அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: தானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, நாங்கள் (சுமைதூக்கி) கூலி வேலை செய்யலானோம். அபூ அகீல் (ஹப்ஹாப்-ரலி) அவர்கள் (கூலி வேலை செய்து) அரை "ஸாஉ" பேரீச்சம் பழம் (கொண்டு வந்து) தர்மம் செய்தார். மற்றொரு மனிதர் அதைவிடச் சிறிது அதிகமாகக் கொண்டுவந்(து தர்மம் செய்)தார். இதைக் கண்ட நயவஞ்சகர்கள், (அரை "ஸாஉ" கொண்டுவந்த) இவரது தர்மமெல்லாம் அல்லாஹ்விற்குத் தேவையில்லை; (அதைவிட அதிகமாகக் கொண்டுவந்த) இந்த மற்றொரு மனிதர் பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகவே (தர்மம்) செய்தார்" என்று (குறை) சொன்னார்கள். அப்போதுதான் "(நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகையவர்கள் என்றால், இறை நம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரி வழங்குவோரின் தானதர்மங்களைப் பற்றியும் குறை பேசுகின்றார்கள். (இறைவழியில் ஈவதற்காகச்) சிரமப்பட்டு சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதவர்களைப் பற்றியும் அவர்கள் நகைக்கின்றார்கள். அல்லாஹ் அவர்களை நகைக்கின்றான். மேலும்,அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு" எனும் (9:79ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் பிஷ்ர் பின் காலித் (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில் "மனமுவந்து வாரி வழங்குவோர்" எனும் சொல்லைக் குறிப்பிடவில்லை. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், சயீத் பின் அர்ரபீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நாங்கள் எங்களுடைய முதுகுகளில் (சுமை)தூக்கி கூலிவேலை செய்யலானோம்" என்று (அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: காலையில் ஒரு பெரிய பாத்திரம் (நிறையப்) பாலும் மாலையில் ஒரு பெரிய பாத்திரம் (நிறையப்) பாலும் தருகின்ற ஓர் ஒட்டகத்தை ஒரு வீட்டாருக்கு இரவலாகத் தரக்கூடிய மனிதர் எவரேனும் (உங்களில்) உண்டா? இதற்குரிய நற்பலன் நிச்சயமாக மிகப் பெரியதாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கஞ்சன் மற்றும் தர்மம் செய்கின்றவரின் நிலையானது, இரும்பாலான இரு கவசங்கள் அணிந்த இரு மனிதர்களின் நிலைக்கு ஒத்திருக்கிறது. தர்மம் செய்பவர் ஒன்றைத் தர்மம் செய்ய எண்ணும்போது, அவரது கவசம் விரிவடைந்து, அவரது பாதச்சுவடுகளைக்கூட(த் தொட்டு) அழித்துவிடுகிறது. (ஆனால்,) கஞ்சனோ ஒன்றைத் தர்மம் செய்ய எண்ணும்போது, அவனது கவசம் அவனை அழுத்தி, அவனுடைய கைகள் கழுத்தெலும்புவரை சென்று ஒட்டிக்கொள்கின்றன. கவசத்தின் ஒவ்வொரு வளையமும் மற்றதன் இடத்தை இறுக்கிப் பிடிக்கிறது. அதை விரிவுபடுத்த அவன் முனைவான். ஆனால், அவனால் இயலாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கஞ்சனின் நிலையோடு ஒப்பிடுகையில் தாராள மனத்துடன்)செலவு செய்கின்ற தர்மசீலரின் நிலையானது, மார்பிலிருந்து கழுத்தெலும்பு வரை (இரும்பாலான) "இரு நீளங்கிகள்" அல்லது "இரு கவசஆடைகள்" அணிந்துள்ள (இரு) மனிதரின் நிலையைப் போன்றதாகும். "(தாராள மனத்துடன்) செலவு செய்கின்றவர்" அல்லது "தர்மம் செய்கின்றவர்" தர்மம் செய்ய எண்ணும் போது அவரது கவசம் "விரிவடைந்து" அல்லது "(நீண்டு) சென்று" அவரது விரல் நுனிகளை மறைத்து (அதற்கப்பால்) அவரது பாதச் சுவடுகளைக்கூட(த் தொட்டு) அழித்து விடுகிறது. (ஆனால்,) கஞ்சன் செலவு செய்ய எண்ணும்போது அவனது கவசம் அவனை அழுத்தி, அதன் ஒவ்வொரு வளையமும் அதனதன் இடத்தை (இறுகப்) பிடித்துவிடுகிறது. அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது - அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஞ்சனுக்கும் தர்மம் செய்கின்றவனுக்கும் பின்வருமாறு உதாரணம் கூறினார்கள்: அவ்விருவரின் நிலையானது, இரும்பாலான இரு கவசங்கள் அணிந்துள்ள இரு மனிதர்களின் நிலையை ஒத்திருக்கிறது. அவர்களின் கைகள் அவர்களுடைய மார்போடும் கழுத்தெலும்புகளோடும் பிணைக்கப்பட்டுள்ளன. தர்மம் செய்கின்றவர் ஒன்றைத் தர்மம் செய்யும் போதெல்லாம் அவரது கவசம் விரிந்து, அவரது விரல்நுனிகளை மறைத்து, பாதச்சுவடுகளைக் கூட(த் தொட்டு) அழிக்கத் தொடங்குகிறது. (ஆனால்,) கஞ்சனோ ஒன்றைத் தர்மம் செய்ய எண்ணும் போதெல்லாம் அவனது கவசம் அவனை அழுத்தி, அதன் ஒவ்வொரு வளையமும் அதனதன் இடத்தை (இறுக்கிப்) பிடிக்கத் துவங்குகிறது. அவன் தனது கவசத்தை விரிவுபடுத்த முயலும்போது நீ பார்த்தால் (வியப்புத்தான் ஏற்படும்; ஏனெனில்,) அது விரியாது. இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (இதைக் கூறியபோது) அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் தமது விரலால் தமது சட்டைக் கழுத்தை (நெருக்கி), (இவ்வாறு) சுட்டிக் காட்டினார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) ஒருவர் "நான் இன்றிரவு தர்மம் செய்யப்போகிறேன்" எனக் கூறிக்கொண்டு, (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து, (தெரியாமல்) அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்து விட்டார். காலையில் மக்கள், "இன்றிரவு ஒரு விபச்சாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது" எனப் பேசிக்கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், "இறைவா! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ் அனைத்தும் உரியது. (நாளையும்) நான் தர்மம் செய்வேன்" என்று கூறினார். மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளியே வந்து, அதை ஒரு பணக்காரரின் கையில் கொடுத்துவிட்டார். மறுநாள் காலையில் மக்கள், "ஒரு பணக்காரருக்குத் தர்மம் செய்யப்பட்டுள்ளது" எனப் பேசிக்கொண்டனர். (இதைக்கேட்ட) அவர், "இறைவா! பணக்காரருக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ் அனைத்தும் உரியது. (நாளையும்) நான் தர்மம் செய்வேன்" என்று கூறினார். (மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் புறப்பட்டுச் சென்று, ஒரு திருடனின் கையில் அதைக் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், "இன்றிரவு ஒரு திருடனுக்குத் தர்மம் செய்யப் பட்டுள்ளது" என்று பேசிக்கொண்டனர். உடனே அவர், "இறைவா! விபச்சாரிக்கும் பணக்காரனுக்கும் திருடனுக்கும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும் உரியது" எனக் கூறினார். பின்னர் (கனவில்) அவரிடம் (வானவர்) அனுப்பிவைக்கப்பட்டு (பின்வருமாறு) கூறப்பட்டது: உமது தர்மம் ஏற்கப்பட்டுவிட்டது. விபச்சாரிக்கு நீர் கொடுத்த தர்மம், அவள் விபச்சாரத்திலிருந்து விலகி கற்பைப் பேணக் காரணமாக அமையலாம். பணக்காரனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தால் அவன் படிப்பினை பெற்று, அல்லாஹ் தனக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்யக்கூடும். திருடனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மம் அவன் களவைக் கைவிடக் காரணமாக அமையலாம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :