ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (விளைச்சலில்) மூன்றில் ஒரு பாகம் அல்லது நான்கில் ஒரு பாகம் அல்லது குறிப்பிட்ட உணவுப் பொருட்களை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் விளைநிலத்தைக் குத்தகைக்கு விட்டுவந்தோம். இந்நிலையில் ஒரு நாள் என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர் எங்களிடம் வந்து, "நமக்குப் பயனளித்துக்கொண்டிருந்த ஒரு காரியத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குத் தடை விதித்துவிட்டார்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுவதே அதைவிட மிகவும் நமக்குப் பயனளிக்கக்கூடியதாகும். நிலத்தைக் குத்தகைக்கு விட்டு, (விளைச்சலில்) மூன்றில் ஒரு பாகத்தையோ, நான்கில் ஒரு பாகத்தையோ, குறிப்பிட்ட உணவுப் பொருளையோ பெற்றுக்கொள்ள தடை விதித்தார்கள். நிலத்தின் உரிமையாளர் அதில் தாமே பயிரிட வேண்டும்; அல்லது (யாருக்கேனும்) பயிரிடக் கொடுத்துவிட வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள்; நிலத்தைக் குத்தகைக்கு விடுவதையும் அது அல்லாத முறையில் பயனடைவதையும் வெறுத்தார்கள்" என்றார். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "(விளைச்சலில்) மூன்றில் ஒரு பாகம் அல்லது நான்கில் ஒரு பாகத்தை எங்களுக்குத் தந்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் விளைநிலத்தைக் குத்தகைக்கு விட்டு வந்தோம்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. - மேற்கண்ட ஹதீஸ் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடமிருந்து மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ராஃபிஉ (ரலி) அவர்கள் தெரிவித்ததாகவே இடம்பெற்றுள்ளது. ராஃபிஉ (ரலி) அவர்கள் தம் தந்தையின் சகோதரர்கள் சிலரிடமிருந்து அறிவித்ததாக இடம்பெறவில்லை. அத்தியாயம் :
ஹன்ழலா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் நிலத்தைக் குத்தகைக்கு விடுவது பற்றிக் கேட்டேன். அவர்கள், "நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்" என்று பதிலளித்தார்கள். உடனே நான், "தங்கம் மற்றும் வெள்ளிக் (காசுகளுக்)குப் பதிலாக நிலத்தைக் குத்தகைக்கு விடலாமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தங்கம் மற்றும் வெள்ளிக் (காசுகளுக்)குப் பதிலாக நிலத்தைக் குத்தகைக்கு விடுவதில் குற்றமில்லை" என்றார்கள். அத்தியாயம் :
ஹன்ழலா பின் கைஸ் அல்அன்சாரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் தங்கம் மற்றும் வெள்ளிக் (காசுகளுக்)குப் பதிலாக நிலத்தைக் குத்தகைக்கு விடுவது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: குற்றமில்லை; நபி (ஸல்) அவர்களது காலத்தில் நீரோடை ஓரத்தில் விளைபவற்றை, அல்லது வாய்க்கால் முனையில் விளைபவற்றை, அல்லது விளைச்சலில் (குறிப்பிட்ட) சிலவற்றை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரிலேயே நிலத்தை வாடகைக்கு விட்டுவந்தனர். இதில் இவர் பாதிப்படைவார்; அவர் தப்பித்துக்கொள்வார். அல்லது இவர் தப்பித்துக்கொள்வார்; அவர் பாதிப்படைவார். இந்தக் குத்தகை முறையைத் தவிர வேறெதுவும் அவர்களிடம் இருக்கவில்லை. ஆதலால்தான், அது கண்டிக்கப்பட்டது. அறியப்பட்ட ஒரு பொருள் பிணையாக்கப்படுமானால் அ(தற்காக நிலத்தைக் குத்தகைக்கு விடுவ)தில் குற்றமில்லை. அத்தியாயம் :