அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது (இறைத்தூதர் ஸாலிஹ் (அலை) அவர்களின் தூதுவத்திற்குச் சான்றாகப் பாறையிலிருந்து வெளிப்பட்ட) ஒட்டகத்தையும் அத(ன் கால் நரம்பி)னைத் துண்டித்துக் கொன்றவனையும் நினைவு கூர்ந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்களில் நற்பேறற்ற ஒருவன் முன் வந்தான்" (91:12) எனும் இறைவசனத்தைக் கூறிவிட்டு, "அபூஸம்ஆவைப் போன்று ஸாலிஹ் (அலை) அவர்களின் (ஸமூத்) சமுதாயத்தில் மதிப்புமிக்கவனும் ஆதிக்கவாதியும் பலசாலியுமான ஒருவன் அந்த ஒட்டகத்(தைக் கொல்வ)துக்காக முன்வந்தான்" என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்க(ளின் உரிமைக)ள் குறித்து அறிவுறுத்தினார்கள்; பிறகு "உங்களில் ஒருவர் தம் மனைவியை (அடிமையை அடிப்பதைப் போன்று) அடிக்க முற்படுகிறார். (ஆனால்,) அவரே அந்நாளின் இறுதியில் (இரவில்) அவளுடன் (தாம்பத்திய உறவுக் காக)படுக்க நேரலாம். (இது முறையா?)" என்று கூறினார்கள். பிறகு (உடலிலிருந்து பிரியும்) நாற்ற வாயு காரணமாக மக்கள் சிரிப்பது குறித்து, "(அப்படிச் சிரிக்க வேண்டாமெனக் குறிப்பிடும் வகையில்) உங்களில் ஒருவர் தாம் செய்யும் ஒரு செயலுக்காக (அதே செயலைப் பிறர் செய்யும்போது) ஏன் சிரிக்கிறார்?" என்று கேட்டு உபதேசித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது. அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அடிமைப் பெண்ணை அடிப்பதைப் போன்று" எனக் காணப்படுகிறது. அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஆண் அடிமையை அடிப்பதைப் போன்று" என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இதோ இந்த பனூ கஅப் குலத்தாரின் தந்தையான "அம்ர் பின் லுஹை பின் கம்ஆ பின் கிந்திஃப்" தனது குடலை இழுத்தபடி நரகத்தில் சென்றுகொண்டிருப்பதை நான் கண்டேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (5:103ஆவது இறைவசனத்திலுள்ள) "பஹீரா" என்பது, (அறியாமைக் கால) சிலைகளுக்காக (அவற்றின் பெயரால்) பால் கறக்கக்கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுவந்த ஒட்டகமாகும்; மக்களில் யாரும் அதன் பாலைக் கறக்கமாட்டார்கள். "சாயிபா" என்பது, (அறியாமைக் காலத்தில் நோய் நிவாரணம் போன்ற தேவைகள் நிறைவேற வேண்டும் என்ற வேண்டுதலில்) சிலைகளுக்காக (நேர்ந்து) சுதந்திரமாகத் திரியவிடப்பட்டு வந்த ஒட்டகமாகும். அதன் மீது எந்தச் சுமையும் ஏற்றப்படாது. அபூஹுரைரா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகப் பின்வருமாறு சொன்னார்கள்: "அம்ர் பின் ஆமிர் அல்குஸாஈ" தமது குடலை இழுத்தபடி நரகத்தில் சென்று கொண்டிருப்பதை நான் கண்டேன். முதன் முதலாக "சாயிபா" (ஒட்டகத்தைச் சிலைகளுக்காக நேர்ச்சை செய்து) திரியவிட்டவர் அவர்தான். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ நீண்டநாள் வாழ்ந்தால் ஒரு சமுதாயத்தைப் பார்க்கக்கூடும். அவர்களின் கைகளில் மாட்டின் வாலைப்போன்று (நீளமான சாட்டைகள்) இருக்கும். அவர்கள் அல்லாஹ்வின் கோபத்துடனேயே காலையில் புறப்படுவார்கள். அல்லாஹ்வின் கடுங்கோபத்துடனேயே மாலையில் திரும்புவார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது: (என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் நீண்ட நாள் வாழ்ந்தால் ஒரு சமுதாயத்தைப் பார்க்கக்கூடும். அவர்கள் அல்லாஹ்வின் கடுங்கோபத்துடனேயே காலையில் புறப்படுவார்கள். அவனுடைய சாபத்துடனேயே மாலையில் திரும்புவார்கள். அவர்களின் கைகளில் மாட்டின் வாலைப் போன்றவை (நீளமான சாட்டைகள்) இருக்கும். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :