார்கள்; தங்கள் இறைவன்மீதே முழு நம்பிக்கை வைப்பார்கள்" என்று கூறினார்கள். உடனே உக்காஷா (ரலி) அவர்கள் எழுந்து, "அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும் படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!" என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "அவர்களில் நீரும் ஒருவர்தாம்" என்று சொன்னார்கள். உடனே இன்னொருவர் எழுந்து, "அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள், நபியே!" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணையின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்" என்று கூறினார்கள். மக்கள், "அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் எத்தகையவர்கள் எனில், ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள்; தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைப்பார்கள்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக என் சமுதாயத்தாரில் "எழுபதாயிரம் பேர்" அல்லது "ஏழு லட்சம் பேர்" ஒருவரையொருவர் பற்றிக்கொண்டு ஒரே சீராக (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்களில் கடைசி நபர் நுழையாதவரை முதல் நபர் நுழையமாட்டார்; (அனைவரும் ஓரணியில் நுழைவர்). மேலும், அவர்களுடைய முகங்கள் பௌர்ணமி இரவில் (பிரகாசிக்கும்) முழு நிலவின் வடிவத்தில் இருக்கும். இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ("எழுபதாயிரம் பேர்", "ஏழு இலட்சம் பேர்" ஆகிய) இவற்றில் எது என்று அறிவிப்பாளர் அபூஹாஸிம் (ரஹ்) அவர்களுக்குத் தெரியவில்லை. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாயிலாக வரும் மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. "எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இந்த அறிவிப்பு தொடங்குகிறது. அறிவிப்பாளர் ஹுஸைன் (ரஹ்) அவர்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் இடம்பெறவில்லை. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், "சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?" என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ் மிகப் பெரியவன்" என்று (தக்பீர்) முழங்கினோம். பிறகு "சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?" என்று கேட்டார்கள். அப்போதும் நாங்கள், "அல்லாஹ் மிகப் பெரியவன்" என்று (தக்பீர்) முழங்கினோம். பிறகு "சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டுமென்றே நான் எதிர்பார்க்கிறேன். அ(தற்குரிய காரணம் என்ன என்ப)து பற்றி உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன்: இறைமறுப்பாளர்களுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம்கள் "கறுப்புக் காளைமாட்டி(ன் உடலி)லுள்ள வெள்ளை முடியைப் போன்றுதான்" அல்லது "வெள்ளைக் காளைமாட்டிலுள்ள கறுப்பு முடியைப் போன்றுதான்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் சுமார் நாற்பது பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு (தோல்) கூடாரத்தில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்கள், "சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?" என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம்" என்று சொன்னோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கும் நாங்கள் "ஆம்" என்றோம். பிறகு அவர்கள் "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டுமென்றே நான் எதிர்பார்க்கிறேன். அதற்குக் காரணம், சொர்க்கத்தில் முஸ்லிமானவரைத் தவிர வேறெவரும் நுழைய முடியாது. இணைவைப்பாளர்களுடன் ஒப்பிடும்போது நீங்கள் "கறுப்புக் காளைமாட்டின் தோலில் உள்ள வெள்ளை முடியைப் போன்றுதான்" அல்லது "சிவப்புக் காளைமாட்டின் தோலில் உள்ள கறுப்பு முடியைப் போன்றுதான்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முதுகை தோல் கூடாரமொன்றில் சாய்த்தபடி எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, "அறிந்துகொள்ளுங்கள்; சொர்க்கத்தில் முஸ்லிமானவரைத் தவிர வேறெவரும் நுழைய முடியாது. இறைவா! நான் (சொல்ல வேண்டிய செய்தியைச்) சொல்லிவிட்டேனா? இறைவா (இதற்கு) நீயே சாட்சி" என்று கூறிவிட்டு, "சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?" என்று கேட்டார்கள். நாங்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னோம். அவர்கள், "சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டும் என்றே நான் எதிர்பார்க்கிறேன். மற்ற சமுதாயங்களுடன் ஒப்பிடும்போது நீங்கள் "வெள்ளைக் காளைமாட்டிலுள்ள "கறுப்பு முடியைப் போன்றுதான்" அல்லது கறுப்புக் காளைமாட்டிலுள்ள வெள்ளை முடியைப் போன்றுதான்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "அன்றைய தினம் (மற்ற) மனிதர்களுடன் ஒப்பிடும்போது நீங்கள் "கறுப்புக் காளை மாட்டிலுள்ள வெள்ளை முடியைப் போன்றுதான்" அல்லது "வெள்ளைக் காளைமாட்டிலுள்ள கறுப்பு முடியைப் போன்றுதான்" எனும் வாக்கியம் இடம்பெற்றுள்ளது. "கழுதையின் முன்னங்காலிலுள்ள வெள்ளை சொட்டையைப் போன்றுதான்" என்பது இடம்பெறவில்லை. அத்தியாயம் :