திக்ர், துஆ, தவ்பா மற்றும் பாவமன்னிப்பு தேடுதல் நூல்
132 ஹதீஸ்கள் · #6805–6936
ஹதீஸ் 6845 — Sahih Muslim #6845
அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: "லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை துணை கிடையாது. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்) என்று யார் பத்து முறை ஓதுகிறாரோ அவர், இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினரில் நால்வரை (அடிமைத்தளையிலிருந்து) விடுதலை செய்தவரைப் போன்றவர் ஆவார். (முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான் கூறுகிறேன்:) அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்களின் இந்த (மவ்கூஃப்) ஹதீஸை எனக்கு அறிவித்த சுலைமான் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதை அறிவித்துள்ளார்கள். அதில் அறிவிப்பாளர் ஷஅபீ (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக இடம்பெற்றுள்ளது: நான் எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த ரபீஉ பின் குஸைம் (ரஹ்) அவர்களிடம், "இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்களிடமிருந்து" என்று பதிலளித்தார்கள். ஆகவே, நான் அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்களிடம் சென்று, "இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இப்னு அபீலைலா (ரஹ்) அவர்களிடமிருந்து" என்று பதிலளித்தார்கள். ஆகவே, நான் இப்னு அபீலைலா (ரஹ்) அவர்களிடம் சென்று, "இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்து (நான் செவியுற்றேன்)" என்று சொன்னார்கள். (ஆகவே, இது அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்களின் சொல்லன்று; நபி (ஸல்) அவர்களின் ஹதீஸாகும்.) அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை; (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை; அளவற்ற அருளாளனுக்குப் பிரியமானவை ஆகும். (அவை:) 1. சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்). 2. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் தூயவன் எனத் துதிக்கிறேன்). இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்குஅறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
தாரிக் பின் அஷ்யம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் இறைவனிடம் பிரார்த்திக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹும்மஃக்ஃபிர்லீ வர்ஹம்னீ வ ஆஃபினீ வர்ஸுக்னீ" (இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்குக் கருணை புரிவாயாக! எனக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக! எனக்கு வாழ்வாதாரத்தை அளிப்பாயாக!) என்று சொல்வீராக" என்றார்கள். இதைக் கூறியபோது, தமது பெருவிரலைத் தவிர மற்ற விரல்களை ஒவ்வொன்றாக மடக்கிக்கொண்டு, "இவை உம்முடைய இம்மை மறுமை அனைத்தையும் உள்ளடக்கிக் கொள்ளக்கூடியவை" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள், "உங்களில் ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாதா?" என்று கேட்டார்கள். அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், "எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை ("சுப்ஹானல்லாஹ்" என்று கூறித்) துதிக்க, அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இம்மையில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அகற்றுகிறான். யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்கிறான். யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மறைக்கிறான். அடியான் தன் சகோதரன் ஒருவனுக்கு உதவி செய்துகொண்டிருக்கும்வரை அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்துகொண்டிருக்கிறான். யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக்கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான். அறச் செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரைக் குலச்சிறப்பு முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவதில்லை.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் அபூஉசாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், சிரமப்படுவோருக்கு உதவி செய்வது தொடர்பான குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :