நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒருவர் தங்கத்தை எடுத்துக்கொண்டு தர்மம் செய்வதற்காக அலைவார். ஆனால், அதைப் பெற்றுக்கொள்ளக்கூடிய எவரையும் அவர் காணமாட்டார். மேலும், (அப்போது போர்கள் மிகுந்து) ஆண்கள் குறைந்து, பெண்கள் அதிகரித்துவிடுவதால் ஓர் ஆணை நாற்பது பெண்கள் பின்தொடர்ந்துவந்து, அவனைச் சார்ந்திருக்கும் நிலை காணப்படும். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துல்லாஹ் பின் பர்ராத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஓர் ஆணை (இந்த நிலையில்) நீங்கள் காண்பீர்கள்" என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2339 — Sahih Muslim #2339
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செல்வம் பெருகிக் கொழிக்காதவரை யுகமுடிவு நாள் நிகழாது. எந்த அளவிற்கு (செல்வம் பெருகும்) எனில், ஒருவர் தமது செல்வத்திற்குரிய ஸகாத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் செல்வார். ஆனால், அவரிடமிருந்து அதைப்பெற்றுக்கொள்ள ஒருவரையும் அவர் காணமாட்டார். மேலும், அரபுமண் மேய்ச்சல் நிலங்களாகவும் (கரை புரண்டோடும்) வாய்க்கால்களாகவும் மாறாதவரை (யுகமுடிவு நாள் நிகழாது). இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காதவரை யுகமுடிவு நாள் ஏற்படாது. எந்த அளவிற்கு (செல்வம் பெருகும்) எனில்,அந்நாளில் பொருளின் உரிமையாளருக்கு, அவரிடமிருந்து தர்மத்தைப் பெற்றுக்கொள்பவர் குறித்த கவலை ஏற்படும். தர்மத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு ஒருவர் அழைக்கப்படுவார். ஆனால், அவரோ "இது எனக்குத் தேவையில்லை" என்று கூறிவிடுவார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பூமி தனது வயிற்றிலுள்ள புதையல்களான தங்கக் கட்டி, வெள்ளிக் கட்டி ஆகியவற்றைத் தூண்களைப் போன்று வாந்தியெடுக்கும். அப்போது கொலை செய்தவன் வந்து, "இதற்காகவே நான் கொலை செய்தேன்" என்று கூறுவான். உறவுகளை அரவணைக்காதவன் வந்து, "இதற்காகவே நான் என் இரத்த உறவுகளைத் துண்டித்தேன்" என்று கூறுவான். திருடன் வந்து, "இதற்காகவே எனது கரம் துண்டிக்கப்பட்டது" என்று கூறுவான். பிறகு அதை (அப்படியே) விட்டுவிடுவார்கள்; அதிலிருந்து எதையும் எடுக்கமாட்டார்கள் (அந்த அளவிற்கு அவர்கள் ஏற்கெனவே வசதியுடனிருப்பார்கள்). இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தூய்மையானதை மட்டுமே ஏற்பான். யார் தூய்மையான சம்பாத்தியத்திலிருந்து தர்மம் செய்கிறாரோ அதை அளவற்ற அருளாள(னான இறைவ)ன் தனது வலக்கரத்தால் வாங்கிக்கொள்கிறான். அது ஒரு பேரீச்சங்கனியாக இருந்தாலும் சரியே! அது அந்த அருளாளனின் கையில் வளர்ச்சி அடைந்து மலையைவிடப் பெரியதாகிவிடுகின்றது. உங்களில் ஒருவர் "தமது குதிரைக் குட்டியை" அல்லது "தமது ஒட்டகக் குட்டியை" வளர்ப்பதைப் போன்று.-இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :