حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ الْحَنَفِيُّ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، عَنْ سِمَاكٍ أَبِي زُمَيْلٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ، حَدَّثَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ، قَالَ لَمَّا اعْتَزَلَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم نِسَاءَهُ - قَالَ - دَخَلْتُ الْمَسْجِدَ فَإِذَا النَّاسُ يَنْكُتُونَ بِالْحَصَى وَيَقُولُونَ طَلَّقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نِسَاءَهُ وَذَلِكَ قَبْلَ أَنْ يُؤْمَرْنَ بِالْحِجَابِ فَقَالَ عُمَرُ فَقُلْتُ لأَعْلَمَنَّ ذَلِكَ الْيَوْمَ قَالَ فَدَخَلْتُ عَلَى عَائِشَةَ فَقُلْتُ يَا بِنْتَ أَبِي بَكْرٍ أَقَدْ بَلَغَ مِنْ شَأْنِكِ أَنْ تُؤْذِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ مَا لِي وَمَا لَكَ يَا ابْنَ الْخَطَّابِ عَلَيْكَ بِعَيْبَتِكَ . قَالَ فَدَخَلْتُ عَلَى حَفْصَةَ بِنْتِ عُمَرَ فَقُلْتُ لَهَا يَا حَفْصَةُ أَقَدْ بَلَغَ مِنْ شَأْنِكِ أَنْ تُؤْذِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَاللَّهِ لَقَدْ عَلِمْتِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يُحِبُّكِ . وَلَوْلاَ أَنَا لَطَلَّقَكِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . فَبَكَتْ أَشَدَّ الْبُكَاءِ فَقُلْتُ لَهَا أَيْنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ هُوَ فِي خِزَانَتِهِ فِي الْمَشْرُبَةِ . فَدَخَلْتُ فَإِذَا أَنَا بِرَبَاحٍ غُلاَمِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَاعِدًا عَلَى أُسْكُفَّةِ الْمَشْرُبَةِ مُدَلٍّ رِجْلَيْهِ عَلَى نَقِيرٍ مِنْ خَشَبٍ وَهُوَ جِذْعٌ يَرْقَى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَيَنْحَدِرُ فَنَادَيْتُ يَا رَبَاحُ اسْتَأْذِنْ لِي عِنْدَكَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَنَظَرَ رَبَاحٌ إِلَى الْغُرْفَةِ ثُمَّ نَظَرَ إِلَىَّ فَلَمْ يَقُلْ شَيْئًا ثُمَّ قُلْتُ يَا رَبَاحُ اسْتَأْذِنْ لِي عِنْدَكَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَنَظَرَ رَبَاحٌ إِلَى الْغُرْفَةِ ثُمَّ نَظَرَ إِلَىَّ فَلَمْ يَقُلْ شَيْئًا ثُمَّ رَفَعْتُ صَوْتِي فَقُلْتُ يَا رَبَاحُ اسْتَأْذِنْ لِي عِنْدَكَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِنِّي أَظُنُّ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ظَنَّ أَنِّي جِئْتُ مِنْ أَجْلِ حَفْصَةَ وَاللَّهِ لَئِنْ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِضَرْبِ عُنُقِهَا لأَضْرِبَنَّ عُنُقَهَا . وَرَفَعْتُ صَوْتِي فَأَوْمَأَ إِلَىَّ أَنِ ارْقَهْ فَدَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ مُضْطَجِعٌ عَلَى حَصِيرٍ فَجَلَسْتُ فَأَدْنَى عَلَيْهِ إِزَارَهُ وَلَيْسَ عَلَيْهِ غَيْرُهُ وَإِذَا الْحَصِيرُ قَدْ أَثَّرَ فِي جَنْبِهِ فَنَظَرْتُ بِبَصَرِي فِي خِزَانَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِذَا أَنَا بِقَبْضَةٍ مِنْ شَعِيرٍ نَحْوِ الصَّاعِ وَمِثْلِهَا قَرَظًا فِي نَاحِيَةِ الْغُرْفَةِ وَإِذَا أَفِيقٌ مُعَلَّقٌ - قَالَ - فَابْتَدَرَتْ عَيْنَاىَ قَالَ " مَا يُبْكِيكَ يَا ابْنَ الْخَطَّابِ " . قُلْتُ يَا نَبِيَّ اللَّهِ وَمَا لِي لاَ أَبْكِي وَهَذَا الْحَصِيرُ قَدْ أَثَّرَ فِي جَنْبِكَ وَهَذِهِ خِزَانَتُكَ لاَ أَرَى فِيهَا إِلاَّ مَا أَرَى وَذَاكَ قَيْصَرُ وَكِسْرَى فِي الثِّمَارِ وَالأَنْهَارِ وَأَنْتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَصَفْوَتُهُ وَهَذِهِ خِزَانَتُكَ . فَقَالَ " يَا ابْنَ الْخَطَّابِ أَلاَ تَرْضَى أَنْ تَكُونَ لَنَا الآخِرَةُ وَلَهُمُ الدُّنْيَا " . قُلْتُ بَلَى - قَالَ - وَدَخَلْتُ عَلَيْهِ حِينَ دَخَلْتُ وَأَنَا أَرَى فِي وَجْهِهِ الْغَضَبَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا يَشُقُّ عَلَيْكَ مِنْ شَأْنِ النِّسَاءِ فَإِنْ كُنْتَ طَلَّقْتَهُنَّ فَإِنَّ اللَّهَ مَعَكَ وَمَلاَئِكَتَهُ وَجِبْرِيلَ وَمِيكَائِيلَ وَأَنَا وَأَبُو بَكْرٍ وَالْمُؤْمِنُونَ مَعَكَ وَقَلَّمَا تَكَلَّمْتُ وَأَحْمَدُ اللَّهَ بِكَلاَمٍ إِلاَّ رَجَوْتُ أَنْ يَكُونَ اللَّهُ يُصَدِّقُ قَوْلِي الَّذِي أَقُولُ وَنَزَلَتْ هَذِهِ الآيَةُ آيَةُ التَّخْيِيرِ { عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبْدِلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ} { وَإِنْ تَظَاهَرَا عَلَيْهِ فَإِنَّ اللَّهَ هُوَ مَوْلاَهُ وَجِبْرِيلُ وَصَالِحُ الْمُؤْمِنِينَ وَالْمَلاَئِكَةُ بَعْدَ ذَلِكَ ظَهِيرٌ} وَكَانَتْ عَائِشَةُ بِنْتُ أَبِي بَكْرٍ وَحَفْصَةُ تَظَاهَرَانِ عَلَى سَائِرِ نِسَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَطَلَّقْتَهُنَّ قَالَ " لاَ " . قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي دَخَلْتُ الْمَسْجِدَ وَالْمُسْلِمُونَ يَنْكُتُونَ بِالْحَصَى يَقُولُونَ طَلَّقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نِسَاءَهُ أَفَأَنْزِلُ فَأُخْبِرَهُمْ أَنَّكَ لَمْ تُطَلِّقْهُنَّ قَالَ " نَعَمْ إِنْ شِئْتَ " . فَلَمْ أَزَلْ أُحَدِّثُهُ حَتَّى تَحَسَّرَ الْغَضَبُ عَنْ وَجْهِهِ وَحَتَّى كَشَرَ فَضَحِكَ وَكَانَ مِنْ أَحْسَنِ النَّاسِ ثَغْرًا ثُمَّ نَزَلَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم وَنَزَلْتُ فَنَزَلْتُ أَتَشَبَّثُ بِالْجِذْعِ وَنَزَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَأَنَّمَا يَمْشِي عَلَى الأَرْضِ مَا يَمَسُّهُ بِيَدِهِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا كُنْتَ فِي الْغُرْفَةِ تِسْعَةً وَعِشْرِينَ . قَالَ " إِنَّ الشَّهْرَ يَكُونُ تِسْعًا وَعِشْرِينَ " . فقُمْتُ عَلَى بَابِ الْمَسْجِدِ فَنَادَيْتُ بِأَعْلَى صَوْتِي لَمْ يُطَلِّقْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نِسَاءَهُ . وَنَزَلَتْ هَذِهِ الآيَةُ { وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِنَ الأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنْبِطُونَهُ مِنْهُمْ} فَكُنْتُ أَنَا اسْتَنْبَطْتُ ذَلِكَ الأَمْرَ وَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ آيَةَ التَّخْيِيرِ .
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு மாத காலம் தம் துணைவியரிடம் நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்து) தம் துணைவியரிடமிருந்து விலகியிருந்தபோது, நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கு மக்கள் (கவலையோடு) சிறு கற்களைத் தரையில் எறிந்து கொண்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்துவிட்டார்கள்" என்று கூறிக்கொண்டிருந்தனர். - இது பர்தா பற்றிய சட்டம் அருளப்பெறுவதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சியாகும்.- "அன்று என்ன நடந்தது என்பதை நான் அறிந்தே தீருவேன்" என்று (எனக்குள்) நான் கூறிக்கொண்டேன். பிறகு நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, "அபூபக்ர் (ரலி) அவர்களின் புதல்வியே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மன வேதனைப்படுத்தும் அளவிற்கு உங்களது தகுதி உயர்ந்துவிட்டதா?" என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "கத்தாபின் புதல்வரே! உங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்சினை? (முதலில்) நீங்கள் உங்களது பெட்டகத்தை (வீட்டை)க் கவனியுங்கள் (உங்கள் புதல்வி ஹஃப்ஸாவிற்கு அறிவுரை கூறுங்கள்)" என்று கூறினார்கள். ஆகவே, நான் (என் புதல்வி)ஹஃப்ஸா பின்த் உமரிடம் சென்று, "ஹஃப்ஸா! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மன வேதனைப்படுத்தும் அளவிற்கு உனது தகுதி உயர்ந்துவிட்டதா? அல்லாஹ்வின் மீதாணையாக! (நீ இவ்வாறு செய்தால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை நேசிக்கமாட்டார்கள் என்பதை நீ அறிந்தே உள்ளாய். நான் மட்டும் இல்லையென்றால், உன்னை அவர்கள் மணவிலக்குச் செய்திருப்பார்கள்" என்று கூறினேன். இதைக் கேட்டு ஹஃப்ஸா கடுமையாக அழுதார். நான் ஹஃப்ஸாவிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இப்போது) எங்கே இருக்கிறார்கள்?" என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, "மாடியிலுள்ள அவர்களது தனி அறையில் அவர்கள் இருக்கிறார்கள்" என்றார்கள். உடனே நான் அங்கு சென்றேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணியாளர் ரபாஹ், அந்த மாடியறையின் வாசற்படியில், செதுக்கப்பட்ட மரக்கட்டையின் மீது கால்களைத் தொங்கவிட்டபடி அமர்ந்திருந்தார். அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏறுவதற்கும் இறங்கு வதற்கும் பயன்படுத்திய பேரீச்ச மரக்கட்டையாகும். நான் (அவரைக்) கூப்பிட்டு, "ரபாஹே! எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேள்" என்றேன். அப்போது ரபாஹ் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்த) அந்த அறையை உற்றுப் பார்த்தார். பிறகு என்னையும் பார்த்தார். ஆனால், பதிலேதும் சொல்ல வில்லை. பின்னர் (மீண்டும்) நான், "ரபாஹே! எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உள்ளே வர) அனுமதி கேள்" என்றேன். ரபாஹ் அந்த அறையைப் பார்த்தார். பிறகு என்னையும் பார்த்தார். ஆனால், பதிலேதும் சொல்லவில்லை. பின்னர் நான் குரலை உயர்த்தி, "ரபாஹே! எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உள்ளே வர) அனுமதி கேள். நான் (என் மகள்) ஹஃப்ஸா வுக்(குப் பரிந்து பேசுவதற்)காக வந்துள்ளேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எண்ணிவிட்டார்கள் என நான் நினைக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! என் மகளின் கழுத்தை வெட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டால் கூட நிச்சயமாக அவரது கழுத்தை வெட்டி விடுவேன்" என்று உரத்த குரலில் சொன்னேன். அப்போது ரபாஹ் என்னை ஏறிவரச் சொல்லி சைகை செய்தார். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் ஒரு பாயில் சாய்ந்து படுத்திருந்தார்கள். நான் அமர்ந்தவுடன் அவர்கள் தமது கீழாடையைச் சுருட்டி (ஒழுங்குபடுத்தி)னார்கள். அப்போது அவர்கள் உடலில் அந்த ஆடையைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அந்தப் பாய் அவர்களது விலாப் புறத்தில் அடையாளம் பதித்திருந்தது. அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தனி அறையை நோட்டமிட்டேன். அங்கு ஒரு "ஸாஉ" அளவு தொலி நீக்கப்படாத கோதுமையும், அறையின் ஒரு மூலையில் அதே அளவு கருவேல இலையும் இருந்தன. நன்கு பதனிடப்படாத ஒரு தோல் அங்கு தொங்கவிடப்பட்டிருந்தது. (இதைக் கண்ட) என் கண்கள் (என்னையும் அறியாமல்) கண்ணீர் சொரிந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கத்தாபின் புதல்வரே! ஏன் அழுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் நபியே! என்னால் எவ்வாறு அழாமலிருக்க முடியும்? இந்தப் பாய் உங்களது விலாப் புறத்தில் அடையாளப்படுத்தியுள்ளதே. (இதோ) இதுதான் உங்களது தனிஅறை. இதில் நான் காணுகின்ற (விலை மலிவான) சில பொருட்களைத் தவிர வேறெதையும் நான் காண வில்லை. அந்த (பாரசீகம் மற்றும் இத்தாலி அரசர்களான) குஸ்ருவும் சீசரும் கனி வர்க்கங்களிலும் நதிகளிலும் (உல்லாசமாக) இருக்கின்றனர். நீங்களோ அல்லாஹ்வின் தூதரும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவீர்கள். ஆனால், உங்களது தனி அறை இவ்வாறு இருக்கிறதே!" என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கத்தாபின் புதல்வரே! நமக்கு மறுமையும் அ(ம்மன்ன)வர்களுக்கு இம்மையும் இருப்பது உங்களுக்குத் திருப்தி இல்லையா?" என்று கேட்டார்கள். நான் "ஆம் (திருப்திதான்)" என்றேன். அந்த அறைக்குள் நுழைந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்தில் கோபத்தைக் கண்டிருந்தேன். ஆகவே, "அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரைப் பற்றித் தங்களுக்கு என்ன சஞ்சலம்? நீங்கள் அவர்களை மணவிலக்குச் செய்திருந்தாலும் (நீங்கள் சஞ்சலப்பட வேண்டியதில்லை. ஏனெனில்,) தங்களுடன் (தங்களுக்கு உதவி புரிவதற்கு) அல்லாஹ் இருக்கின்றான். அவனுடைய வானவர்களும் ஜிப்ரீலும் மீக்காயீலும் நானும் அபூபக்ரும் இதர இறைநம்பிக்கையாளர்களும் தங்களுடன் இருக்கின்றோம்" என்று சொன்னேன். நான் ஒரு சிறு விஷயத்தைக் கூறினாலும் -நான் அல்லாஹ்வைப் புகழுகிறேன்- நான் கூறிய சொல்லை அல்லாஹ் மெய்யாக்கி வைப்பான் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கவே செய்தது. அப்போது "உங்களை அவர் மணவிலக்குச் செய்துவிட்டால் உங்களுக்குப் பதிலாக உங்களைவிடவும் சிறந்த துணைவியரை அவருடைய இறைவன் அவருக்கு வழங்க முடியும்" (66:5) என்ற விருப்ப உரிமை அளிக்கும் இந்த வசனமும், "அவருக்கு எதிராக நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டால் அல்லாஹ் அவருடைய அதிபதி ஆவான். ஜிப்ரீலும் நம்பிக்கை கொண்டோரில் நல்லவர்களும் வானவர்களும் அதன் பின் (அவருக்கு) உதவுவார்கள்" (66:4) எனும் இறைவசனமும் அருளப்பெற்றன. அபூபக்ர் (ரலி) அவர்களின் புதல்வி ஆயிஷா (ரலி) அவர்களும் (என் புதல்வி) ஹஃப்ஸாவுமே நபி (ஸல்) அவர்களின் மற்றத் துணைவியரை மிகைத்தவர்களாக இருந்தனர். ஆகவே, நான், "அல்லாஹ்வின் தூதரே! (உங்கள் துணைவியரான) இவர்களை நீங்கள் மணவிலக்குச் செய்துவிட்டீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "இல்லை" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். (அங்கு) முஸ்லிம்கள் சிறு கற்களைத் தரையில் எறிந்துகொண்டு (ஆழ்ந்த கவலையுடன்) இருந்தனர்; "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்து விட்டார்கள்" என்று கூறிக்கொண்டுமிருந்தனர். நான் இங்கிருந்து இறங்கிச்சென்று, "தாங்கள் தங்கள் துணைவியரை மணவிலக்குச் செய்யவில்லை என அவர்களிடம் தெரிவித்துவிடவா?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; நீங்கள் விரும்பினால் (அவ்வாறு செய்யுங்கள்)" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்திலிருந்து கோபம் விலகும் வரையிலும், பற்கள் தெரியுமளவிற்கு அவர்கள் சிரிக்கும்வரையிலும் அவர்களிடம் நான் பேசிக்கொண்டேயிருந்தேன். -அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே அழகான பற்கள் உடையவராக இருந்தார்கள்.- பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த மாடியறையிலிருந்து) இறங்கினார்கள். நானும் இறங்கினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பேரீச்ச மரக்கட்டையைத் தமது கரத்தால் பற்றாமலேயே தரையில் நடப்பதைப் போன்று (சாதாரணமாக) நடந்தார்கள். (ஆனால்,) நான் அந்த மரக்கட்டையைப் பிடித்துக்கொண்டே இறங்கினேன். நான், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இந்த அறையில் இருபத்தொன்பது நாட்கள் மட்டுமே தங்கியுள்ளீர்கள் (ஆனால், ஒரு மாதம் மனைவியரிடமிருந்து விலகியிருக்கப்போவதாக சத்தியம் செய்திருந்தீர்களே?)!"என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும்" என்று சொன்னார்கள். பின்னர் நான் பள்ளிவாசலின் தலைவாயிலில் நின்றுகொண்டு உரத்த குரலில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்யவில்லை" என்று கூறினேன். அப்போது, "பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைத்தால் அதை அவர்கள் (உடனே) பரப்பிவிடுகின்றனர். அதை இறைத்தூதரிடமும் தங்களில் அதிகாரமுள்ளோரிடமும் கொண்டுசென்றிருந்தால் அதை ஆய்வு செய்வோர் அறிந்துகொண்டிருப்பர்" (4:83) எனும் இந்த வசனம் அருளப்பெற்றது. நானே அச்செய்தியை ஆய்வு செய்தவனாக இருந்தேன். ஆக, மனைவியருக்கு விருப்ப உரிமை அளிப்பது தொடர்பான (33:28ஆவது) வசனத்தை, வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் அருளினான். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஓராண்டு காலமாக ஒரு வசனத்தைப் பற்றி உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்க வேண்டுமென்று காத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அவர்கள் மீதிருந்த (மரியாதை கலந்த) அச்சம் காரணமாகக் கேட்பதற்குத் துணிவு வரவில்லை. (ஒரு முறை) உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டுச் சென்றபோது நானும் அவர்களுடன் புறப்பட்டேன். அவர்கள் (ஹஜ்ஜை முடித்துக்கொண்டு) திரும்பி வரும் வழியில் நாங்கள் (மர்ருழ் ழஹ்ரான் எனும்) ஒரு சாலையில் இருந்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள் தமது இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக "அராக்" (மிஸ்வாக்) மரத்தை நோக்கி ஒதுங்கிச் சென்றார்கள். அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றிவிட்டு வரும்வரை நான் (அவர்களை எதிர்பார்த்தபடி) அவர்களுக்காக நின்று கொண்டிருந்தேன். பிறகு அவர்களுடன் செல்லலானேன். அப்போது அவர்களிடம் நான், "இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் (நபியவர்களைச் சஞ்சலப்படுத்தும் வகையில்) ஒருவருக்கொருவர் (கூடிப் பேசி) உதவி புரிந்தவர்கள் யார்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஹஃப்ஸாவும் ஆயிஷா (ரலி) அவர்களும்தாம்" என்று பதிலளித்தார்கள். உடனே நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! ஓராண்டு காலமாக இது குறித்து உங்களிடம் நான் கேட்க வேண்டுமென எண்ணியிருந்தேன். ஆனால், உங்கள்மீது (எனக்கு) உள்ள (மரியாதை கலந்த) அச்சம் காரணமாக எனக்குத் துணிவு வரவில்லை" என்று சொன்னேன். அதற்கு "(இப்படிச்) செய்யாதீர்கள். என்னிடம் ஓர் அறிவு இருப்பதாக நீங்கள் எண்ணினால், என்னிடம் அது குறித்துக் கேட்டுவிடுங்கள். (உண்மையிலேயே) அதை நான் அறிந்திருந்தால், உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன்" என்று கூறிய உமர் (ரலி) அவர்கள், பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! அறியாமைக் காலத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் இருப்பதாக நாங்கள் கருதியதில்லை. அவர்(களின் உரிமை)கள் தொடர்பாக, தான் அருளிய (சட்டத்)தை அல்லாஹ் அருளும் வரையிலும்,அவர்களுக்குரிய (செலவுத் தொகை, சொத்துரிமை ஆகிய)வற்றின் பங்குகளை அவன் நிர்ணயிக்கும் வரையிலும் (இந்நிலை நீடித்தது). இந்நிலையில் (ஒரு நாள்) நான் ஒரு விவகாரம் குறித்து ஆலோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது என் மனைவி, "நீங்கள் இப்படி இப்படிச் செய்யலாமே!" என்று என்னிடம் (ஆலோசனை) கூறினார். அவரிடம் நான், "உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நான் தீர்மானிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் உன் தலையீடு எதற்கு?" என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், "கத்தாபின் புதல்வரே! (இப்படிச் சொல்கின்ற) உங்களைப் பார்த்து நான் வியப்படைகிறேன். உங்களுடன் விவாதிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை. ஆனால், உங்களுடைய புதல்வி (ஹஃப்ஸாவோ தம் கணவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விவாதித்ததால் அன்றைய நாள் முழுக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமாக இருந்தார்கள்" என்று சொன்னார். உடனே நான் எழுந்து, எனது மேலங்கியை எடுத்துக்கொண்டு, அப்படியே அங்கிருந்து புறப்பட்டு ஹஃப்ஸாவிடம் சென்றேன். "என் அருமை மகளே! நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வாதம் புரிந்து, அதனால் அவர்கள் அன்றைய தினம் முழுக்கக் கோபத்துடன் இருந்தார்களாமே (அது உண்மையா)?" என்று ஹஃப்சாவிடம் கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, "அல்லாஹ்வின் மீதாணையாக! (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரான) நாங்கள் அவர்களுடன் விவாதிப்பதுண்டு" என்றார். அதற்கு நான், "அல்லாஹ்வின் தண்டனையையும் அவனுடைய தூதரின் கோபத்தையும் பற்றி உனக்கு நான் எச்சரிக்கிறேன் என்பதை அறிவாயாக! அருமை மகளே! தம்முடைய அழகும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மீது கொண்டுள்ள அன்பும் எவரைப் பூரிப்படைய வைத்துள்ளதோ அவரை (ஆயிஷாவை)ப் பார்த்து நீயும் துணிந்துவிடாதே!" என்று (அறிவுரை) சொன்னேன். பிறகு நான் நேராக (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மற்றொரு துணைவியான) உம்மு சலமாவிடம் (அவருக்கு அறிவுரை கூறச்) சென்றேன். ஏனெனில், அவர் என் (தாய்வழி) உறவினராவார். இது குறித்து அவரிடமும் நான் பேசினேன். அப்போது உம்மு சலமா என்னிடம், "கத்தாபின் புதல்வரே! உம்மைக் கண்டு நான் வியப்படைகிறேன். எல்லா விஷயங்களிலும் தலையிட்டுவந்த நீங்கள், இப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியருக்கும் இடையேயும் தலையிடும் அளவிற்கு வந்துவிட்டீர்களே!" என்று கூறினார். உம்மு சலமா தம் பேச்சால் என்னை ஒரு பிடி பிடித்துவிட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி (கோப உணர்ச்சி)யை உடைத்தெறிந்துவிட்டார். ஆகவே, நான் அவரிடமிருந்து வெளியேறி (வந்து)விட்டேன். அன்சாரிகளில் எனக்கொரு நண்பர் இருந்தார். நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது அவையில்) இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை அவர் எனக்குத் தெரிவிப்பதும், அவர் இல்லாத போது கிடைக்கும் செய்திகளை நான் அவருக்குத் தெரிவிப்பதும் வழக்கம். (அந்தக் கால கட்டத்தில் சிரியா நாட்டு) "ஃகஸ்ஸான்" வமிச மன்னர்களில் ஒருவனைப் பற்றிய அச்சம் எங்களுக்கு இருந்துவந்தது. அவன் எங்கள் (மதீனா)மீது படையெடுக்கத் திட்டமிட்டிருப்பதாக எங்களிடம் சொல்லப்பட்டிருந்தது. இதனால் அவனைக் குறித்த அச்சம் எங்கள் நெஞ்சங்களில் நிரம்பியிருந்தது. இந்நிலையில் (ஒரு நாள்) அந்த அன்சாரி நண்பர் வந்து (என் வீட்டுக்) கதவைத் தட்டினார். "திறங்கள்; திறங்கள்"என்றார். (கதவைத் திறந்த) உடன் நான், "ஃகஸ்ஸானிய (மன்ன)ன் வந்துவிட்டானா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "அதைவிடப் பெரியது நடந்துவிட்டது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடமிருந்து விலகிவிட்டார்கள்" என்றார். உடனே நான், "ஹஃப்ஸா, ஆயிஷா ஆகியோரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்!" என்று கூறிவிட்டு, எனது உடையை எடுத்து (அணிந்து)கொண்டு புறப்பட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, அவர்கள் தமக்குரிய மாடியறையொன்றில் (தங்கி) இருந்தார்கள். ஏணிப்படி வழியாகவே அந்த அறைக்குச் செல்ல முடியும். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய கறுப்புநிறப் பணியாளர் ஒருவர் (ரபாஹ்), ஏணியின் முதற்படியில் இருந்தார். அவரிடம் நான், "இதோ உமர் (வந்துள்ளார் என அல்லாஹ்வின் தூதரிடம் கூறி அனுமதி கேள்)" என்றேன். எனக்கு அனுமதி கிடைத்தபோது (அந்த அறைக்குச் சென்று) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (எனக்கும் அவர்களுடைய துணைவியருக்குமிடையே நடைபெற்ற) இந்த உரையாடல்களை எடுத்துரைத்தேன். உம்மு சலமாவின் பேச்சு வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். அப்போது அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்குமிடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களது தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பெற்ற தோல் தலையணை ஒன்றிருந்தது. அவர்களின் கால்களுக்கு அருகில் கருவேல இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களது தலைமாட்டில் பதனிடப்படா தோல்கள் தொங்கிக்கொண்டிருந்தன. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம் பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு நான் அழுது விட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஏன் அழுகிறீர்கள்?" என்றார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே! (பாரசீக மற்றும் இத்தாலி மன்னர்களான) குஸ்ருவும் சீசரும் இருக்கும் நிலையே வேறு! (தாராளமான உலகச்செல்வங்களுடன் உல்லாசமாக வாழ்கின்றனர்.) தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே?" என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அ(ம்மன்ன)வர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை நீங்கள் திருப்திப்படவில்லையா?" என்று கேட்டார்கள். அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "நான் உமர் (ரலி) அவர்களுடன் (ஹஜ்ஜுக்குச் சென்றுவிட்டு மதீனா நோக்கி) வந்தேன். நாஙகள் "மர்ருழ் ழஹ்ரான்" எனுமிடத்தில் இருந்தபோது" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன. மேலும், அதில் "அவ்விரு பெண்களைப் பற்றி நான் கேட்டேன். அதற்கு "ஹஃப்ஸாவும் உம்மு சலமாவுமே அவ்விருவரும்" என உமர் (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. மேலும் "நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரின்) அறைகளுக்குச் சென்றேன். ஒவ்வொரு வீட்டிலும் அழுகைச் சப்தம் கேட்டது என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்" என்றும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை ஒரு மாத காலம்வரை நெருங்கமாட்டேன்" எனச் சத்தியம் (ஈலா) செய்திருந்தார்கள்; இருபத்தொன்பதாவது நாளானதும் (அந்த அறையிலிருந்து) இறங்கித் தம் துணைவியரிடம் சென்றார்கள்" என்றும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :