அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாக பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அடிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக்காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் கொடு(க்குமாறு உத்தரவு பிறப்பி)த்தார்கள். உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்த வேளையில், (சிரியா, இராக் போன்ற பகுதிகள் வெற்றி கொள்ளப்பட்டு) மக்கள் கிராமப்புறங்களிலும் செழிப்பான பகுதிகளிலும் குடியேறியபோது (வாழ்க்கை வசதிகள் பெருகி,குடிப்பழக்கம் அதிகரித்தது. அப்போது), "மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை விஷயத்தில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று மக்களிடம் கேட்டார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், "(குர்ஆனில் கூறப்பட்ட) குற்றவியல் தண்டனைகளிலேயே மிகவும் குறைந்தபட்ச தண்டனையை (எண்பது கசை யடி) அதற்குரிய தண்டனையாக நீங்கள் ஆக்க வேண்டுமென நான் கருதுகிறேன்" என்றார்கள். இதன்படி உமர் (ரலி) அவர்கள் எண்பது சாட்டையடிகள் வழங்கினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூசாசான் ஹுளைன் பின் அல்முன்திர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (கலீஃபா) உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள் (அங்கு) கொண்டுவரப்பட்டார். அவர் சுப்ஹுத் தொழுகை இரண்டு ரக்அத் தொழுவித்துவிட்டு, "உங்களுக்கு நான் இத்தொழுகையைக் கூடுதலாக்கப் போகிறேன்" என்று கூறியிருந்தார். அப்போது அவருக்கெதிராக இருவர் சாட்சியமளித்தனர். அவர்களில் ஒருவரான ஹும்ரான் பின் அபான், "அவர் (வலீத்) மது அருந்தியிருந்தார்" என்று சாட்சியம் அளித்தார். மற்றொருவர் வலீத் வாந்தியெடுத்ததைத் தாம் கண்டதாகச் சாட்சியமளித்தார். உஸ்மான் (ரலி) அவர்கள், "அவர் மது அருந்தியதாலேயே வாந்தியெடுத்தார்" என்று கூறிவிட்டு, "அலீயே! நீங்கள் எழுந்து அவருக்கு (மது அருந்திய குற்றத்திற்காக)ச் சாட்டையடி வழங்குங்கள்" என்று கூறினார்கள். உடனே அலீ (ரலி) அவர்கள் (தம் புதல்வரிடம்) "ஹசனே! நீர் எழுந்து அவருக்குச் சாட்டையடி வழங்கு" என்று கூறினார்கள். அதற்கு ஹசன் (ரலி) அவர்கள், (உஸ்மான் (ரலி) அவர்கள்மீது கோபம் கொண்டவரைப் போன்று) "ஆட்சியின் குளிர்ச்சிக்குப் பொறுப்பேற்றவர்களையே அதன் வெப்பத்துக்கும் பொறுப்பேற்கச் செய்யுங்கள்" என்று கூறிவிட்டார்கள். உடனே அலீ (ரலி) அவர்கள் (தம் சகோதரரின் புதல்வரிடம்) "அப்துல்லாஹ் பின் ஜஅஃபரே! நீர் எழுந்து அவருக்குச் சாட்டையடி வழங்குவீராக" என்று சொன்னார்கள். அவ்வாறே அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் அவர்கள், வலீதுக்குச் சாட்டையடி வழங்கினார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் (அப்துல்லாஹ் எத்தனை முறை அடிக்கிறார் என்பதை) எண்ணிக்கொண்டிருந்தார்கள். நாற்பது அடியானதும் "போதும் நிறுத்து" என்றார்கள். பிறகு, "(மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாக) நபி (ஸல்) அவர்கள் நாற்பது சாட்டையடிகள் வழங்கினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் (தமது ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் வழங்கினார்கள். உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) எண்பது சாட்டையடிகள் வழங்கினார்கள். எல்லாம் (பின்பற்றத் தகுந்த) வழிமுறைகளே. ஆயினும், இ(றைத்தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் வழங்கிய நாற்பது சாட்டையடிகளான)து எனக்கு மிகவும் விருப்பமானதாகும்" என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். மேற்கண்ட ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அலீ பின் ஹுஜ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் இந்த ஹதீஸை அப்துல்லாஹ் அத்தானாஜ் (ரஹ்) அவர்களிடமிருந்தே (நேரடியாகக்) கேட்டிருந்தேன். ஆனால், அதை மனனம் செய்ய வில்லை. (பின்னர் இப்னு அபீஅரூபா (ரஹ்) அவர்களிடம் கேட்டே இப்போது அறிவிக்கிறேன்) என இஸ்மாயீல் பின் உலய்யா (ரஹ்) அவர்கள் கூடுதலாகக் கூறினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் தண்டனை நிறைவேற்றியதால் எவரேனும் இறந்துபோனால் (அதற்காக) நான் கவலை அடையப்போவதில்லை. குடிகாரனைத் தவிர! ஏனெனில், (தண்டனை வழங்கப்பட்டதால்) குடிகாரன் இறந்துபோனால் அவனுக்காக நான் உயிரீட்டுத் தொகை வழங்கிவிடுவேன். இதற்குக் காரணம், (மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குறிப்பிட்ட தண்டனை எதையும்) வழிமுறையாக்கவில்லை. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அவையில் இருந்தோம். அப்போது அவர்கள், "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிப்பதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; திருடுவதில்லை; கொல்லக் கூடாதென அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் முறையின்றிக் கொல்வதில்லை" என்று என்னிடம் உறுதிமொழி அளியுங்கள்" என்று கூறினார்கள். மேலும், "இந்த உறுதிமொழியை உங்களில் யார் நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய பிரதிபலன் இறைவனிடம் உண்டு. மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையேனும் ஒருவர் செய்து. அதற்காக அவர் (இவ்வுலகில்) தண்டிக்கப்பட்டுவிட்டால். அது அவருக்குப் பரிகாரமாகிவிடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையேனும் ஒருவர் செய்து,பின்னர் அல்லாஹ் அதை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால், அவரது விவகாரம் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படும். அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; நாடினால் அவரைத் தண்டிப்பான்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவர்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைப்பதில்லை...”” எனத்தொடங்கும் பெண்கள் தொடர்பான (60:12ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களிடம் உறுதிமொழி வாங்கியதைப் போன்றே, (ஆண்களாகிய) எங்களிடமும் "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்கமாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்யமாட்டோம்;எங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டோம்; எங்களில் சிலர் வேறுசிலர் மீது அவதூறு கூறமாட்டோம்" என உறுதிமொழி வாங்கினார்கள். மேலும், "இந்த உறுதிமொழியை உங்களில் யார் நிறைவேற்றுகின்றாரோ அவருக்குரிய பிரதிபலன் இறைவனிடம் உண்டு. தண்டனைக்குரிய குற்றத்தை உங்களில் எவரேனும் செய்து, அதற்காக அவர் தண்டிக்கப்பட்டால் அது அவருக்குப் பரிகாரமாகிவிடும். யாருடைய குற்றத்தை அல்லாஹ் மறைத்துவிட்டானோ அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; நாடினால் அவரை மன்னிப்பான். அத்தியாயம் :