மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மதீனாவில் இறந்த நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் அவர்தாம் இறுதியானவர் என அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு (நோக்கங்களு)க்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து)கொண்டு வெற்றி அடைந்துகொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு பெண்ணை மணந்தேன். பின்னர் நபி (ஸல்) அவர்களை நான் சந்தித்தபோது அவர்கள் என்னிடம், "ஜாபிரே! நீ மணமுடித்து விட்டாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம், (மணமுடித்துவிட்டேன்)" என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "(அவள்) கன்னிப் பெண்ணா? அல்லது கன்னி கழிந்த பெண்ணா?"என்று கேட்டார்கள். நான் "(அவள்) கன்னி கழிந்த பெண்" என்று கூறினேன். (அப்போது) நபி (ஸல்) அவர்கள் "கன்னிப் பெண்ணை மணந்து கொண்டு நீ அவளுடன் கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே!" என்று கேட்டார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சகோதரிகள் சிலர் உள்ளனர்.எனவே, (வயதில் சிறியவளான அனுபவமில்லாத கன்னிப் பெண்ணை மணப்பதால்) அவள் எனக்கும் என் சகோதரிகளுக்குமிடையே பிரச்சினையாக இருந்துவிடுவாள் என்று நான் அஞ்சினேன். (எனவேதான், கன்னி கழிந்த பெண்ணை மணந்துகொண்டேன்)" என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால், இ(வ்வாறு நீ செய்த)து சரிதான்!" என்று கூறிவிட்டு, (பின்வருமாறு) சொன்னார்கள்: (மூன்று நோக்கங்களுக்காக) ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. 2. அவளது செல்வத்திற்காக. 3. அவளது அழகிற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடைய பெண்ணை மணந்துகொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டேன். பின்னர் என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ மணமுடித்துவிட்டாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். நபி (ஸல்) அவர்கள், "கன்னிப் பெண்ணை மணந்துகொண்டாயா? அல்லது கன்னி கழிந்த பெண்ணை மணந்துகொண்டாயா?" என்று கேட்டார்கள். நான் "கன்னிகழிந்த பெண்ணை மணந்து கொண்டேன்" என்று பதிலளித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "கன்னிப் பெண்களைவிட்டும்,அவர்களுடன் (கொஞ்சிக் குலவி) விளையாடுவதைவிட்டும் நீ எங்கே விலகிச் சென்றுவிட்டாய்?" என்று கேட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இந்த ஹதீஸை (அறிவிப்பாளர்) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம் கூறியபோது அவர்கள், "நான் இந்த ஹதீஸை ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து பின்வருமாறு கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் (ஜாபிர் (ரலி) அவர்களிடம்), "கன்னிப் பெண்ணை மணந்துகொண்டு அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே!" என்று கேட்டார்கள். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (உஹுதுப் போரில்) இறந்துவிட்டார்கள். (இறக்கும்போது) ஒன்பது பெண் மக்களை (அல்லது ஏழு பெண் மக்களை) விட்டுச் சென்றார்கள். ஆகவே, (கன்னி கழிந்த) ஒரு பெண்ணை நான் மணமுடித்துக்கொண்டேன். அப்போது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஜாபிரே! நீ மணமுடித்துக் கொண்டாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அதற்கு "கன்னிப் பெண்ணையா, கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?" என்று கேட்டார்கள். நான் "இல்லை; கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்), அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கன்னிப் பெண்ணை மணந்து "நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கொஞ்சிக் குலவி விளையாடலாமே" அல்லது "நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே" " என்று கேட்டார்கள். அதற்கு நான், "(என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் "ஒன்பது" அல்லது "ஏழு" பெண் மக்களை விட்டுவிட்டு இறந்துவிட்டார்கள். (வயதில்) அவர்களையொத்த ஒரு (இளவயதுப்) பெண்ணை (மணமுடித்து) அவர்களிடம் அழைத்துச் செல்வதை நான் விரும்பவில்லை; அவர்களைப் பராமரித்துச் சீராகப் பேணி நிர்வகிக்கும் (பக்குவமுள்ள) ஒரு பெண்ணையே (அவர்களிடம்) அழைத்துச் செல்ல நான் விரும்பினேன்" என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் உனக்கு "வளத்தை அளிப்பானாக" என்று, அல்லது "நல்ல வார்த்தையை" என்னிடம் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபுர்ரபீஉ அஸ்ஸஹ்ரானீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கொஞ்சிக் குலவி விளையாடலாமே; நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என (ஐயப்பாடின்றி) இடம்பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "திருமணம் முடித்துக் கொண்டாயா, ஜாபிரே?" என்று கேட்டார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகி, "மாறாக, அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை(க் கருத்தாக)ப் பராமரித்துவரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே கன்னி கழிந்த பெண்ணைத் தேர்ந்தெடுத்தேன்)" என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ செய்தது சரிதான்" என்று கூறினார்கள் என்று ஹதீஸ் முடிகிறது. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஒரு போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் (போரை முடித்து) திரும்பிக்கொண்டிருந்தபோது, நான் மெதுவாகச் செல்லக்கூடிய என் ஒட்டகத்தின் மீது இருந்துகொண்டு அவசரப்பட்டுக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர் எனக்குப் பின்னால் வாகனம் ஒன்றில் வந்துசேர்ந்து, தம்மிடமிருந்த கைத்தடியால் எனது ஒட்டகத்தைக் குத்தினார். உடனே எனது ஒட்டகம் நீ காணுகின்ற ஒட்டகங்களிலேயே மிக உயர்தரமானது போன்று ஓடலாயிற்று. நான் திரும்பிப் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் (என்னிடம்), "ஜாபிரே! என்ன அவசரம் உனக்கு?" என்று கேட்டார்கள். அதற்கு, "அல்லாஹ்வின் தூதரே! நான் புதிதாகத் திருமணம் செய்துகொண்டவன்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ மணந்தது கன்னிப் பெண்ணையா, அல்லது கன்னி கழிந்த பெண்ணையா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை; கன்னி கழிந்த பெண்ணையே (மணந்தேன்)" என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கன்னிப் பெண்ணை மணந்துகொண்டு, அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே?" என்று கேட்டார்கள். பிறகு மதீனாவிற்கு வந்து (ஊருக்குள்) நுழையப்போனபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நீங்கள் ஊர் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களைச் சென்றடைய) இரவு (இஷா) நேரம் வரும்வரை சற்றுப் பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக் கொள்ளட்டும். (கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க்கொள்ளட்டும்" என்று சொன்னார்கள். மேலும், "நீ (ஊருக்குச்) சென்றால் புத்திசாலித்தனமாக நடந்து (குழந்தையைத் தேடிக்)கொள்; புத்திசாலித்தனமாக நடந்து கொள்" என்றும் சொன்னார்கள். - ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போருக்குப் புறப்பட்டுச் சென்றேன். (போரை முடித்து நாங்கள் திரும்பியபோது) எனது ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைத் தாமதப்படுத்திவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து "ஜாபிர்(தானா)?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "என்ன விஷயம் (ஏன் தாமதம்)?" என்று கேட்டார்கள். "எனது ஒட்டகம் களைத்துப் பலமிழந்து போனதால் நான் பின்தங்கிவிட்டேன்" என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வாகனத்திலிருந்து) கீழே இறங்கி, முனைப்பகுதி வளைந்த தமது கைத்தடியால் எனது ஒட்டகத்தைக் குத்திவிட்டார்கள். பிறகு "ஒட்டகத்தில் ஏறு" என்றார்கள். நான் ஒட்டகத்தில் ஏறினேன். (அது விரைந்தோடியது.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட எனது ஒட்டகம் முந்திவிடாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ திருமணம் செய்து கொண்டாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அதற்கு, "கன்னிப் பெண்ணையா, கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?" என்று கேட்டார்கள். நான் "இல்லை; கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்து கொண்டேன்)" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கன்னிப் பெண்ணை மணந்து கொண்டு அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே?" என்று கேட்டார்கள். நான், "எனக்குச் சகோதரிகள் சிலர் உள்ளனர். அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக்கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்" என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இப்போது நீ ஊருக்குச் செல்லப்போகிறாய். ஊர் சென்றதும் புத்திசாலித்தனமாக நடந்துகொள்; புத்திசாலித்தனமாக நடந்துகொள்" என்று கூறிவிட்டு, "உனது ஒட்டகத்தை (எனக்கு) விற்றுவிடுகிறாயா?" என்று கேட்டார்கள். நான் "சரி" என்றேன். அவர்கள் என்னிடமிருந்து ஓர் "ஊக்கியா" விலை பேசி அதை வாங்கிக்கொண்டார்கள். (தொடர்ந்து ஊர் வந்து சேரும்வரை அதிலேயே நான் வந்தேன்.) (எனக்கு முன்பே) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிற்குச்) சென்றுவிட்டார்கள். நான் மறுநாள்தான் சென்றடைந்தேன். நான் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருப்பதைக் கண்டேன். "இப்போது தான் வருகிறாயா?" என்று என்னிடம் கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "உனது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழு" என்று சொன்னார்கள். அவ்வாறே நான் உள்ளே சென்று தொழுது விட்டுத் திரும்பிவந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்காக ஓர் "ஊக்கியா" எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடை போட்டுச் சற்று தாராளமாகவே நிறுத்(துத் தந்)தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்றபோது "ஜாபிரை எனக்காக அழைத்துவா" என்றார்கள். அவ்வாறே நான் அழைக்கப்பட்டேன். நான் (என் மனதிற்குள்) "இப்போது எனது ஒட்டகத்தை எனக்கே திரும்பத் தந்துவிடுவார்களோ! அ(வ்வாறு ஒட்டகத்தையும் வாங்கிக்கொண்டு விலையையும் பெற்றுக்கொண்டு நபியவர்களைச் சிரமப்படுத்துவ)தைவிட வெறுப்பானது எனக்கு வேறொன்றுமில்லை" என்று கூறிக்கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனது ஒட்டகத்தை நீயே எடுத்துக்கொள்; அதன் கிரயமும் உனக்கே" என்றார்கள். அத்தியாயம் :