அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியரிடையே போர்ச்செல்வங்களைப் பங்கிட்டார்கள். அப்போது அன்சாரிகள் (சிலர்), "இந்த விஷயம் எங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. எதிரிகளின் இரத்தம் எங்களின் வாட்களில் சொட்டிக்கொண்டிருக்க, எங்களுக்குச் சேரவேண்டிய போர்ச்செல்வங்கள் (புதிய முஸ்லிம்களான) குறைஷியரிடையே திருப்பிவிடப்படுகின்றன" என்று பேசிக்கொண்டனர். இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அன்சாரிகளை (ஒரு கூடாரத்தினுள்) ஒன்று திரட்டி, "உங்களைக் குறித்து எனக்கு எட்டிய செய்தி என்ன? (உண்மைதானா?)" என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள் "உங்களுக்கு எட்டியது உண்மைதான்" என்று பதிலளித்தனர். -அன்சாரிகள் பொய் பேசாதவர்களாய் இருந்தனர்- அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்கள் உலகச்செல்வங்களைப் பெற்றுக்கொண்டு தம் வீடுகளுக்குத் திரும்பிச்செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரைப் பெற்றுக்கொண்டு உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச்செல்வதை விரும்பவில்லையா? மக்கள் ஒரு கணவாயிலோ பள்ளத்தாக்கிலோ நடந்து செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயிலோ பள்ளத்தாக்கிலோ நடந்துசென்றால், நான் அன்சாரிகளின் கணவாயிலேயே அல்லது அன்சாரிகளின் பள்ளத்தாக்கிலேயே செல்வேன்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுனைன் போரின்போது (எதிரிகளான) "ஹவாஸின்" குலத்தாரும் "கத்ஃபான்" குலத்தாரும் தம் குழந்தை குட்டிகளுடனும் கால்நடைகளுடனும் (இஸ்லாமியப் படையினரை) நோக்கி வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களுடன் (அறப்) போராளிகள் பத்தாயிரம் பேரும் (மக்கா வெற்றியின்போது) மன்னிப்பு அளிக்கப்பட்டவர்களும் இருந்தனர். அவர்கள் (அனைவரும் எதிரிகளின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல்) நபி (ஸல்) அவர்களைத் தனியாக விட்டுவிட்டுப் பின்வாங்கிச் சென்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் இருமுறை அழைப்பு விடுத்தார்கள்; அவ்விரண்டுக்குமிடையே வேறெதுவும் பேசாமல் (தொடர்ச்சியாக) அழைத்தார்கள். தமது வலப்பக்கம் திரும்பி "அன்சாரிகளே!" என்று அழைக்க, அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இதோ வந்துவிட்டோம். நற்செய்தி பெறுங்கள்; நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்" என்று கூறினர். பிறகு தம் இடப்பக்கம் திரும்பி, "அன்சாரிகளே!" என்று அழைத்தார்கள். அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! இதோ வந்துவிட்டோம். நற்செய்தி பெறுங்கள்; நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்" என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் வெள்ளைக் கோவேறு கழுதையின் மீது இருந்தார்கள். பிறகு அதிலிருந்து இறங்கி, "நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவேன்" என்று சொன்னார்கள். பிறகு (அந்தப் போரில் ஹவாஸின் மற்றும் ஃகத்ஃபான் குலத்தைச் சேர்ந்த) இணைவைப்பாளர்கள் தோல்வி கண்டதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகமான போர்ச்செல்வங்களைப் பெற்றார்கள்; அவற்றை முஹாஜிர்களிடையேயும் (மக்கா வெற்றியின்போது) மன்னிப்பு அளிக்கப் பட்டவர்களிடையேயும் பங்கிட்டார்கள். அன்சாரிகளுக்கு எதையும் கொடுக்கவில்லை. ஆகவே, அன்சாரிகள் (சிலர்), "கடுமையான பிரச்சினை என்றால் நாங்கள் அழைக்கப்படுகிறோம். போர்ச் செல்வங்களோ மற்றவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன" என்று (மனக்குறையுடன்) பேசிக்கொண்டனர். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளை ஒரு கூடாரத்தில் ஒன்று கூட்டி, "அன்சாரிகளே! உங்களைக் குறித்து எனக்கு எட்டிய செய்தி என்ன? (உண்மைதானா?)" என்று கேட்டார்கள். அவர்கள் (அதை ஒப்புக்கொள்வதைப் போன்று) மௌனமாயிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அன்சாரிகளே! மக்கள் உலகச் செல்வத்தைத் தங்களுடன் கொண்டுசெல்ல, நீங்கள் (இறைத்தூதர்) முஹம்மதை உடைமையாக்கிக் கொண்டு உங்கள் இல்லங்களுக்குச் செல்வதை நீங்கள் விரும்பவில்லையா?" என்று கேட்டார்கள். அன்சாரிகள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (அதையே) விரும்புகிறோம்" என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "மக்களெல்லாம் ஒரு பள்ளத்தாக்கில் செல்ல, அன்சாரிகள் மட்டும் ஒரு கணவாயில் செல்வார்களாயின், நான் அன்சாரிகள் செல்லும் கணவாயையே தேர்ந்தெடுப்பேன்" என்று சொன்னார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் (இதைத் தமக்கு அறிவித்த தம் பாட்டனாரான அனஸ் (ரலி) அவர்களிடம்), "அபூஹம்ஸா! (இந்நிகழ்ச்சி நடைபெற்றபோது) தாங்கள் அங்கு இருந்தீர்களா?" என்று கேட்க, அனஸ் (ரலி) அவர்கள், "நான் நபி (ஸல்) அவர்களைவிட்டு எங்கே போவேன்?" என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மக்காவை வெற்றிகொண்டோம். பின்னர் ஹுனைனை நோக்கிப் போருக்காகப் புறப்பட்டோம். அப்போது (எதிரிகளான) இணைவைப்பாளர்கள் நான் பார்த்தவற்றிலேயே மிக அழகான முறையில் அணிவகுத்து வந்தனர். முதலில் குதிரைப் படைகள் நிறுத்தப்பட்டன. பிறகு காலாட்படையினரும் அதற்குப் பின் பெண்கள் அணியும் நிறுத்தப்பட்டது. பிறகு ஆடுகளும் பின்னர் இதர கால்நடைகளும் நிறுத்தப்பட்டன. அப்போது (எங்கள் அணியில்) அதிகமான வீரர்கள் இருந்தனர்; நாங்கள் ஆறாயிரம் பேர் இருந்தோம். எங்கள் சாலையோரக் குதிரைப்படைக்கு காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் (தளபதியாக) இருந்தார்கள். எங்கள் குதிரைப்படை எங்கள் முதுகுக்குப் பின்னால் திரும்பலாயிற்று. சிறிது நேரமே கழிந்திருக்கும்; அதற்குள் அவை எங்கள் (களத்திலிருந்து) விலகிச் செல்லத்தொடங்கின. எங்கள் (அணியிலிருந்த) கிராமவாசிகளும் நாங்கள் அறிந்த வேறு சிலரும் வெருண்டோடலாயினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "முஹாஜிர்களே, முஹாஜிர்களே" என்று அழைத்தார்கள். பின்னர் "அன்சாரிகளே, அன்சாரிகளே" என்று அழைத்தார்கள். -இது என் தந்தையின் சகோதரர்கள் (அல்லது என் கூட்டத்தார்) அறிவித்த தகவலாகும்- அப்போது நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! தங்கள் அழைப்புக்குக் கீழ்படிந்தோம்" என்று கூறி(முன்னே வந்து எதிரிகளுடன் போரிடலா)னோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முன்னேறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் எதிரிகளை நோக்கி முன்னேறிச் சென்றபோது, அல்லாஹ் எங்கள் எதிரிகளை தோல்வியுறச்செய்தான். (எதிரிகள் விட்டுச் சென்ற) அந்த(ப் போர்)ச் செல்வங்களை நாங்கள் கைப்பற்றினோம். பின்னர் தாயிஃப் (நகர மக்களை) நோக்கி நடந்து அவர்களை நாற்பது இரவுகள் முற்றுகையிட்டோம். பிறகு மக்காவிற்குத் திரும்பி வந்து (அங்கு) தங்கினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களில்) ஒருவருக்கு நூறு ஒட்டகங்கள் (போர்ப் பரிசாக) வழங்கலானார்கள். மற்ற விவரங்கள் முந்தைய ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :