அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனுக்குத் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தாலும், (அதைப் போன்று) மற்றொரு நீரோடையும் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான்.அவனது வாயை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) ஒரு நீரோடை நிறைய செல்வம் இருந்தாலும் அதனுடன் அதைப்போன்ற மற்றொரு நீரோடை தனக்கு இருக்க வேண்டுமென்றே அவன் விரும்புவான். அவனது மனத்தை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த வாசகம் குர்ஆனில் உள்ளதா, அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இந்த வாசகம் குர்ஆனில் உள்ளதா என்று எனக்குத் தெரியாது" என்று (மட்டும்) இடம்பெற்றுள்ளது. (இவ்வாறு) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படவில்லை. அத்தியாயம் :
அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் பஸ்ரா (இராக்) நகரத்திலுள்ள குர்ஆன் அறிஞர்களிடம் (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினார்கள். (அவர்களது அழைப்பை ஏற்று) குர்ஆனைக் கற்றறிந்த முன்னூறு பேர் அவர்களிடம் வந்தார்கள். அப்போது அவர்களிடம் அபூமூசா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: பஸ்ராவாசிகளிலேயே நீங்கள்தாம் சிறந்தவர்கள் ஆவீர்கள்; அவர்களிலேயே குர்ஆனை நன்கறிந்தவர்களும் ஆவீர்கள். எனவே, (தொடர்ந்து) குர்ஆனை ஓதிவாருங்கள். காலம் நீண்டுவிட்ட போது உங்களுக்கு முன் வாழ்ந்த (வேதம் அருளப்பெற்ற சமுதாயத்த)வர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டதைப் போன்று உங்களுடைய உள்ளங்களும் இறுகிவிட வேண்டாம். நாங்கள் (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) ஓர் அத்தியாயத்தை ஓதிவந்தோம்; நீளத்திலும் கடுமை(யான எச்சரிக்கை விடுக்கும் தோரணை)யிலும் "பராஅத்" எனப்படும் (9ஆவது) அத்தியாயத்திற்கு நிகராக அதை நாங்கள் கருதினோம். ஆனால், அந்த அத்தியாயத்தை நான் மறக்கச் செய்யப்பட்டுவிட்டேன். ஆயினும், அதில் "ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு ஓடைகள் (நிரம்ப) செல்வம் இருந்தாலும் மூன்றாவது ஓடையை அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன். மேலும், மற்றோர் அத்தியாயத்தையும் நாங்கள் ஓதிவந்தோம். அதை (சப்பஹ, யுசப்பிஹு, சப்பிஹ் என) இறைத்துதியில் தொடங்கும் அத்தியாயங்களில் ஒன்றுக்கு நிகராகவே நாங்கள் கருதினோம். அந்த அத்தியாயத்தையும் நான் மறக்கச்செய்யப்பட்டுவிட்டேன். ஆயினும்,அதில் "நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (அவ்வாறு நீங்கள் செய்யாததைப் பிறருக்குச் சொல்வீர்களாயின்) அது உங்களுக்கு எதிரான சாட்சியாக உங்களுடைய கழுத்துகளின் மீது எழுதப்படும். பின்னர் மறுமை நாளில் அது குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன். (இந்த அத்தியாயங்கள் பின்னர் மாற்றப்பட்டுவிட்டன.) அத்தியாயம் :
ஹதீஸ் 2420 — Sahih Muslim 12:157
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ، نُمَيْرٍ قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ " .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து (சொற்பொழிவு மேடைமீது) நின்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது, "மக்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உங்களுக்காக வெளிப்படுத்தும் இவ்வுலகின் கவர்ச்சிப் பொருட்க(ளான கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர்வகை)களைத் தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன்" என்று கூறினார்கள். அப்போது ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா?" என்று கேட்டார். அதற்கு (பதிலளிக்காமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். பிறகு (அந்த மனிதரிடம்) "என்ன கேட்டீர்கள்?" என்றார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே, நன்மை தீமையை உருவாக்குமா என்று கேட்டேன்" என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நன்மையால் நன்மையே விளையும். ஆனால், இ(ந்தக் கவர்ச்சியான)து ஒரு நன்மையா? வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,) வயிறு புடைக்கத் தின்னவைத்துக் கொன்றுவிடுகின்றன; அல்லது கொல்லும் அளவிற்குச் சென்றுவிடுகின்றன; (அப்போதுதான் துளிர்விட்ட) பசும் புற்களைத் தின்னும் கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை. ஏனெனில்,) அது (பசும் புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது, (அசைபோடுவதற்காகச்) சூரியனை நோக்கி(ப் படுத்து)க்கொள்கிறது. (இதனால் நன்கு சீரணமாகி குழைவு நிலையில்) சாணமிடுகின்றது. அல்லது சிறுநீரை வெளியேற்றுகிறது. பின்னர் (வயிறு காலியானவுடன் மீண்டும் மேய்ந்துவிட்டு வந்து) அசைபோடுகின்றது. பிறகு (வயிறு காலியானவுடன்) மறுபடியும் சென்று மேய்கிறது. (அவ்வாறுதான்) யார் ஒரு செல்வத்தை உரிய முறையில் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு அதில் வளம் (பரகத்) வழங்கப்படும். யார் ஒரு செல்வத்தை முறையற்ற வழிகளில் எடுத்துக்கொள்கிறாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவன் உங்களுக்காக வெளிப்படுத்தும் இவ்வுலகின் கவர்ச்சிப் பொருட்களைத்தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன்" என்று கூறினார்கள். அப்போது மக்கள், "இவ்வுலகின் கவர்ச்சிப் பொருட்கள் எவை, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய) பூமியின் வளங்கள்(தாம் அவை)" என்று பதிலளித்தார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! நன்மை தீமையை உருவாக்குமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நன்மையால் நன்மையே விளையும். நன்மையால் நன்மையே விளையும். நன்மையால் நன்மையே விளையும். வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால் நடைகளை), வயிறு புடைக்கத் தின்ன வைத்துக் கொன்றுவிடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் கொண்டுசென்றுவிடுகின்றன; பசுமையான புல்லைத் தின்னும் கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை. ஏனெனில்,) அது (புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது, சூரியனை நோக்கி(ப் படுத்துக்கொண்டு) அசைபோடுகின்றது. (இதனால் நன்கு சீரணமாகி குழைவு நிலையில்) சிறுநீரையும் வெளியேற்றி சாணமுமிடுகிறது. பின்னர் (வயிறு காலியானவுடன்) மீண்டும் சென்று மேய்கிறது. இந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். யார் அதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகிறாரோ அவருக்கு அது நல்லுதவியாக அமையும். யார் அதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கிறாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்று இருக்கிறார்" என்று கூறினார்கள். அத்தியாயம் :