அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: "ஸிஃப்பீன்" போரின்போது சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் "மக்களே! (நான் இந்தப் போரில் ஈடுபாடு காட்டாததைக் குறித்து என்னைக் குற்றம் சாட்டாதீர்கள்) உங்களது கருத்தையே குறை காணுங்கள். அபூஜந்தல் (அபயம் தேடிவந்த ஹுதைபியா உடன்படிக்கை) நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையை மறுப்பதற்கு என்னால் முடிந்திருந்தால் நான் மறுத்திருப்பேன். (அத்தகைய மன நிலையில் அன்று நான் இருந்தேன்.) (அன்று) நாங்கள் எங்கள் வாட்களை எங்கள் தோள்களில் (முடக்கி) வைத்துக்கொண்டது, ஒருபோதும் போருக்கு அஞ்சியல்ல. நாங்கள் அறிந்த ஓர் எளிய விஷய(மான சமாதான)த்திற்காகத்தான். ஆனால், உங்களது இந்த விவகாரம் (ஸிஃப்பீன் போர் அவ்வாறன்று)" எனக் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஒருபோதும் போருக்கு" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "எங்கள் தோள்களில் நாங்கள் வாட்களை (முடக்கி) வைத்துக்கொண்டது, எங்களுக்குச் சிரமம் தரும் போருக்கு அஞ்சி அல்ல" என்று சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: "ஸிஃப்பீன்" போரின்போது சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டேன்: (நான் இந்தப் போரில் ஈடுபாடு காட்டாதது குறித்து என்னைக் குற்றம் சாட்டாதீர்கள்) உங்கள் மார்க்க விஷயத்தில் நீங்கள் எடுத்துள்ள முடிவையே குறை காணுங்கள். அபூஜந்தல் (அபயம் தேடி வந்த ஹுதைபியா) நாளில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையை ஏற்க மறுப்பதற்கு என்னால் முடிந்திருந்தால் (ஏற்க மறுத்திருப்பேன். அத்தகைய மனோ நிலையில்தான் நான் அன்று இருந்தேன்.) (ஆனால், இன்று உங்கள்) பிரச்சினையில் ஒரு மூலையை (அடைத்து)ச் சீராக்கும்போது, மற்றொரு மூலை நம் முன்னே வெடித்துத் திறந்துகொள்கிறது. அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (உம்ரா வழிபாட்டை நிறைவேற்ற முடியாமல் போனதால்) ஹுதைபியா எனுமிடத்திலேயே பலிப்பிராணியை அறுத்துவிட்டு, அங்கிருந்து (மதீனா நோக்கி) திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது நபித்தோழர்களைக் கவலையும் சோகமும் தழுவியிருந்தன. இந்நிலையில்தான் (அவர்களுக்கு), "(நபியே!) உமக்குத் தெளிவானதொரு வெற்றியை நாம் அளித்தோம். உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னித்து, அவன் தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்தி, உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும் (இந்த வெற்றியை அவன் அளித்தான்)" என்று தொடங்கி, "இது அல்லாஹ்விடம் மகத்தான வெற்றியாக இருக்கிறது" என்பதுவரை (48:1-5) இறைவசனங்கள் அருளப்பெற்றன. அப்போது நபி (ஸல்) அவர்கள், "எனக்கு ஓர் இறைவசனம் அருளப்பெற்றுள்ளது. அது இவ்வுலகிலுள்ள அனைத்தையும்விட எனக்கு மிகவும் உவப்பானதாகும்" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பத்ருப் போரில் கலந்துகொள்ளாததற்குக் காரணம் யாதெனில், நானும் என் தந்தை ஹுசைல் (எனும் அல்யமான்) அவர்களும் (பத்ர் நோக்கிப்) புறப்பட்டோம். அப்போது குறைஷி இறைமறுப்பாளர்கள் எங்களைப் பிடித்துக்கொண்டனர். "நீங்கள் முஹம்ம(துடன் சேர்ந்து எங்களுக்கெதிராகப் போர் செய்வ)தை நாடித்தானே செல்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். நாங்கள் "(இல்லை) மதீனாவை நோக்கியே செல்கிறோம்" என்று (பேச்சை மாற்றிச்) சொன்னோம். அப்போது குறைஷியர் "நாங்கள் மதீனாவுக்கே திரும்பிவிட வேண்டும்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து (குறைஷியருக்கெதிராக) போரிடக் கூடாது" என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு எங்களிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டனர். நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தோம். அப்போது அவர்கள், "நீங்கள் இருவரும் (மதீனாவுக்கே) திரும்பிச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கு ஆதரவாக அவர்களது வாக்குறுதியை நிறைவேற்றுவோம். அவர்களுக்கெதிராக அல்லாஹ்விடம் உதவி கோருவோம்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
யஸீத் பின் ஷரீக் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நாங்கள் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது ஒரு மனிதர், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்திருந்தால், அவர்களுடன் சேர்ந்து போர்களில் ஈடுபட்டிருப்பேன்; கடுமையாக உழைத்திருப்பேன்" என்று கூறினார். அதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நீ அவ்வாறு செய்திருக்கவாபோகிறாய்? அகழ்ப் போர் இரவில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். கடுமையான காற்றும் குளிரும் எங்களை வாட்டிக்கொண்டிருந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "எதிரிகள் பற்றிய செய்தியை (உளவறிந்து) என்னிடம் கொண்டுவருபவர் யார்? அவரை மறுமை நாளில் அல்லாஹ் என்னுடன் இருக்கச் செய்வான்" என்று கூறினார்கள். நாங்கள் மௌனமாக இருந்தோம். எங்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. பிறகு மீண்டும் "எதிரிகள் பற்றிய செய்தியை (உளவறிந்து) நம்மிடம் கொண்டுவருபவர் யார்? அவரை மறுமை நாளில் அல்லாஹ் என்னுடன் இருக்கச் செய்வான்" என்று கூறினார்கள். அப்போதும் நாங்கள் அமைதியாக இருந்தோம். எங்களில் யாரும் அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. பிறகு (மூன்றாவது முறையாக), "எதிரிகள் பற்றிய செய்தியை (உளவறிந்து) நம்மிடம் கொண்டுவருபவர் யார்? அவரை மறுமை நாளில் அல்லாஹ் என்னுடன் இருக்கச் செய்வான்" என்று கூறினார்கள். அப்போதும் நாங்கள் அமைதியாகவே இருந்தோம். எங்களில் யாரும் அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹுதைஃபா! எதிரிகளைப் பற்றிய செய்தியை (உளவறிந்து) என்னிடம் கொண்டுவா" என்று கூறினார்கள். எனது பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் என்னை அழைத்துவிட்டதால் என்னால் மறுக்க முடியவில்லை. நான் எழுந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், " நீ சென்று எதிரிகளைப் பற்றிய செய்தியை (உள வறிந்து) என்னிடம் கொண்டுவா! எதிரிகளை எனக்கெதிராக விழிப்படையச் செய்துவிடாதே" என்று கூறினார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து விடைபெற்று (எதிரிகளை நோக்கி)ச் சென்றபோது, நான் வெண்ணீரில் நடப்பதைப் போன்றிருந்தது (குளிரே எனக்குத் தெரிய வில்லை). இந்நிலையில் நான் எதிரிகளிடம் வந்துசேர்ந்தேன். அப்போது (எதிரிகளின் தலைவர்) அபூசுஃப்யான் தமது முதுகை நெருப்பில் காட்டி, குளிர் காய்ந்துகொண்டிருந்தார். நான் எனது வில்லின் நடுவே ஓர் அம்பைப் பொருத்தி அவர்மீது எய்யப்போனேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் "எனக்கெதிராக எதிரிகளை விழிப்படையச் செய்துவிடாதே" என்று கூறியதை நான் நினைவுகூர்ந்தேன். அப்போது மட்டும் நான் அம்பை எய்திருந்தால், அவரை நிச்சயமாக நான் தாக்கியிருப்பேன். பிறகு நான் வெண்ணீரில் நடப்பதைப் போன்றே, (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) திரும்பி வந்தேன். அவர்களிடம் சென்று எதிரிகளைப் பற்றிய செய்திகளைத் தெரிவித்தேன். நான் செய்திகளைச் சொல்லி முடித்ததும் குளிர் என்னைத் தாக்கத் தொடங்கியது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மீது இருந்த போர்வையின் ஒரு கூடுதலான பகுதியை எனக்கு அணி வித்தார்கள். அந்தப் போர்வையைப் போர்த்திக்கொண்டுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அப்போது) தொழுது கொண்டிருந்தார்கள். அதிகாலைவரை நான் (அப்போர்வையில்) உறங்கிக்கொண்டேயிருந்தேன். அதிகாலையானதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தூங்கு மூஞ்சி! எழுந்திரு" என்றார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுதுப் போர் நாளில் (ஒரு கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் எழுவரும் குறைஷியரில் (முஹாஜிர்களில்) இருவரும் மட்டுமே தம்முடனிருக்க தனித்து விடப்பட்டார்கள். (மற்ற தோழர்கள் சிதறி ஓடிவிட்டனர்.) இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிரிகள் நெருங்கிய போது, "நம்மிடமிருந்து இவர்களை விரட்டியடிப்பவர் யார்? "அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்"; அல்லது "அவர் சொர்க்கத்தில் என்னுடன் இருப்பார்"என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் முன்னேறிச் சென்று போரிட்டார். இறுதியில் அவர் கொல்லப்பட்டார். பிறகு மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிரிகள் நெருங்கினார்கள். அப்போது "நம்மிடமிருந்து இவர்களை விரட்டியடிப்பவர் யார்? "அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்"; அல்லது "அவர் சொர்க்கத்தில் என்னுடன் இருப்பார்" என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் மற்றொரு மனிதர் முன்னேறிச் சென்று எதிரிகளுடன் போரிட்டார். அவரும் கொல்லப்பட்டார். இவ்வாறே (ஒருவர் பின் ஒருவராகச்) சென்று அன்சாரிகள் எழுவரும் கொல்லப்பட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உடனிருந்த) தம்மிரு (குறைஷித்) தோழர்களிடம், "நாம் நம்முடைய (அன்சாரித்) தோழர்களிடம் நியாயமாக நடந்துகொள்ள வில்லை" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 4642 — Sahih Muslim 32:124
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ سَهْلَ بْنَ سَعْدٍ، يُسْأَلُ عَنْ جُرْحِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ فَقَالَ جُرِحَ وَجْهُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَكُسِرَتْ رَبَاعِيَتُهُ وَهُشِمَتِ الْبَيْضَةُ عَلَى رَأْسِهِ فَكَانَتْ فَاطِمَةُ بِنْتُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم تَغْسِلُ الدَّمَ وَكَانَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ يَسْكُبُ عَلَيْهَا بِالْمِجَنِّ فَلَمَّا رَأَتْ فَاطِمَةُ أَنَّ الْمَاءَ لاَ يَزِيدُ الدَّمَ إِلاَّ كَثْرَةً أَخَذَتْ قِطْعَةَ حَصِيرٍ فَأَحْرَقَتْهُ حَتَّى صَارَ رَمَادًا ثُمَّ أَلْصَقَتْهُ بِالْجُرْحِ فَاسْتَمْسَكَ الدَّمُ .
அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு உஹுதுப் போர் நாளில் ஏற்பட்ட காயங்கள் குறித்துக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் கூறினார்கள்: (அன்றைய தினத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது. அவர்களின் முன்வாய்ப்பற்களில் (கீழ் வரிசையில் வலப்புறப் பல்) ஒன்று உடைக்கப்பட்டது. தலைக் கவசம் அவர்களது தலையில் வைத்தே நொறுக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முகத்திலிருந்து வழிந்த) இரத்தத்தைக் கழுவிக்கொண்டிருந்தார்கள். அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் (தமது) கேடயத்தில் தண்ணீர் (நிரப்பி வந்து அந்தக் காயத்தைக் கழுவுவதற்காக) ஊற்றிக்கொண்டிருந்தார்கள். தண்ணீர் மேன்மேலும் இரத்தத்தை அதிகமாக்குவதையே கண்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள், ஒரு பாய்த் துண்டை எடுத்து வந்து சாம்பலாகும்வரை அதைக் கரித்து, அதைக் காயத்தில் வைத்து அழுத்தினார்கள். இரத்தம் (வழிவது) நின்றுவிட்டது. அத்தியாயம் :
ஹதீஸ் 4643 — Sahih Muslim 32:125
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، - يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيَّ - عَنْ أَبِي حَازِمٍ، أَنَّهُ سَمِعَ سَهْلَ بْنَ سَعْدٍ، وَهُوَ يُسْأَلُ عَنْ جُرْحِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ أَمَ وَاللَّهِ إِنِّي لأَعْرِفُ مَنْ كَانَ يَغْسِلُ جُرْحَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَمَنْ كَانَ يَسْكُبُ الْمَاءَ . وَبِمَاذَا دُووِيَ جُرْحُهُ . ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِ عَبْدِ الْعَزِيزِ غَيْرَ أَنَّهُ زَادَ وَجُرِحَ وَجْهُهُ وَقَالَ مَكَانَ هُشِمَتْ كُسِرَتْ .
மேற்கண்ட ஹதீஸ் அபூஹாஸிம் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு ஹதீஸ் ஆரம்பமாகிறது: சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (உஹுதுப் போரில்) ஏற்பட்ட காயங்கள் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள், "இதோ! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காயத்தைக் கழுவிவிட்டவரையும், (கழுவுவதற்காகத்) தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்தவரையும், மருந்துக்குப் பயன்படுத்தப்பட்ட பொருளையும் நான் அறிவேன்" என்று கூறிவிட்டுத் தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி கூறினார்கள். ஆயினும், இந்த அறிவிப்பில் "அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது" எனும் தகவல் (ஹதீஸின் இறுதியில்) இடம்பெற்றுள்ளது. ("உடைக்கப்பட்டது" என்பதைக் குறிக்க) "ஹுஷிமத்" என்பதற்குப் பதிலாக "குசிரத்" எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. அத்தியாயம் :