உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: யார் தொழுகைக்காக முழுமையான முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்து, கடமையான தொழுகைக்காக நடந்துசென்று, மக்களுடன் தொழுகிறாரோ அல்லது கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்கிறாரோ அல்லது பள்ளிவாசலில் தொழுகிறாரோ அவருக்கு அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுகின்றான். இதை உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ, ஒரு ரமளானிலிருந்து மறு ரமளான் ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 551 — Sahih Muslim 2:18
حَدَّثَنِي نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، أَخْبَرَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الصَّلَوَاتُ الْخَمْسُ وَالْجُمُعَةُ إِلَى الْجُمُعَةِ كَفَّارَاتٌ لِمَا بَيْنَهُنَّ " .
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரும்பாவங்களில் சிக்காதவரை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (முறைவைத்து) ஒட்டகங்கள் மேய்த்துவந்தோம். இந்நிலையில் எனது முறை வந்தபோது மாலை நேரத்தில் நான் அவற்றை ஓட்டிக்கொண்டு மேய்ச்சல் நிலத்திற்குச் சென்றேன். (பிறகு நான் திரும்பிவந்தேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள்,ஒரு முஸ்லிம் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து,உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை என்று கூறுவதை நான் கேட்டேன். உடனே நான் என்ன அருமையான வார்த்தை! என்றேன். அப்போது எனக்கு முன்னால் இருந்த ஒருவர் இதற்கு முன்னர் சொன்ன வார்த்தை இதைவிட அருமையானது என்றார். உடனே நான் (அவர் யார் என்று) பார்த்தேன். அங்கே உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: சற்று முன்னர்தான் நீங்கள் இங்கு வந்தீர்கள்; நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நீங்கள் வருவதற்கு முன் பின்வருமாறு) கூறினார்கள்: உங்களில் ஒருவர் முழுமையான முறையில் அங்கத் தூய்மை செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன.அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்துகொள்ளலாம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அங்கத் தூய்மை செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு,வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு என்று கூறுவாராயின் என்று (சற்று வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது. (பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையானவர் வேறெவருமில்லை என்று நான் உறுதிமொழிகிறேன். மேலும். முஹம்மத் (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள் என்றும் நான் உறுதிமொழிகிறேன்.) அத்தியாயம் :
யஹ்யா பின் உமாரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்ததைப் போன்று எங்களுக்கு நீங்கள் அங்கத் தூய்மை செய்து காட்டுங்கள்! என்று கூறப்பட்டது. அப்போது அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள், ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டுவரச் சொல்லி அதிலிருந்து சிறிதளவு நீரை தம்மிரு (முன்) கைகளில் ஊற்றி அவற்றை மூன்று முறை கழுவினார்கள். பிறகு (பாத்திரத்திற்குள்) தமது கையை நுழைத்து ஒரு கையளவு நீர் அள்ளி, வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள். பிறகு (பாத்திரத்திற்குள்) தமது கையை நுழைத்து நீர் எடுத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பின்னர் (பாத்திரத்திற்குள்) தமது கையை நுழைத்து நீர் எடுத்து தம் இரு கைகளையும் முழங்கைகள் வரை இரண்டிரண்டு முறை கழுவினார்கள். பிறகு (பாத்திரத்திற்குள்) தமது கையை நுழைத்தெடுத்து (ஈரக் கையால்) தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்யலா)னார்கள். (அதாவது) தம் இரு கைகளையும் முன்னிருந்து பின்னே கொண்டு சென்றார்கள்; பின்னிருந்து முன்னே கொண்டுவந்தார்கள். பின்னர் இரு கால்களையும் கணுக்கால்வரை கழுவினார்கள். பிறகு இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்துவந்தார்கள் என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு கணுக்கால்வரை எனும் வாசகம் இடம்பெறவில்லை. - மேற்கண்ட ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், (அப்துல்லாஹ் பின் ஸைத்-ரலி) அவர்கள் மூன்று முறை வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள் என்று இடம்பெற்றுள்ளது. ஒரு கையளவு நீரினால் எனும் வாசகம் இடம்பெறவில்லை. மேலும், அந்த அறிவிப்பில் முன்னிருந்து பின்னே கொண்டுசென்றார்கள். பின்னிருந்து முன்னே கொண்டுவந்தார்கள் எனும் வாசகத்திற்குப் பிறகு தம் இரு கைகளையும் முன் தலையில் வைத்து அப்படியே அவற்றைப் பிடரிவரை கொண்டு சென்றார்கள். பிறகு ஆரம்பித்த இடத்திற்கே திரும்பவும் கொண்டுவந்தார்கள். பின்னர் இரு கால்களையும் கழுவினார்கள் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், மூன்று முறை கையால் நீர் அள்ளி வாய் கொப்புளித்தார்கள்; மூக்கிற்கு நீர் செலுத்தினார்கள் என்று காணப்படுகிறது.மேலும், மஸ்ஹு செய்யும்போது ஒரேயொரு முறை முன்னிருந்து பின்னே, பின்னிருந்து முன்னே (ஈரக் கையைக்) கொண்டுசென்றார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது. அறிவிப்பாளர் பஹ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை எனக்கு உஹைப் (ரஹ்) அவர்கள் சொல்லிக்கொடுத்தார்கள். உஹைப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு இந்த ஹதீஸை அம்ர் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் இரண்டு முறை சொல்லிக்கொடுத்தார்கள். அத்தியாயம் :