அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீதிருந்தபடி தர்மம் செய்வது, பிறரிடம் கையேந்தாமல் தன்மானத்துடன் இருப்பது ஆகியவற்றைப் பற்றி உபதேசித்தார்கள். அப்போது "மேலிருக்கும் கை கீழிருக்கும் கையைவிடச் சிறந்ததாகும். மேல் கை என்பது கொடுக்கக்கூடியதும், கீழ் கை என்பது யாசிக்கக்கூடியதும் ஆகும்" என்று குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே "தர்மத்தில் சிறந்தது" அல்லது "நல்ல தர்மம்" ஆகும். மேல் கை, கீழ் கையைவிடச் சிறந்ததாகும். உங்கள் குடும்பத்தாரிலிருந்தே (உங்களது தர்மத்தைத்) தொடங்குங்கள். இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் (தர்மம்) கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகும் நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் நான் கேட்டேன். எனக்குக் கொடுத்தார்கள். பிறகு "இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். யார் இதை(ப் பேராசையின்றி) நல்ல எண்ணத்துடன் பெறுகிறாரோ அவருக்கு அதில் வளம் (பரக்கத்) வழங்கப்படும். யார் மனத்தை அலையவிட்டு(ப் பேராசையுடன்) இதை எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு அதில் வளம் வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார். மேல் கைதான் கீழ்க் கையைவிடச் சிறந்ததாகும்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனே! (மனிதனே!) உன் தேவைபோக எஞ்சியதை நீ தர்மம் செய்வதே உனக்கு நல்லதாகும். அதை (யாருக்கும் கொடுக்காமல்) இறுக்கிவைப்பது உனக்குத் தீமையாகும். தேவையுள்ள அளவு சேமித்துவைத்தால் நீ பழிக்கப்படமாட்டாய். உன் வீட்டாரிலிருந்தே உனது தர்மத்தைத் தொடங்கு. மேல் கைதான் கீழ்க் கையைவிடச் சிறந்ததாகும். இதை அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் ஆமிர் அல்யஹ்ஸபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள், "மக்களே! (வரைமுறையின்றி) நபிமொழிகளை அறிவிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஆனால், உமர் (ரலி) அவர்கள் காலத்தில் இருந்துவந்த நபிமொழிகளைத் தவிர. ஏனெனில், உமர் (ரலி) அவர்கள் வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ்வின் (மார்க்கம்) விஷயத்தில் (பொய்யுரைப்பதிலிருந்து) மக்களைப் பயமுறுத்திவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் எவருக்கு நன்மை நாடுகின்றானோ அவரை மார்க்கத்தில் விளக்கமுள்ளவராக ஆக்குகின்றான். நான் கருவூலக் காவலன் மட்டுமே. ஒருவருக்கு நான் மனப்பூர்வமாகக் கொடுத்தால், அவருக்கு அதில் வளம் வழங்கப்படும். ஒருவர் யாசித்ததை முன்னிட்டு, அல்லது அவரது பேராசையைக் கண்டு அவருக்கு நான் கொடுத்தால், அவர் உண்டாலும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். அத்தியாயம் :
முஆவியா (ரலி) அவர்கள் தமது உரையில் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ் எவருக்கு நன்மை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கமுள்ளவராக ஆக்குகிறான். நான் பங்கிடுபவன் மட்டுமே. அல்லாஹ்தான் கொடுக்கிறான்" என்று சொல்ல நான் கேட்டேன். இதை ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :