ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த "கம்பளி ஆடை" அல்லது "நீளங்கி" அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் "முளர்"குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே "முளர்" குலத்தைச் சேர்ந்தவர்கள்தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது "மக்களே! உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனை பயந்துகொள்ளுங்கள்" எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும், "அல்ஹஷ்ர்" அத்தியாயத்திலுள்ள "நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்கென்று எதனை அனுப்பியுள்ளது என்பதை கவனத்திற்கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்" எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது "(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக்காசு, துணி, ஒரு "ஸாஉ" கோதுமை, ஒரு "ஸாஉ" பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்" என்று கூறி, "பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்" என்று வலியுறுத்தினார்கள். உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக்காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு "ஸாஉ" கோதுமையிலிருந்தும் ஒரு "ஸாஉ" பேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது;ஏன் தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதையும் நான் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே,யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றிலும் "(ஒரு நாள்) முற்பகல் நேரத்தில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம்"என்றே ஹதீஸ் தொடங்குகிறது. உபைதுல்லாஹ் பின் முஆத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகை தொழுவித்துவிட்டுப் பிறகு உரை நிகழ்த்தினார்கள்" என்று சற்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: தானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, நாங்கள் (சுமைதூக்கி) கூலி வேலை செய்யலானோம். அபூ அகீல் (ஹப்ஹாப்-ரலி) அவர்கள் (கூலி வேலை செய்து) அரை "ஸாஉ" பேரீச்சம் பழம் (கொண்டு வந்து) தர்மம் செய்தார். மற்றொரு மனிதர் அதைவிடச் சிறிது அதிகமாகக் கொண்டுவந்(து தர்மம் செய்)தார். இதைக் கண்ட நயவஞ்சகர்கள், (அரை "ஸாஉ" கொண்டுவந்த) இவரது தர்மமெல்லாம் அல்லாஹ்விற்குத் தேவையில்லை; (அதைவிட அதிகமாகக் கொண்டுவந்த) இந்த மற்றொரு மனிதர் பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகவே (தர்மம்) செய்தார்" என்று (குறை) சொன்னார்கள். அப்போதுதான் "(நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகையவர்கள் என்றால், இறை நம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரி வழங்குவோரின் தானதர்மங்களைப் பற்றியும் குறை பேசுகின்றார்கள். (இறைவழியில் ஈவதற்காகச்) சிரமப்பட்டு சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதவர்களைப் பற்றியும் அவர்கள் நகைக்கின்றார்கள். அல்லாஹ் அவர்களை நகைக்கின்றான். மேலும்,அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு" எனும் (9:79ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் பிஷ்ர் பின் காலித் (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில் "மனமுவந்து வாரி வழங்குவோர்" எனும் சொல்லைக் குறிப்பிடவில்லை. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், சயீத் பின் அர்ரபீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நாங்கள் எங்களுடைய முதுகுகளில் (சுமை)தூக்கி கூலிவேலை செய்யலானோம்" என்று (அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: காலையில் ஒரு பெரிய பாத்திரம் (நிறையப்) பாலும் மாலையில் ஒரு பெரிய பாத்திரம் (நிறையப்) பாலும் தருகின்ற ஓர் ஒட்டகத்தை ஒரு வீட்டாருக்கு இரவலாகத் தரக்கூடிய மனிதர் எவரேனும் (உங்களில்) உண்டா? இதற்குரிய நற்பலன் நிச்சயமாக மிகப் பெரியதாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :