அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூமூசா (ரலி) அவர்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களின் (வீட்டு) வாசலுக்குச் சென்று (உள்ளே நுழைய) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் "ஒன்று" என்றார்கள். பிறகு அபூமூசா (ரலி) அவர்கள் இரண்டாவது முறை அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் "இரண்டு" என்றார்கள். பிறகு அபூமூசா (ரலி) அவர்கள் மூன்றாவது முறை அனுமதி கேட்ட போது, உமர் (ரலி) அவர்கள் "மூன்று" என்றார்கள். பிறகு அபூமூசா (ரலி) அவர்கள் திரும்பி வந்துவிட்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் அபூமூசா (ரலி) அவர்களைப் பின்தொடர்ந்து வந்து தம்மிடம் திரும்பிவரச் செய்து, "இவ்வாறு நீர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து மனனமிட்டிருந்தால் அதற்கு ஆதாரம் கொண்டுவாருங்கள். இல்லாவிட்டால் உம்மை (மற்றவர்களுக்கு) ஒரு பாடமாக ஆக்கி விடுவேன்" என்று கூறினார்கள். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் எங்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அனுமதி கோருதல் மூன்று முறையாகும்" என்று கூறியதை நீங்கள் அறிவீர்களா?" என்று கேட்டார்கள். அதைக் கேட்டு மக்கள் சிரிக்கலாயினர். உடனே நான், "உங்களுடைய முஸ்லிம் சகோதரர் பீதிக்குள்ளாக்கப்பட்ட நிலையில் உங்களிடம் வந்துள்ளார். (அவரைக் கண்டு) நீங்கள் சிரிக்கிறீர்களே?" என்று கூறிவிட்டு, (அபூமூசா (ரலி) அவர்களிடம்) "நீங்கள் வாருங்கள். இந்தத் தண்டனையில் உங்களுக்கு நான் பங்காளியாவேன்" என்று கூறிவிட்டு, உமர் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள், "இதோ அபூசயீத் (சாட்சி)" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூமூசா (ரலி) அவர்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் (சென்று அவர்களது இல்லத்திற்குள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டார்கள். (ஆனால், அவர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. அப்போது) உமர் (ரலி) அவர்கள் ஏதோ அலுவலில் ஈடுபட்டிருந்ததைக் கண்டார்கள் போலும். எனவே, அபூமூசா (ரலி) அவர்கள் திரும்பிவிட்டார்கள். (அலுவலை முடித்த) பிறகு உமர் (ரலி) அவர்கள், "அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்களின் (அபூமூசா) குரலை நீங்கள் கேட்கவில்லையா? அவருக்கு அனுமதி அளியுங்கள்" என்றார்கள். பிறகு அபூமூசா (ரலி) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "இவ்வாறு நீங்கள் செய்ததற்கு என்ன காரணம் (ஏன் மூன்று முறை அனுமதி கோரி விட்டுத் திரும்பிச் சென்றுவிட்டீர்கள்)?" என்று கேட்டார்கள். அபூமூசா (ரலி) அவர்கள், "இவ்வாறே நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம்" என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் இதற்குரிய சான்றை நிலைநிறுத்த வேண்டும். அல்லது நான் (இன்னின்னவாறு) நடவடிக்கை எடுப்பேன்" என்றார்கள். எனவே, அபூமூசா (ரலி) அவர்கள் அன்சாரிகளின் அவையொன்றை நோக்கிப் புறப்பட்டார்கள். அன்சாரிகள், "எங்களில் சிறியவர் ஒருவரே இதற்காக உமக்குச் சாட்சியமளிப்பார்" என்று கூறினர். ஆகவே, அபூசயீத் (ரலி) அவர்கள் எழுந்து (உமர் (ரலி) அவர்களிடம் சென்று), "இவ்வாறே நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம்" என்று கூற, உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த விவரம் எனக்குத் தெரியாமல் போய் விட்டதே! (நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறிய நாளில்) கடைவீதிகளில் நான் வணிகத்தில் ஈடுபட்டிருந்தது எனது கவனத்தைத் திசை திருப்பிவிட்டது (போலும்)" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் நள்ர் பின் ஷுமைல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "கடைவீதிகளில் நான் வணிகத்தில் ஈடுபட்டிருந்தது எனது கவனத்தைத் திசை திருப்பிவிட்டது" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் வந்து, "அஸ்ஸலாமு அலைக்கும். இதோ! அப்துல்லாஹ் பின் கைஸ் வந்துள்ளேன்" என்று கூறி (அனுமதி கோரி)னேன். அவர்கள் எனக்கு அனுமதி வழங்கவில்லை. பிறகு (மீண்டும்) நான், "அஸ்ஸலாமு அலைக்கும். இதோ! அபூமூசா (வந்துள்ளேன்). அஸ்ஸலாமு அலைக்கும். இதோ! அஷ்அரீ (வந்துள்ளேன்)" என்று (இன்னும் இரண்டு முறை) அனுமதி கோரினேன். (அனுமதி கிடைக்காததால்) பிறகு நான் திரும்பி வந்துவிட்டேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் "அவரை என்னிடம் அழைத்து வாருங்கள். அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்"என்று கூறினார்கள். நான் (மீண்டும்) வந்தபோது, "அபூமூசா! ஏன் திரும்பிச் சென்றீர்? நாம் ஓர் அலுவலில் ஈடுபட்டிருந்தோம்" என்று கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அனுமதி கோருதல் மூன்று முறையாகும். (மூன்று முறைக்குள்) உமக்கு அனுமதி வழங்கப்பட்டால் சரி. இல்லாவிட்டால் நீர் திரும்பிவிடுக" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்"என்றேன். உமர் (ரலி) அவர்கள் "இ(வ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சி கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் இப்படி இப்படிச் செய்து விடுவேன்" என்று கூறினார்கள். ஆகவே, நான் (அன்சாரிகளின் அவைக்குச்) சென்றேன். உமர் (ரலி) அவர்கள், "அவருக்குச் சாட்சி கிடைத்தால் மாலையில் அவரைச் சொற்பொழிவு மேடைக்கு அருகில் நீங்கள் காண்பீர்கள். சாட்சி கிடைக்காவிட்டால் அவரை நீங்கள் காணமாட்டீர்கள்" என்று கூறினார்கள். மாலை நேரமானபோது என்னைக் கண்ட மக்கள், "அபூமூசா! நீர் என்ன சொல்கிறீர்? சாட்சி கிடைத்துவிட்டாரா?" என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நான் "ஆம், உபை பின் கஅப் (ரலி) அவர்களே (சாட்சி)" என்றேன். உமர் (ரலி) அவர்கள் "அவர் நேர்மையானவர்தாம்" என்று கூறி விட்டு, "அபுத்துஃபைல்! இவர் என்ன சொல்கிறார்?" என்று கேட்டார்கள். அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், "கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நான் கேட்டுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு நீரே ஒரு வேதனையாக ஆகிவிடாதீர்" என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்). இதைக் குறித்து ஒன்றைக் கேள்விப்பட்டேன். அதை உறுதி செய்துகொள்ளவே விரும்பினேன்" என்றார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், உமர் (ரலி) அவர்கள், "அபுல்முன்திர்! நீங்கள் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், "ஆம், கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு நீரே ஒரு வேதனையாக ஆகிவிடாதீர்" என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது. அதில் உமர் (ரலி) அவர்கள் "சுப்ஹானல்லாஹ்" என்று கூறியதும் அதற்குப் பின் உள்ளவையும் இடம்பெறவில்லை. அத்தியாயம் :