இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று (எங்களுக்கு) அறிவுரை வழங்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்: மக்களே! (மறுமை நாளில்) நீங்கள் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக அல்லாஹ்விடம் ஒன்றுதிரட்டிக்கொண்டு வரப்படுவீர்கள். அல்லாஹ் கூறுகின்றான்: முதன் முதலாக அவர்களை நாம் படைத்ததைப் போன்றே (அந்நாளில்) அவர்களை நாம் மீண்டும் படைப்போம். இது நம்மீது (பொறுப்பாகிவிட்ட) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயமாகச் செய்வோம் (21:104). கவனத்தில் வையுங்கள்! மறுமை நாளில் படைப்பினங்களிலேயே முதன் முதலாக ஆடையணிவிக்கப்படுபவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார்கள். கவனத்தில் வையுங்கள்! என் சமுதாயத்தாரில் சிலர் இடப் பக்கமாக (நரகம் நோக்கி)க் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான் "என் இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்" என்பேன். அப்போது "(இவர்கள்) உம(து இறப்பு)க்குப்பின் (மார்க்கத்தில்) என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்பது உமக்குத் தெரியாது" என்று கூறப்படும். அப்போது நான், நல்லடியார் (நபி ஈசா (அலை) அவர்கள்) சொன்னதைப் போன்று, "(இறைவா!)" நான் அவர்களுடன் இருந்தவரை அவர்களைக் கண்காணிப்பவனாகவே இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக்கொண்டபோது, நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்தையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உன் அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்" (5:117,118) என்று சொல்வேன். அப்போது என்னிடம், "நீர் இவர்களைவிட்டுப் பிரிந்ததிலிருந்து இவர்கள் தம் குதிகால் (சுவடு)களின் வழியே மார்க்கத்திலிருந்து வெளியேறிக்கொண்டேயிருந்தார்கள்" என்று கூறப்படும். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் வகீஉ மற்றும் முஆத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பிலேயே "அப்போது, இவர்கள் உம(து இறப்பு)க்குப் பின் (மார்க்கத்தில்) என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்பது உமக்குத் தெரியாது" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாள் வருவதற்குச் சற்றுமுன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மக்கள் மூன்று பிரிவினராக ஒன்றுதிரட்டப்படுவார்கள். (அவற்றில் முதல் பிரிவினர்) அச்சத்துடனும் ஆர்வத்துடனும் செல்வார்கள். (இரண்டாவது பிரிவினர் வாகனப் பற்றாக்குறையினால் தாமதித்துப் பின்னர்) ஒரே ஒட்டகத்தின் மீது இரண்டு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது மூன்று பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது நான்கு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது பத்துப் பேராகச் செல்வார்கள். அவர்களில் எஞ்சியவர்(களே மூன்றாவது பிரிவினராவர். அவர்)களைப் பூமியில் ஏற்படும் (ஒரு பெரும்) "தீ" ஒன்றுதிரட்டும். அவர்கள் இரவில் ஓய்வெடுக்கும்போதும், மதிய ஓய்வெடுக்கும் போதும், காலை நேரத்தை அடையும்போதும், மாலை நேரத்தை அடையும் போதும் (இப்படி எல்லா நேரங்களிலும்) அந்தத் தீ அவர்களுடனேயே இருக்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், "அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்" (83:6) எனும் இறைவசனத்தை ஓதிவிட்டு, "(அன்று) தம் காதுகளில் பாதிவரை தேங்கி நிற்கும் தமது வியர்வையில் அவர்களில் ஒருவர் நின்றுகொண்டிருப்பார்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மக்கள் நிற்பார்கள்" என்றே வசனத்தொடர் ஆரம்பமாகிறது. "அந்நாளில்" என்று அவர்கள் அறிவிக்க வில்லை. - மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் எட்டு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் மூசா பின் உக்பா மற்றும் ஸாலிஹ் பின் கைசான் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "எந்த அளவுக்கு (அவர்கள் நிற்பார்கள்) என்றால், தம் காதுகளில் பாதிவரை தேங்கி நிற்கும் தமது வியர்வையில் அவர்களில் ஒருவர் மறைந்துபோய்விடுவார்" என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் (மனிதர்களின் தலைக்கருகில் நெருங்கிவரும் சூரியனால்) ஏற்படும் வியர்வை, தரையினுள் இரு கை நீட்டளவில் எழுபது முழம்வரை சென்று, (தரைக்குமேல்) "அவர்களின் வாயை" அல்லது "அவர்களது காதை" எட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ("அவர்களின் வாயை" அல்லது "அவர்களின் காதை" ஆகிய) இவற்றில் அறிவிப்பாளர் அபுல் ஃகைஸ் (ரஹ்) அவர்கள் எதைக் கூறினார்கள் என்பதில் ஸவ்ர் (ரஹ்) அவர்களே ஐயப்பாட்டை வெளியிட்டுள்ளார்கள். அத்தியாயம் :
மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்கள் கூறியதாவது: "மறுமை நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு அருகில் கொண்டுவரப்படும். எந்த அளவுக்கென்றால், அவர்களுக்கும் அதற்கும் இடையில் ஒரு மைல் தொலைதூரமே இருக்கும். அப்போது மக்கள் தம் செயல்களுக்கேற்ப வியர்வையில் மூழ்குவார்கள். சிலரது வியர்வை அவர்களின் கணுக்கால்கள்வரையிலும், சிலரது வியர்வை முழங்கால்கள் வரையிலும், சிலரது வியர்வை இடுப்பு வரையிலும், சிலரது வியர்வை வாய் வரையிலும் எட்டிவிடும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன். இதைக் கூறியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் வாயை நோக்கி சைகை செய்தார்கள். இதன் அறிவிப்பாளரான சுலைம் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! "மைல்" என்று பூமியின் தொலைதூர அளவைக் குறிப்பிட்டார்களா? அல்லது கண்ணில் தீட்டப் பயன்படும் அஞ்சனக்கோலின் அளவைக் குறிப்பிட்டார்களா என்பது எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்கள். அத்தியாயம் :
இயாள் பின் ஹிமார் அல்முஜாஷிஈ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உரையாற்றியபோது பின்வருமாறு கூறினார்கள்: அறிந்துகொள்ளுங்கள்: என் இறைவன் இன்றைய தினம் எனக்குக் கற்றுத் தந்தவற்றிலிருந்து நீங்கள் அறியாதவற்றை உங்களுக்குக் கற்றுத்தருமாறு எனக்குக் கட்டளையிட்டான். (இறைவன் கூறினான்:) நான் ஓர் அடியானுக்கு வெகுமதியாக வழங்கியுள்ள அனைத்துப் பொருட்களும் அவனுக்கு அனுமதிக்கப்பட்டவையே ஆகும். நான் என் அடியார்கள் அனைவரையும் (இயற்கையிலேயே) உண்மை வழி நின்றவர்களாகவே படைத்தேன். (ஆயினும்) அவர்களிடம் ஷைத்தான் வந்து அவர்களது இயற்கை நெறியிலிருந்து அவர்களைப் பிறழச்செய்துவிட்டான். நான் அவர்களுக்கு அனுமதித்துள்ளவற்றைத் தடைசெய்யப் பட்டவையாக ஆக்கிவிட்டான்; நான் எனக்கு இணை கற்பிப்பதற்கு எந்தச் சான்றையும் இறக்காத நிலையில் எனக்கு இணை கற்பிக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டான். அல்லாஹ் பூமியில் வசித்துக்கொண்டிருப்போரைப் பார்த்து, அவர்களில் அரபியர், அரபியரல்லாதோர் அனைவர்மீதும் (அவர்கள் இணை கற்பித்துக்கொண்டிருந்ததால்) கடுங்கோபம் கொண்டான்; வேதக்காரர்களில் (இணைவைக்காமல்) எஞ்சியிருந்தோரைத் தவிர! மேலும் (என்னிடம்) இறைவன், நான் உம்மைச் சோதிப்பதற்கும் உம்மைக் கொண்டு (பிறரைச்) சோதிப்பதற்குமே உம்மை நான் அனுப்பினேன். (வெள்ள)நீரில் அழிந்துபோய்விடாத வேதத்தையும் உமக்கு நான் அருளினேன். அதை உறங்கும்போதும் விழித்திருக்கும் நிலையிலும் நீர் ஓதுகின்றீர்" என்று கூறினான். மேலும், என் இறைவன் குறைஷியரை எரித்துவிடுமாறு எனக்குக் கட்டளையிட்டான். அப்போது நான் "என் இறைவா! அவர்கள் என் தலையை நொறுக்கி ஒரு ரொட்டியைப் போன்று ஆக்கிவிடுவார்களே?" என்று கூறினேன். இறைவன், "உம்மை (உமது பிறந்தகத்திலிருந்து) அவர்கள் வெளியேற்றியதைப் போன்று அவர்களை நீர் வெளியேற்றிவிடும். அவர்களிடம் அறப்போர் புரியும். உமக்கு நாம் உதவுவோம். (நல்வழியில்) நீர் செலவிடும். உமக்கு நாம் செலவிடுவோம். (அவர்களை நோக்கி) ஒரு படையை அனுப்பும். அதைப் போன்று ஐந்து மடங்கு படையை நாம் அனுப்புவோம். உமக்குக் கீழ்ப்படிபவர்களுடன் சேர்ந்து உமக்கு மாறுசெய்வோருடன் நீர் போரிடும்" என்று கூறினான். மேலும், சொர்க்கவாசிகள் மூவர் ஆவர். ஒருவர், நீதிநெறி வழுவாமல் வாரி வழங்கி நல்லறம் புரிய வாய்ப்பளிக்கப்படும் அரசர். இரண்டாமவர், உறவினர்களிடமும் மற்ற முஸ்லிம்களிடமும் அன்புடனும் இரக்கத்துடனும் நடந்துகொள்பவர். மூன்றாமவர், குழந்தை குட்டிகள் இருந்தும் (தவறான வழியில் பொருளீட்டிவிடாமல்) தன் மானத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்கின்ற மனிதர். நரகவாசிகள் ஐவர் ஆவர். முதலாமவர், புத்தி சாதுர்யம் இல்லாத பலவீனர். அவர் (சுயகாலில் நிற்காமல்) உங்களையே பின்தொடர்வார். தமக்கென குடும்பத்தையோ செல்வத்தையோ தேடிக்கொள்ளமாட்டார். இரண்டாமவர்,எந்த ஆசையையும் விட்டுவைக்காத மோசடிக்காரர். அற்பமானதே ஆனாலும் மோசடி செய்(தாவது அதை அடை)யாமல் விடமாட்டார். மூன்றாமவர், காலையிலும் மாலையிலும் உம்முடைய வீட்டார் விஷயத்திலும் உமது செல்வம் விஷயத்திலும் உமக்குத் துரோகமிழைப்பவர். (நரகவாசிகளின் குணங்களில் நான்காவதாக) கருமித்தனத்தை அல்லது பொய்யைக் கூறினார்கள். ஐந்தாமவன், "அதிகமாக அருவருப்பாகப் பேசுகின்ற ஒழுங்கீனன்" என்று குறிப்பிட்டார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூஃகஸ்ஸான் அல்மிஸ்மஈ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நல்வழியில் செலவிடுவீராக! உமக்கு நாம் செலவிடுவோம்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. - மேற்கண்ட ஹதீஸ், இயாள் பின் ஹிமார் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "நான் ஓர் அடியானுக்கு வெகுமதியாக வழங்கியுள்ள அனைத்துப் பொருட்களுமே (அவனுக்கு) அனுமதிக்கப்பட்டவையாகும்" எனும் குறிப்பு இல்லை. - மேற்கண்ட ஹதீஸ் இயாள் பின் ஹிமார் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உரையாற்றினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. அத்தியாயம் :