அபூஹஸ்ஸான் (முஸ்லிம் பின் அப்தில்லாஹ் - ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், "என்னுடைய ஆண் குழந்தைகள் இருவர் இறந்துவிட்டனர். நாங்கள் இழந்துவிடும் குழந்தைகள் தொடர்பாக எங்கள் உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன ஹதீஸ் ஒன்றை எனக்கு நீங்கள் அறிவிக்கக் கூடாதா?" என்று கேட்டேன். அபூஹுரைரா (ரலி) அவர்கள் "ஆம்" என்று கூறிவிட்டு, "குழந்தைகள், சொர்க்கத்தின் நுண்ணுயிர்கள் ஆவர்.அக்குழந்தைகளில் ஒன்று தனது தந்தையை, அல்லது பெற்றோரைச் சந்திக்கும்போது அவரது ஆடையை, அல்லது அவரது கையைப் பிடித்துக்கொள்ளும். -(அபூஹஸ்ஸானே!) நான் உங்களுடைய இந்த ஆடையின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் போன்று- பிறகு தன்னையும் தன் பெற்றோரையும் அல்லாஹ் சொர்க்கத்திற்குள் நுழைவிக்கும்வரை விடாது; அல்லது விலகாது" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சுவைத் பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நாங்கள் இழந்துவிடும் குழந்தைகள் தொடர்பாக எங்கள் உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஏதேனும் செவியுற்றீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் "ஆம் என்றார்கள்" என இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி தன் குழந்தையுடன் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (உடல் நலமில்லாத) இந்தக் குழந்தைக்காகப் பிரார்த்தியுங்கள். (இதற்குமுன்) நான் மூன்று குழந்தைகளை நல்லடக்கம் செய்துவிட்டேன்" என்று கூறினார். "மூன்று குழந்தைகளை நல்லடக்கம் செய்துவிட்டாயா?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்பெண், "ஆம்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "நரக நெருப்பிலிருந்து (உன்னைக் காக்க) நீ பலமான வேலி அமைத்துக்கொண்டுவிட்டாய்" என்று சொன்னார்கள். மேற்கண்ட ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி தன்னுடைய ஆண் குழந்தையுடன் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இவன் உடல் நலிவுற்றுள்ளான். இவனுக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என நான் அஞ்சுகிறேன். (இதற்கு முன்) நான் மூன்று குழந்தைகளை நல்லடக்கம் செய்துவிட்டேன்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "நரக நெருப்பிலிருந்து (உன்னைக் காக்க) நீ பலமான வேலி அமைத்துக்கொண்டுவிட்டாய்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் ஓர் அடியாரை நேசிக்கும்போது, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, "நான் இன்ன மனிதரை நேசிக்கிறேன். நீரும் நேசிப்பீராக" என்று கூறுகின்றான். ஆகவே, ஜிப்ரீல் (அலை) அவர்களும் அவரை நேசிப்பார். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானத்தில், "அல்லாஹ் இன்ன மனிதரை நேசிக்கிறான். ஆகவே, நீங்களும் அவரை நேசியுங்கள்" என்று அறிவிப்பார். அவ்வாறே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு பூமியில் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படும். அவ்வாறே, அல்லாஹ் ஓர் அடியார்மீது கோபம் கொள்ளும்போது, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, "நான் இன்ன மனிதர்மீது கோபம் கொண்டுள்ளேன். நீரும் அவர்மீது கோபம் கொள்வீராக" என்று கூறுகின்றான். ஆகவே, ஜிப்ரீல் (அலை) அவர்களும் அவர்மீது கோபம் கொள்கிறார். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள்,விண்ணகத்தாரிடையே, "அல்லாஹ் இன்ன மனிதர்மீது கோபம் கொண்டுள்ளான். ஆகவே, நீங்களும் அவர்மீது கோபம் கொள்ளுங்கள்" என்று அறிவிப்பார். அவ்வாறே விண்ணகத்தாரும் அவர்மீது கோபம் கொள்வார்கள். பிறகு பூமியில் அவர்மீது கோபம் ஏற்படுத்தப்படுகிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் கோபத்தைப் பற்றிய குறிப்பு இல்லை. (நேசத்தைப் பற்றிய குறிப்பு மட்டுமே இடம்பெற்றுள்ளது.) அத்தியாயம் :